டெல்லிக்கு நாளையே பறக்கும் எடப்பாடி.. மோடி, அமித் ஷாவை நேரில் சந்திக்க முடிவு? 3 முக்கிய காரணங்கள்?
சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம் மேற்கொள்கிறார். இடைக்கால பொதுச்செயலாளரான பின் முதல்முறையாக டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்.
டெல்லியில் பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை எடப்பாடி சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுக அலுவலகத்திற்கு செல்கிறார்.
அதிமுக அலுவலகத்திற்கான சீல் நீக்கப்பட்ட நிலையில், இன்று எடப்பாடி அதிமுக அலுவலகம் செல்கிறார். இன்று சில ஆலோசனைகளை செய்துவிட்டு நாளை எடப்பாடி டெல்லி செல்கிறார். இதற்கு 3 காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

காரணம் 1
இந்த பயணம் மரியாதை நிமித்தமான பயணம்.. இதில் அரசியல் இல்லை என்று ஒரு தரப்பினர் மூலம் கூறப்படுகிறது. அதன்படி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார நிகழ்ச்சி டெல்லியில் நடக்கிறது. இதற்காக பல மாநில தலைவர்கள் வருகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்தும் பல முக்கிய தலைவர்கள் செல்கிறார்கள். அதன் பொருட்டே எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார். முதல்வர் ஸ்டாலின் ஓய்வில் இருக்க வேண்டும் என்பதாலும், ஓ பன்னீர்செல்வம் இன்றுதான் கொரோனா முடிந்து டிஸ்சார்ஜ் ஆகிறார் என்பதாலும் அவர்கள் இருவரும் செல்ல வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.

காரணம் 2
இந்த சந்திப்பில் மோடி - அமித் ஷா ஆகியோரை எடப்பாடி பழனிசாமி சந்திக்க போவதாக வெளியாகும் செய்திகள்தான் இன்னும் பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சத்தில் இருக்கும் நிலையில் ஓ பன்னீர்செல்வம் மட்டுமே டெல்லி வர சென்று பாஜகவின் உதவியை நாடினார். ஆனால் எடப்பாடி பழனிசாமி பாஜக உதவியை பெரிதாக நாடவில்லை. இவர் டெல்லிக்கு செல்லவில்லை. தமிழ்நாடு பாஜகவின் தலையீட்டை இவர் தடுத்ததாகவும் கூறப்பட்டது.

டெல்லி பயணம்
இந்த நிலையில்தான் எடப்பாடி முதல்முறையாக டெல்லி செல்கிறார். பாஜக - அதிமுக உறவு பற்றி இவர் பேச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட அரிசி உள்ளிட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டது தொடர்பாக நேற்று எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து இருந்தார். மத்திய அரசை இவர் விமர்சனம் செய்து இருந்த நிலையில்தான் இப்போது டெல்லிக்கு செல்கிறார். இதனால் கண்டிப்பாக இரண்டு தரப்பு உறவு பற்றி இவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காரணம் 3
இன்னொரு பக்கம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு அமைப்புகள் அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறி வைத்து வருகிறது. உதாரணமாக வருமானவரித்துறை மூலம் காமராஜ், எஸ்பி வேலுமணியின் நண்பர் சந்திரசேகர் ஆகியோர் குறி வைக்கப்பட்டு உள்ளனர். இன்னொரு பக்கம் விஜயபாஸ்கர் மீது வழக்கு தொடுக்க சிபிஐ அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அமைப்புகள் இப்படி அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறி வைப்பது குறித்து டெல்லியில் முக்கிய தலைகளுடன் எடப்பாடி ஆலோசனை செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications