"பார்த்துக்கலாம்".. ஜூலை 11 என்ன நடந்தாலும்! ஓபிஎஸ் போடும் "மெகா" கணக்கு.. எடப்பாடிக்கு சிக்கல்தான்
சென்னை: அதிமுக பொதுக்குழு கூடுவதற்கு இன்னும் சரியாக 1 வாரமே இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுக்குழுவை கூட்ட தீவிரமாக தயாராகி வரும் நிலையில், பொதுக்குழு கண்டிப்பாக நடக்காது என்ற நம்பிக்கையில் இருக்கிறது ஓ பன்னீர்செல்வம் தரப்பு.
நம்மிடம் பேசிய ஓ பன்னீர்செல்வம் ஆதரவு நிர்வாகிகளோ.. என்ன வேண்டுமானாலும் பண்ணட்டும்.. எடப்பாடி தோரணம் கட்டட்டும். டென்ட் போடட்டும். விருந்துக்கு டெண்டர் கொடுக்கட்டும்.. ஆனால் பொதுக்குழு நடக்காது, என்கிறார்கள் நம்பிக்கையாக!
என்னங்க இப்படி சொல்றீங்க என்று கேட்டால்.. ஓபிஎஸ் தரப்போ தங்களிடம் சட்ட ரீதியாக பல சாதகமான அம்சங்கள் உள்ளது என்கிறார்கள். அவை என்னென்ன அம்சங்கள்?

கோர்ட் தீர்ப்பை நம்பி
கண்டிப்பாக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறியுள்ளது. ஆனால் இந்த திட்டமே இரண்டு வழக்குகளை நம்பித்தான் உள்ளது. ஒன்று பொதுக்குழுவிற்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர் சண்முகம் தொடுத்துள்ள வழக்கில் எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வர வேண்டும். அடுத்ததாக ஓ பன்னீர்செல்வம் ஒப்புதல் இல்லாமலே பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் சாதமாக தீர்ப்பு வர வேண்டும்.

இடைக்கால தடை போடாமல் நிபந்தனை
இதில் ஒன்று சாதகமாக தீர்ப்பு வர வேண்டும். இல்லையென்றால் பொதுக்குழுவை நடத்த மற்றும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற தடை விதிக்காமல் நிபந்தனை விதிக்க வேண்டும். அதாவது பொதுக்குழு முடிவுகள் நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டவை என்ற நிபந்தனையுடன் பொதுக்குழு கூட அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கப்படலாம். இதில் ஏதாவது ஒரு உத்தரவு வந்தால் மட்டுமே எடப்பாடி பொதுச்செயலாளர் ஆக முடியும்.

கோர்ட்டில் பார்த்துக்கலாம்
ஆனால் ஓ பன்னீர்செல்வம் தரப்போ... கண்டிப்பாக கோர்ட்டில் நாங்கள்தான் வெல்வோம் என்கிறார்கள். இதற்கு அவர்கள் சில அடிப்படை விதிகளை காரணம் காட்டுகிறார்கள். தற்போது பொதுக்குழு அழைப்பிதழ் தலைமை கழகம் சார்பில் சென்றுள்ளது. தலைமை கழகம் சார்பில் பொதுக்குழுவை கூட்டவே முடியாது. ஏனென்றால் ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட வேண்டும். இங்கேயே எடப்பாடி தரப்பு சட்ட ரீதியாக தவறு செய்துள்ளது.

நம்பிக்கை
ஒருவேளை ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிட்டாலும் சட்டப்படி பொதுக்குழுவை அவைத்தலைவர் - பொருளாளர் மட்டுமே கூட்ட முடியும். அவை தலைவர் நியமனத்திற்கு எதிராகவே வழக்கு உள்ள நிலையில் பொருளாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும். இந்த நிலையில் தற்போது அழைப்பிதழே தலைமைக்குழு பெயரில் சென்று இருப்பதை வைத்து தங்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும் என்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.

தலைமை கழகம் அழைக்க முடியாது
அதோடு பொதுக்குழு கூடுவதே விதி மீறல் என்பதால்.. அதில் எடுக்கும் முடிவுகளும் தவறானது ஆகிவிடும். அதாவது பொதுக்குழுவில் என்ன முடிவு எடுத்தாலும் அந்த முடிவு செல்லாது. இதனால் ஜூலை 11ம் தேதி ஏதாவது நடந்து, பொதுக்குழுவில் எடப்பாடி பொதுச்செயலாளர் ஆனாலும் அதை நீக்க முடியும் என்ற நம்பிக்கையில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு இருக்கிறதாம். பொதுக்குழு நிர்வாகிகள் உங்கள் பக்கம் இருக்கலாம், ஆனால் சட்டம் எங்கள் பக்கம் இருக்கிறது என்ற நம்பிக்கையில் ஓபிஎஸ் டீம் இருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications