Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

8 கோடி மக்களின் நம்பிக்கையை பெற்ற சட்டமன்றம்! ஆளுநர் ஜனநாயக மரபுகளை மீறுவது ஏன்? வேல்முருகன் காட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் உரையைப் படிக்காமல் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர், சட்டமன்ற ஜனநாயக மரபுகளை மீறுவது, ஏன்? சட்டப்பேரவை உரையை வாசிக்காமல் வெளியேறியது ஏன்? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," எட்டு கோடி மக்களின் பேராதரவும் நம்பிக்கையும் பெற்ற, மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை என்பது, வெறும் ஒரு நிர்வாக மன்றம் அல்ல. அது தமிழக மக்களின் ஜனநாயகக் குரல்.

சட்டப்பேரவை என்னும் உயரிய அமைப்பில், இந்த ஆண்டின் தொடக்கக் கூட்டத்தில் இன்றும், தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாகவும், ஆளுநர் அவர்கள் சட்டப்பேரவை உரையை வாசிக்காமல் வெளியேறியிருப்பது, சட்டப்பேரவையின் மரபுகளையும் மாண்புகளையும் திட்டமிட்டு மீறிய செயல் என்பதோடு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையே அவமதிக்கும் செயலாகும்.

Velmurugan RN Ravi Tamil Nadu Assembly

ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சை

சட்டப்பேரவை உரை என்பது ஆளுநரின் தனிப்பட்ட கருத்தல்ல. அது தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கைகள், திட்டங்கள், நோக்கங்களை மக்களின் முன் வாசிக்க வேண்டிய அரசியலமைப்புச் சார்ந்தக் கடமை. அந்தக் கடமையை மீண்டும் மீண்டும் புறக்கணிப்பது, ஜனநாயகத்தின் மீது காட்டப்படும் அலட்சியமாகும். மாநில அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் இடையிலான ஒரு தொடர்பாளராக மட்டுமே இருக்க வேண்டிய ஆளுநர், தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள், சட்டங்கள், திட்டங்களைத் தாமதப்படுத்துவதும், திருப்பி அனுப்புவதும், சட்டப்பேரவை உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்வதும், அரசியலமைப்பைச் சிதைக்கும் செயல்களாகும்.

வேல்முருகன் கண்டனம்

நியமனப் பதவியில் இருக்கும் ஒருவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவையை இவ்வாறு அவமதிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்தியாக வேண்டும் என்ற கட்டாயம் அரசியலமைப்பில் இருக்கிறபோது, அதை மீறுவது எந்த வகையிலும் நியாயமானது அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளை, மேலாதிக்கமாக நடத்துவது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல.

ஆளுநர் உரை

இந்நிலையில் ஏற்கனவே, இந்தியப் பெருநிலத்தில் மாநிலங்களுக்கு ஆளுநர் பதவி என்பது தேவையற்றது என்றும், ஒன்றிய அரசின் தலையீட்டிற்கானக் கருவியாகவே மாறிவிட்டதையும், பலமுறை தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுட்டிக் காட்டி இருக்கிறது. இன்றைய சட்டப்பேரவை நிகழ்வு, அந்தக் கருத்தை மீண்டும் மீண்டும் உண்மையாக்கும் எடுத்துக்காட்டாகவே அமைந்துள்ளது.

ஜனநாயக மரபுகள்

மக்களின் அதிகாரத்தை மீறி நிற்கும், ஜனநாயகத்தை அவமதிக்கும், மாநில உரிமைகளை நசுக்கும், இந்த நியமன ஆளுநர் பதவி முற்றிலும் நீக்கப்பட வேண்டும் என்பதே தமிழக மக்களின் நியாயமானக் கோரிக்கையாக, இன்று உரத்த குரலுடன் ஒலிக்கிறது. தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவை மரபுகளையும், அதன் ஜனநாயக மாண்புகளையும் இவ்வாறு காலடியில் போட்டு மிதிக்கும் எந்தச் செயலும், தமிழக மக்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே, ஆளுநர் அவர்களின் இன்றைய நடவடிக்கையைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது." என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+