அசுர பலம்.. சட்டசபையில் நான் இருக்கணும்! திருமா முடிவு.. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ரியல் காரணம்
சென்னை: நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் ஏற்கனவே எம்பி ஆக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே எம்பியாக இருக்கும் திருமாவளவன் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.. இதற்கு பின் முக்கியமான காரணம் உள்ளதாம்!
திமுக கூட்டணியில் கடந்த முறை விசிக ஆறு தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் இப்போது எட்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏற்கனவே சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் ஆலூர் ஷானவாஸ், எஸ். எஸ். பாலாஜி மற்றும் எம். பாபு ஆகியோருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஏற்கனவே எம்பியாக இருக்கும் தான் ஏன் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தேன் என்பது குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

விசிக திருமா பிளான்
நாம் தமிழக மாநில அரசியலில் கவனம் செலுத்த வேண்டும். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தின் அரசியல் சூழல் பெருமளவில் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் தான் நான் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுகிறேன் என அவர் ஒரு வீடியோவில் விளக்கம் அளித்துள்ளார். இந்த வீடியோ மூலம் விடுதலை சிறுத்தைகளுக்கு தனது முடிவு குறித்து அவர் விளக்கம் அளித்து இருந்தாலும், தமிழக அரசியலில் சட்டமன்றத்திற்கு திருமாவின் வரவு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நடப்பு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு சட்டமன்றத்திலும், தமிழக அரசியலிலும் திருமாவின் இருப்பு அவசியம் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. காரணம் எப்போதும் இல்லாத திருப்புமுறையாக 2026 சட்டமன்றத் தேர்தல் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
திருமாவின் இருப்பு அவசியம்
இந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் தமிழக வெற்றிக் கழகம் என செல்வாக்குள்ள நான்குமுனை போட்டிகளோடு ராமதாஸ்-சசிகலா கூட்டணியும் இணைந்து ஐந்துமுனை போட்டியாகி உள்ளது. இதுவரை இஸ்லாமியர் மற்றும் கிறித்தவர் உள்ளிட்ட சிறுபான்மையினர் வாக்குகள் தங்களுக்கே என்று இருந்த திமுகவின் நம்பிக்கைக்கு சவால் விடும் வகையில் இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி மற்றும் விஜயின் தமிழக வெற்றி கழகம் ஆகிய கட்சிகள் களமிறங்கி உள்ளன.
குறிப்பாக இந்த தேர்தலில் இஸ்லாமியர் ஓட்டுக்களை சீமானின் நாம் தமிழர் கட்சியும் கிறிஸ்தவர்களின் ஓட்டுகளை விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியும் கணிசமாக பிரிபதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம் என்ற திமுகவின் நம்பிக்கையை நாம் தமிழர் கட்சியும் தமிழக வெற்றிக்கழகமும் கொஞ்சம் அசைத்து பார்த்திருக்கிறது.
தேர்தலுக்குப் பிறகு சட்டமன்றத்தில் ஒருவேளை பாஜக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் என பன்முக சித்தாந்தம் கொண்ட உறுப்பினர்கள் குறிப்பிட்ட அளவு இடம்பெற்றால் திமுகவின் குரலுக்கு வலு சேர்க்க திருமா போன்ற வலதுசாரி எதிர்ப்பாளர்கள் சட்டமன்றத்திற்குள் கண்டிப்பாக தேவை. இதை எதிர்பார்த்துதான் திருமாவளவன் வரும் தேர்தலில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
திருமா எடுத்த முடிவு
தேசிய அரசியலோடு ஒப்பிடும்போது தமிழக அரசியலில் பிரதிநிதித்துவ அடையாள அரசியல் மிக முக்கியம் என்பதை திருமா நன்கு அறிவார். அதனால் தான் நாடாளுமன்ற உறுப்பினராகி இரண்டு வருடங்கள் முடிவதற்குள்ளாகவே தனது எம்பி பதவியை துறந்து சட்டமன்ற உறுப்பினர் ஆகி விட வேண்டும் என முடிவெடுத்துள்ளார் திருமா. அதற்காகத்தான் விடுதலை சிறுத்தைகள் மிகவும் வலுவாக உள்ள காட்டுமன்னார்கோவில் தொகுதியை தேர்ந்தெடுத்துள்ளார்.
இந்த காட்டுமன்னார்கோவில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு தொகுதிகளில் ஒன்றாக இருக்கிறது. மேலும் திருமாவளவனின் அரசியல் ஆரம்பித்த இடம் காட்டுமன்னார்கோயில். எனவே காட்டுமன்னார்கோவிலில் திருமாவளவன் வெல்வது எளிது. திருமாவளவனின் வெற்றி திமுகவிற்கு மிகப்பெரிய அசுர பலமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
- சிறப்பு நிருபர்












Click it and Unblock the Notifications