2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான ஆர்டிஇ சேர்க்கை அறிவிப்பு தாமதம்.. தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை
சென்னை: கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி (ஆர்டிஇ) பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட குழந்தைகள் தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் இலவச கல்வி பெற முடியும். ஆனால் 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான ஆர்டிஇ சேர்க்கை அறிவிப்பு தொடர்ந்து தாமதம் ஆகி வருகிறது. இதுவரை அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்த விவகாரத்தில் அரசை கேள்வி எழுப்பி பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. எஸ்டிபிஐ கட்சி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "கட்டாய கல்வி உரிமைச் சட்டம், 2009 (RTE) பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் இலவச கல்வியை உறுதி செய்கிறது. தமிழகத்தில், பள்ளிக்கல்வித்துறை இணையதளம் வழியாக ஆன்லைன் விண்ணப்ப முறை பின்பற்றப்படுகிறது.

வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் ஆர்டிஇ சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்படும். இது பெற்றோர்கள் தேவையான ஆவணங்களைத் தயாரித்து விண்ணப்பிக்க உதவுகிறது. கடந்த ஆண்டு, ஏப்ரல் 1 அன்று அறிவிப்பு வெளியாகி, ஏப்ரல் 20 முதல் சேர்க்கை தொடங்கியது. ஆனால், இந்த ஆண்டு மே மாதம் தொடங்கியும் அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்தத் தாமதம், 2025-26 கல்வி ஆண்டில் தங்கள் குழந்தைகளை ஆர்டிஇ திட்டத்தின் கீழ் சேர்க்க எதிர்பார்க்கும் பெற்றோர்களிடையே குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று திறக்கப்படவுள்ள நிலையில், இந்தத் தாமதம் சேர்க்கை செயல்முறையை பாதிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் இத்திட்டத்தால் பயனடைகின்றனர். எனினும், இந்த ஆண்டு அறிவிப்பில் ஏற்பட்ட தாமதம், இலவச கல்வி நிறுத்தப்படலாம் என்ற வதந்திகளைத் தூண்டி, பொதுமக்களிடையே கவலையை அதிகரித்துள்ளது.
எனவே, 2025-26 கல்வி ஆண்டுக்கான ஆர்டிஇ விண்ணப்ப அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும். மேலும், இணையதளத்தில் விண்ணப்ப செயல்முறை, தேவையான ஆவணங்கள், காலக்கெடு உள்ளிட்ட விவரங்களைத் தெளிவாகப் புதுப்பிக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். இதுதொடர்பான கோரிக்கை மனுவும் தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக அனுப்பப்பட்டுள்ளது. ஆகவே, தமிழக அரசு இவ்விவகாரத்தில் உடனடி கவனம் செலுத்தி, பெற்றோர்களின் அச்சங்களைப் போக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications