ஜெ.வின் காஸ்ட்லி இட்லி பில்.. அம்மா இட்லி சாப்பிட்டாங்கன்னு சொன்னவங்க கமுக்கமாக இருப்பது ஏன்?
இட்லி சாப்பிட்டதாக சொன்னவர்கள் இதுவரை அமைதியாக உள்ளனர்.
Recommended Video
சென்னை: அம்மா இட்லி சாப்பிட்டாங்க என்று சொன்னவர்கள் எல்லாம் இப்போது எங்கே என்றே தெரியவில்லை.
75 நாள் உடம்பு சரியில்லாமல் ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே ஒரே குழப்பம்தான். உண்மையிலேயே அவருக்கு என்னதான் பிரச்சனை என்று இதுவரை தெரியவில்லை. இது சம்பந்தமான விசாரணையும் நடைபெற்று வருகிறது.
ஆணையத்தின் விசாரணை நடக்க, நடக்க மரணம் தொடர்பான சந்தேகங்கள் குறையும் என்று பார்த்தால், சாட்சியங்கள் அளிக்கும் வாக்குமூலங்களோ மேலும் சந்தேகத்தை கிளப்பி கொண்டு போகின்றன.
ஜெ. சாப்பிட்டது இவ்வளவுதான்.. ஆனால் இவ்ளோ பெரிய பில் வந்தது எப்படி.. தெளிவுபடுத்துமா அப்பல்லோ
சர்க்கரை நோயாளி
ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சாப்பிட்ட செலவு 1.17 கோடி ரூபாய் என அப்போலோ நிர்வாகம் கணக்கு காட்டி உள்ளது. உண்மையிலேயே ஜெயலலிதாவுக்கு உடம்பில் என்ன பிரச்சனையோ தெரியாது. ஆனால் அனைவரும் அறிந்தது அவர் ஒரு சர்க்கரை நோயாளி.
நெட்டிசன்கள்
அதுவும் இல்லாமல் 75 நாட்கள் ஆஸ்பத்திரியில் யாருமே பார்க்க அனுமதி அளிக்க முடியாத அளவுக்கு உடம்பில் அவருக்கு பிரச்சனை இருந்திருக்கிறது. இந்த நிலையில் ஒரு நோயாளி இவ்வளவு ரூபாய்க்கு சாப்பிட்டாரா என நெட்டிசன்கள் மீம்ஸ்களை அலற விட்டுள்ளனர்.
சி.ஆர். சரஸ்வதி
அப்போலோவின் இந்த உணவு அறிக்கையை மட்டும் வைத்து பார்த்தால் 2 சந்தேகங்கள் எழுகின்றன. ஆஸ்பத்திரிக்கு யாரையுமே அனுமதிக்காதபோது ஒரு சிலர் மட்டும் வெளியே வந்து ஜெயலலிதா நிலை பற்றி பேட்டி அளித்தார்கள். அதில் மிக முக்கியமானவர் சி.ஆர். சரஸ்வதி. "அம்மா நன்றாக இருக்கிறார். இட்லி சாப்பிட்டார்.. " இதையே எல்லா மீடியாக்களிலும் பேட்டியாக அளித்தார். அதேபோல், வேக வைத்த ஆப்பிளை அவர் (ஜெயலலிதா) சாப்பிட்டதாகவும் கூறப்பட்டது.
வெளிநாட்டு இட்லியா?
அம்மா இட்லி சாப்பிட்டாங்க என்று வெளியில் சொல்லி பரபரப்பை ஏற்படுத்திய சி.ஆர். சரஸ்வதி, அப்போலோ அளித்துள்ள சாப்பாட்டு மெனுவை பற்றி இதுவரை ஒரு கருத்தையும் சொல்லாதது ஏன் எனத் தெரியவில்லை. ஒருவேளை ஜெயலலிதா இட்லிதான் சாப்பிட்டார் என்பது உண்மையானால், அது என்ன இட்லி (உள்ளூர் இட்லியா அல்லது வெளிநாட்டு இட்லியா), எங்கிருந்து வாங்கியது, நோயாளி ஜெயலலிதா கோடி ரூபாய் பில் வரும் அளவுக்கு எத்தனை இட்லிதான் சாப்பிட்டார் என்று சி.ஆர்.சரஸ்வதி தெளிவுபடுத்த வேண்டும்.
டாக்டர்கள் சொன்னார்கள்
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவர் இட்லி சாப்பிட்டார், இனிப்பு சாப்பிட்டார் என்று நாங்கள் கூறியது பொய் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். அப்போதும் சிஆர் சரஸ்வதி மீடியாவில் பேசும்போது, "அம்மா இட்லி சாப்பிட்டது உண்மைதான், ஆனால் உடல் நலமடைந்த பின்னர் இட்லி சாப்பிட்டார், டாக்டர்கள் சொன்னதைதான் நான் சொன்னேன்" என்றார்.
தம்பிதுரைதான் காரணம்
பின்னர் இரு அணிகள் தகராறு உச்சக்கட்டத்தில் இருந்த சமயம் பொன்னையன் ஒரு பேட்டி கொடுத்தார். அதில், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, அவர் நன்றாக இருக்கிறார். இட்லி சாப்பிட்டார் என நாங்கள் சொன்னோம். தம்பிதுரை எங்களை அப்படி சொல்ல சொன்னார். அவர் கூறியதைத்தான் நாங்கள் செய்தியாளர்களிடம் கூறினோம்" என்றார். இப்படி இட்லி சாப்பிட்ட விவகாரத்திலேயே ஆயிரத்தெட்டு குளறுபடிகள் இருக்கின்றன.
எப்போது இட்லி சாப்பிட்டார்?
ஆனால் இந்த இட்லி சமாச்சாரத்தை பற்றி அன்று மீடியாவில் முன்வந்து பேசியவர்கள் யாருமே இப்போது வாய் திறக்காமல் மவுனமாக இருக்கிறார்கள். சி.ஆர். சரஸ்வதி சொல்வதுபோல, உடல்நிலை நன்றாக பிறகுதான் இட்லி சாப்பிட்டார் என்றால், அம்மாவுக்கு உடல்நிலை எப்போது சரியானது, எப்போதிருந்து இட்லி சாப்பிட ஆரம்பித்தார் என்பதையும் விளக்க முன்வருவாரா? என தெரியவில்லை.
ஜெ.க்கு அவமானம்
ஆனால் கோடி ரூபாய்க்கு ஜெயலலிதா சாப்பிட்டார் என்று பில் தந்திருப்பதற்கு, இவர்கள் இன்று எந்த கருத்தையும் சொல்லாமல் மவுனம் காத்து நிற்பது, நம் மாநிலத்துக்கே ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுத்த ஜெயலலிதாவுக்கு செய்யும் உச்சக்கட்ட அவமானமும், இழுக்கும் ஆகும்.