2026 தேர்தலுக்கு பின்.. அரசியலே மாறும்.. புதிர் போட்ட திருமா.. மாநில அரசியலுக்கு திரும்புவது ஏன்?
சென்னை: டெல்லி அரசியலில் இருந்து விசிக எம்பி திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்பி உள்ளார். காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவது ஏன்? என்று நேற்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். அவரின் விளக்கம் பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
தொல். திருமாவளவன் அளித்த விளக்கத்தில், "மாநில அரசியலில் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. 2026 தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாடு அரசியல் சூழல் வெகுவாக மாற இருக்கிறது. இதனால்தான் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடுகிறேன்" என்றுள்ளார்.

இதையடுத்து தமிழக அரசியல் களம் இப்போது 'காட்டுமன்னார்கோவில்' பக்கமாகத் திரும்பியிருக்கிறது. "சட்டமன்றத்தில் என் குரல் ஒலிக்க வேண்டும்" என விசிக தலைவர் தொல். திருமாவளவன் எடுத்திருக்கும் முடிவு, வெறும் தொகுதி மாற்றம் மட்டுமல்ல; அது 2026-க்குப் பிந்தைய தமிழக அரசியலுக்கான ஒரு மெகா 'ஸ்கெட்ச்' என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
திருமா போட்ட புதிர்
நேற்று தன் வேட்புமனு குறித்து திருமா அளித்த விளக்கம், தற்போதைய கூட்டணிக் கட்சிகள் மட்டுமன்றி, எதிர்க்கட்சிகளையும் யோசிக்க வைத்திருக்கிறது. "2026-க்குப் பிறகு தமிழக அரசியல் சூழல் வெகுவாக மாறப்போகிறது" என அவர் போட்டிருக்கும் 'புதிர்'க்குப் பின்னால் மூன்று முக்கிய காரணங்கள் விவாதிக்கப்படுகின்றன.
1. 'கிங் மேக்கர்' கனவு: அரியணையில் பங்கு?
திமுக கூட்டணியில் இதுவரை கூட்டணி கட்சி என்ற நிலையில் இருந்த விசிக, இந்த முறை ஆட்சி அதிகாரத்தில் பங்கு (Cabinet Berth) கோரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதா?
திமுகவுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு, கூட்டணி கட்சிகளின் தயவு தேவைப்படும் சூழல் உருவாகலாம் என்பதை திருமா முன்கூட்டியே கணிக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. டெல்லி அரசியலை விட, மாநிலத்தின் அதிகார மையத்தில் (Cabinet) அமர்ந்து தலித் மக்களின் கோரிக்கைகளை நேரடியாக நிறைவேற்ற இதுவே சரியான தருணம் என அவர் கருதுவதாகத் தெரிகிறது.
2. தலித் வாக்கு வங்கி: கைநழுவுகிறதா 'சிறுத்தை'களின் கோட்டை?
தமிழகத்தில் சமீபகாலமாகப் பல்வேறு புதிய தலித் அமைப்புகளும், சிறிய இயக்கங்களும் ஒருங்கிணைந்து பல் புதிய முன்னணியை உருவாக்க முயன்று வருகின்றன. இது விசிகவின் வாக்கு வங்கியில் சிறு ஓட்டையை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் கட்சிக்குள் நிலவுகிறது. மாநில அரசியலில் திருமா நேரடியாகக் களமிறங்கினால் மட்டுமே, சிதறிப்போகும் தலித் வாக்குகளை மீண்டும் 'பானை'க்குள் கொண்டு வர முடியும் என்பது ஒரு கணக்காக இருக்கிறது.
3. 'விஜய் தவெக' (TVK) ஃபேக்டர்: விஜய்யின் வருகையும் தலித் இளைஞர்களும்!
தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை, குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கம் சாதாரணமானதல்ல. விஜய்யின் அரசியலில் தலித் இளைஞர்களின் கவனம் திசைதிருப்பப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இந்த 'வாக்கு வேட்டை'யைத் தடுத்து நிறுத்த, திருமாவளவன் போன்ற ஒரு ஆளுமை மாநில அரசியலில் முழுநேரமாக இருப்பது அவசியம் என விசிக தலைமை நம்புகிறது. "விஜய்யின் வேகத்தை விவேகத்தால் எதிர்கொள்ள" திருமா நேரடியாகக் களம் காண்கிறார் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
மாநில அரசியலுக்குத் திருமாவளவன் திரும்புவது, வரும் தேர்தலில் விசிகவின் பேரம் பேசும் சக்தியை (Bargaining Power) அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவர் குறிப்பிடும் அந்த "மாற்றம்" திமுகவுக்குச் சாதகமானதா அல்லது விசிகவின் தனிப்பாதைக்கான தொடக்கமா என்பதை 2026 தேர்தல் முடிவுகளே தீர்மானிக்கும்!












Click it and Unblock the Notifications