நட்டா ஏன் இப்படி பேசினார்.. திமுகவை ஏன் வம்புக்கிழுத்தார்.. சலசலக்கும் கேள்விகள்.. இதுதான் மேட்டராமே
திமுகவை நட்டா வம்புக்கு இழுத்து பேசியது பெரும் பரபரப்பை உண்டுபண்ணி உள்ளது
சென்னை: நட்டா ஏன் இப்படி பேசினார்? திமுகவை ஏன் வம்புக்கு இழுக்கிறார்? இதன் காரணம் என்ன? என்பதுதான் குழப்பமாக உள்ளது... சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் கொஞ்ச நாட்களே உள்ள நிலையில், அதை மையப்படுத்தியே நட்டாவின் பேச்சு அமைந்துள்ளதாகவும் கருதப்படுகிறது.
"ஸ்டாலின் தலைமையிலான வளர்ச்சிக்கு எதிரானது... அது தேசிய உணர்வுக்கு எதிராக மக்களைத் தூண்டி வருகிறது. தேசிய நீரோட்டத்தில் ஒன்றுசேர்வதை எப்போதுமே திமுக சீர்குலைக்கிறது... இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு திமுக அடைக்கலம் தருகிறது. தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவிடம் விழிப்புடன் இருக்கவேண்டும்" என்று பாஜக செயற்குழு கூட்டத்தில் நேற்று பேசியிருந்தார் நட்டா.. இதன் பின்னணி என்ன?!
எப்படி எப்படியோ குட்டிக்கரணம் அடித்தும், தமிழகத்தில் பாஜகவால் கால் ஊன்ற முடியவில்லை.. ரஜினிகாந்த்துக்கு பெரிய வலையை விரித்தால், அதில் கடைசியில் இழுக்க முடிந்தது வீரப்பன் மகளையும், ஜீவஜோதியையும், காயத்ரி ரகுராமையும்தான்..!

களப்பணி
எனவே தமிழகத்தில் பாஜக வாக்குகளை அள்ள, நட்டாவின் முதல் முயற்சியாகத்தான் இந்த பேச்சு எடுத்து கொள்ளப்படுகிறது.. அதுமட்டுமல்ல, தேர்தலுக்கு முன்பாகவே அதற்கான களப்பணியை பூத் கமிட்டியில் இருந்தே பாஜக எப்போதுமே மேற்கொள்ளும்.. மற்ற நிர்வாகிகளை காட்டிலும் பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் கூட்டத்தை கூட்டி தொடர்ந்து ஆலோசனை நடத்தும்... அதனால்தான் பூத் கமிட்டி பற்றின பேச்சு நேற்று அவரது நிறையவே தென்பட்டது.

பாஜக
இதையெல்லாம்கூட தங்கள் சொந்த கட்சி வளர்ச்சிக்காக பேசினார் என்று நாம் எடுத்து கொண்டாலும், திமுகவை ஏன் வம்புக்கு இழுத்தார்? இந்த 3 வருடங்களைவிட, கடந்த சில நாட்களாகவே பாஜகவை திமுக பகிரங்கமாக எதிர்த்து வருகிறது.. இருமொழிக் கொள்கையை சட்டமாக்கி நிலைநிறுத்தியிருக்கும் நிலையில் இந்தி - சமஸ்கிருத மொழிகளைத் திணிப்பது உட்பட அனைத்து விஷயங்களுக்கும் திமுக எதிர்ப்பை சொல்லி வருகிறது.. அதுவும் மும்மொழி கொள்கை, இந்தி திணிப்பு, ஆயுஷ் அமைச்சகம் போன்ற விவகாரங்களில் கனிமொழி காட்டிய "காட்ட நெடி", மத்திய அரசின் மூக்கை துளைத்து கொண்டு போனது!

தேசிய பங்கு
இதுவும் பாஜக தரப்புக்கு எரிச்சலை உண்டு பண்ணி வருகிறது... அடுத்ததாக, திமுகவின் தேசிய பங்கு என்பது குறை சொல்லும்படியாக இல்லை என்பதே கடந்த கால வரலாறு.. சீன போருக்கு நிதி திரட்டி வழங்கியது திமுக தான் என்பதையும் பாஜக மறந்துவிடக்கூடாது.. எத்தனையோ பிரதமர்களை, ஜனாதிபதிகளை கோபாலபுர வீட்டில் உட்கார்ந்து கொண்டே நிர்ணயம் செய்தவர் மறைந்த கருணாநிதி என்பதையும் நட்டாவுக்கு இங்கு நினைவுபடுத்த வேண்டி உள்ளது!

குஜராத்
அதேபோல தமிழகத்தின் தேசிய பற்றையும் கேள்வி கேட்டு விட முடியாது.. கார்கில் போருக்கு நிதி திரட்டிய முன்னோடி மாநிலம் தமிழகம்தான். குஜராத் பூகம்பத்தின்போதும் விரைந்து உதவி ஓடி வந்த மாநிலங்களில் முன்னோடியாக தமிழகமும் இருந்தது. தேசிய அளவில் எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் தன்னை முன்வந்து நிறுத்திக் கொள்ளும் பாங்கு தமிழகத்துக்கு எப்போதுமே உண்டு. மேலும் தீவிரவாதிகள் விஷயத்திலும் தமிழகம் தெளிவாக இருக்க முக்கியக் காரணமே இங்கு வசிக்கும் அனைத்துத் தரப்பு மக்களிடமும் நிலவும் சமூக நல்லிணக்கம்தான்தான். மற்ற மாநிலங்களை விட தமிழகம் இதில் எப்போதுமே "பெஸ்ட்"!

எமர்ஜென்சி
முன்னாள் பிரதமர் விபி சிங் ஆட்சியில், மண்டல் கமிஷனை அமலாக்கம் செய்ய வலியுறுத்தி இந்தியா முழுமைக்குமான பிற்பட்டோர் நலன் காத்தது முதல், இந்திராகாந்தி எமர்ஜென்சியை அமல்படுத்தியபோது, இந்தியா முழுமைக்குமான எதிர்கட்சி தலைவராக, மிசாவை எதிர்த்து போராடியது முதல் திமுகவின் பங்கு அளப்பரியது என்பதையும் நினைவுகூர வேண்டி உள்ளது.

இட ஒதுக்கீடு
மத்திய அரசு கொண்டு வரும் புதிய கல்விக்கொள்கை ஆகட்டும், பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் நடவடிக்கை ஆகட்டும், ஒரே நாடு - ஒரே ரேஷன் திட்டமாகட்டும், இப்படி எதுவானாலும் தமிழ்நாட்டில் இருந்து அதிமுகவை விட திமுகவின் எதிர்ப்பே தலைநகரில் எதிரொலிக்கிறது.. தமிழுக்கும், தமிழனுக்கும் ஒரு பிரச்சனை என்றால், முதலில் ஓடி வருவது டாக்டர் ராமதாஸ்தான் என்பதை நாம் மறுப்பதற்கில்லை.

டாக்டர் ராமதாஸ்
அதேசமயம், மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு அதிகமான எதிர்ப்பை திமுக மட்டுமே சமீப காலமாக பதிவு செய்து வருவதாலும், பிற கட்சிகள் இதில் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுத்திக் கொள்ளாமல் இருப்பதாலும், பாஜகவின் அனைத்து கோபமும் திமுக மீது மட்டுமே திரும்பி உள்ளதாக தெரிகிறது. திமுக மீது இத்தனை குறை சொல்லும் பாஜக, தன் மீது விழுந்துள்ள சேற்றை துடைத்தெறிய முதலில் முன்வர வேண்டும்.. பாஜக மீது தமிழகத்தில் மிகப் பெரிய அதிருப்தி அலை வீச என்ன காரணம் என்பதை இனியாவது பாஜக விரிவாகவே அலசி ஆராய வேண்டும்.

செயற்குழு கூட்டம்
அந்த அதிருப்தியைத் துடைத்து மக்களை தம் பக்கம் இழுக்கத் தேவையானதை செய்வது குறித்துத்தான் பாஜக தனது கூட்டத்தில் விவாதித்திருக்க வேண்டுமே தவிர அடுத்த கட்சியை பற்றி குறை சொல்ல ஒரு தேசியக் கட்சிக்கு செயற்குழு கூட்டம் தேவையா என்ற கேள்விதான் மக்களிடம் எழுகிறது. எனவே இந்த விஷயத்திலும் கூட பாஜகவின் தோல்வியாகத்தான் இதை மக்கள் பார்ப்பார்களே தவிர திமுகவை குறை சொன்னதை அவர்கள் பெரிதாகவே எடுத்து கொள்ளவே மாட்டார்கள்.

வன்முறை
எதற்கெடுத்தாலும் வன்முறை வார்த்தைகளை கொப்பளித்து கொண்டு, பெரியாரை வம்பிக்கிழுத்து கொண்டு, ராத்திரியோடு ராத்திரியாக சிலைகளுக்கு காவி சாயத்தை ஊற்றி கொண்டு, தேசிய கொடியிலும் "வர்ணத்தை" பிரித்து பேசும் சிலருக்கு வாய்ப்பூட்டுகளை போடுவதற்கு, நட்டா முதலில் முன்வர வேண்டும் என்பது தமிழக மக்களின் ஏகோபித்த கருத்து.

நிதர்சனம்
அதை செய்த பிறகுதான் மற்ற கட்சிகள் குறித்து பாஜக திரும்ப வேண்டும்.. அதுதான் சரியானதாகவும் இருக்கும், ஆக்கப்பூர்வமானதாகவும் இருக்கும்.. மக்களுக்கான கட்சி என்ற தோற்றமும் அக்கட்சிக்கு ஏற்படும். இதுதான் நிஜம்.. இது புரியாதவரை திமுகவை மட்டும் குறை சொல்லி பாஜகவால் பலனடைய முடியாது என்பதும்.. நிதர்சனமான உண்மை!












Click it and Unblock the Notifications