இவரை புறக்கணித்தது ஏன்? ஒவ்வொரு பந்திலும் பிசிசிஐக்கு கிளாஸ் எடுத்த வீரர்! விட்டுட்டு போயிட்டாங்களே!
சென்னை: இந்திய உலகக் கோப்பை டி 20 தொடருக்கான அணியில் இளம் வீரர் ஒருவரை சேர்க்காமல் போனது ஏன் என்ற கேள்வி நெட்டிசன்கள் இடையே எழுந்துள்ளது. நெட்டிசன்கள் பலர் இது தொடர்பாக கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
உலகக் கோப்பை டி 20 தொடர் 2023 இந்த மாதம் தொடங்க உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடக்கும் இந்த தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மாதம் 23ம் தேதி இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. கடந்த டி 20 உலகக் கோப்பையில் சூப்பர் 4 சுற்றுக்கு தேர்வாகாமல் இந்திய அணி வெளியேறியது.
அதேபோல்தான் கடந்த ஆசிய கோப்பை தொடரிலும் இந்திய அணி செமி பைனலுக்கு செல்லவில்லை, தொடர்ந்து ஐசிசி கோப்பை தொடர்களில் இந்திய அணி மோசமாக சொதப்பி வருகிறது.
இந்த நிலையில்தான் இந்த முறையாவது டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றிபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணியில் பவுலிங் மிகவும் மோசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பும்ரா காயம் காரணமாக ஆடவில்லை.
அதேபோல் ஜடேஜா காயம் காரணமாக ஆடவில்லை. இந்த நிலையில் இருக்கிற பவுலர்களை வைத்து ஆட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் பேட்டிங்கிலும் இந்திய அணியில் சில சிக்கல்கள் உள்ளன. முக்கியமாக இந்திய அணியின் ஓப்பனிங் வீரர் கே. எல் ராகுல் சிறப்பாக ஆடுவது இல்லை. ஆசிய கோப்பை தொடர் முழுக்கவே இவர் மோசமாக சொதப்பினார்.
டி 20 போட்டிகளில் ஓவர் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். 110 - 120 ஸ்டிரைக் ரேட்டில் இவர் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடுவது கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஆனாலும் ராகுல் டிராவிட் காட்டும் கரிசனம் காரணமாக தொடர்ந்து இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

மற்ற நல்ல ஓப்பனர்கள் பலர் இருந்தும் கூட இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இஷாந்த் கிஷான், ருத்துராஜ் ஆகியோர் ஓப்பனிங் நன்றாக செய்தாலும், ராகுல் தொடர்ந்து அணியில் வாய்ப்பு பெற்று வருகிறார். இந்த நிலையில்தான் இந்திய அணியால் பிரித்வி ஷாவை ஏன் எடுக்கவில்லை என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
பிரித்வி ஷா நல்ல டி 20 பேட்ஸ்மேன். இவர் சிறப்பான பார்மிலும் இருக்கிறார். ஆனால் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட அளவிற்கு இவருக்கு வழங்கப்படுவது இல்லை. முக்கியமாக டி 20 போட்டிகளில் இவருக்கு சரியாக வாய்ப்பு வழங்கப்படுவதே இல்லை. உதாரணமாக தற்போது சையது முஸ்தாக் கோப்பை தொடரில் இவர் ஆடிய ஒவ்வொரு பந்திலும் தன்னை புறக்கணித்த பிசிசிஐக்கு பதிலடி கொடுத்துள்ளார். வெறும் 46 பந்துகளில் சதம் அடித்துள்ளார்.

200 ஸ்டிரைக் ரேட்டில் இவர் ஆடி சதம் அடித்துள்ளார். அதிலும் முதல் 19 பந்திலேயே இவர் அரை சதம் அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மும்பை அணியின் கேப்டனாக இந்த தொடரில் ஆடி வரும் இவர் அசாம் அணிக்கு எதிராக இந்த சதத்தை அடித்துள்ளார். 61 பந்துகள் பிடித்த அவர் 134 ரன்களை இன்று எடுத்து அவுட் ஆனார்.
இதில் 9 சிக்ஸ், 13 பவுண்டரிகளை இவர் அடித்தார். இந்த தொடர் முழுக்கவே இவர் சிறப்பாக ஆடி வருகிறார். இந்த நிலையில்தான் ரசிகர்கள் பிரித்வி ஷாவிற்கு வாய்ப்பு கொடுக்காமல் இருப்பது ஏன். ஏன் தொடர்ந்து ராகுலுக்கு வாய்ப்பு கொடுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.












Click it and Unblock the Notifications