Annamalai: பாஜக பொறுப்பில் இருந்து கேசவ விநாயகம் விடுவிப்பு ஏன்? அண்ணாமலை கொடுத்த அடடே விளக்கம்
சென்னை: தமிழக பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் விடுவிக்கப்பட்டது குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அவர் மாற்றப்பட்டது ஏன் என்பது குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: கேசவ விநாயகம் பாஜகவில் நீண்ட காலம் சிறப்பாக பணியாற்றியவர், நிறைய தேர்தல்களை சந்தித்தவர். நல்ல மனிதர். கடுமையான உழைப்பாளி. எளிமையானவர்.

அவரை ஆர்எஸ்எஸ் சங்கம் பாஜகவுக்கு கொடுத்திருந்தது. தற்போது ஆர்எஸ்எஸ் சங்கத்திற்கு அனுபவம் வாய்ந்த நபர் இல்லாததால் கேசவ விநாயகத்தை திரும்ப பெற்றுக் கொண்டது. அவர் இங்கிருந்து புதிய பொறுப்புடன் ஆர்எஸ்எஸ்ஸுக்கே சென்றுள்ளார்.
அவர் ஆர்எஸ்எஸ் பிரசாரகர், அவர் அரசியல்வாதி அல்ல. கர்நாடகா,கேரளா, புதுவை உள்ளிட்ட மாநிலங்களுக்குக் கூட அமைப்பு பொதுச் செயலாளர்கள் இல்லை. எனவே தேவையில்லாமல் கேசவ விநாயகம் மீது எந்த சர்ச்சையையும் ஏற்படுத்த வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அது போல் தனக்கும் நயினார் நாகேந்திரனுக்கும் இடையே எந்த பனிப்போரும் இல்லை என விளக்கியுள்ளார்.தமிழக பாஜக தேசிய செயலாளராக இருந்த கேசவ விநாயகம் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டு இன்று ஆர்எஸ்எஸ்ஸில் புதிய பொறுப்பில் சென்றுள்ளார்.
இந்த நிலையில் திடீரென அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பல்வேறு விஷயங்களை விவாதித்தார். அவர் கூறுகையில் இந்தியாவை பொருத்தவரை உலகநாடுகளில் எரிப்பொருள் எங்கு தரமாக இருக்கிறதோ அங்கு வாங்கும் என்று வெளியுறவு செயலாளர் தெளிவுபடுத்தியுள்ளார். இதுதான் மத்திய அரசின் அதிகாரப்பூர்வமான பதில்!
இந்த ஒப்பந்தத்திற்கும் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதற்கும் என்ன சம்பந்தம், வெனிசுலாவில் எண்ணெய் வாங்க போகிறோமா என்பதற்கெல்லாம் வெளியுறவுத் துறை செயலாளர் பதில் தெரிவித்துவிட்டார்.
நமது இறையாண்மைக்கு எந்த பாதிப்பும் வராதபடி இந்தியா செயல்படுகிறது. அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு 18% சிறப்பு சலுகை உள்ளது. வேறு எந்த நாடுகளுக்கும் இது போன்ற சதவீதம் இல்லை. உதாரணமாக வியட்நாம் 19 சதவீதம், கம்போடியா 20 சதவீதம், சீனா 35%...
இந்த நாடுகள் எல்லாம் அமெரிக்காவின் விவசாய பொருட்களை இறக்குமதி செய்துக் கொண்டார்கள். ஆனால் இந்தியா அது போல் இறக்குமதி செய்யாமல் இந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.
2009 முதல் 2013 ஆம் ஆண்டு வரை மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியால் ஐரோப்பிய நாடுகளுடனான ஒப்பந்தத்தை போட முடியாததால் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பாஜக அரசு மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள்.
தமிழ்நாட்டுக்கு உயர் வேக ரயில் திட்டங்கள் (சென்னை-பெங்களூர், ஹைதராபாத் இணைப்பு), 10,000 கோடி ரூபாய் மருந்தக திட்டங்கள், 6 பெரிய பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வந்துள்ளன. நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இதை தெளிவுபடுத்தியுள்ளார்.
மதுரையில் AIIMS திட்டப் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. ஆனால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் AIIMS-ஐ தாமதப்படுத்தியதாக விமர்சித்துள்ளார். அவர் நேரடியாக சென்று பார்த்தால்தான் பணி நடைபெறுகிறதா இல்லையா என்பது தெரியும் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications