நீங்க களமிறங்குங்களேன்.. குஷ்புவிற்கு சென்ற "ஆஃபர்"?.. நாசுக்காக சொல்லப்பட்ட நோ.. நடந்தது என்ன?
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்த முறை பாஜக சார்பாக களமிறங்க பலர் ஆர்வம் காட்டிய நிலையிலும் சில மூத்த நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதில் குஷ்புவும் ஒருவர் என்று தகவல்கள் வருகின்றன.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி, 133 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக பாஜக அறிவித்துள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்த நிலையில் பாஜக தனித்து போட்டியிடுகிறது.

பாஜக
இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பாஜகவினர் பலர் ஆர்வம் காட்டி இருந்தனர். பொதுவாக அதிமுக கூட்டணியில் இடம்பெறும் போது பாஜகவினர் பலருக்கு போட்டியிட இடம் கிடைக்காது. இதனால் கடந்த சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் பாஜக நிர்வாகிகள் பலருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேபோல் கடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் 8 மாவட்டங்களில் பாஜக கேட்ட இடங்கள் பெரிய அளவில் அதிமுக மூலம் ஒதுக்கப்படவில்லை.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
இதனால் கடந்த முறை பாஜக நிர்வாகிகள் பலருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த முறை அதிமுக கூட்டணியில் இல்லை என்பதால் பாஜக நிர்வாகிகள் பலர் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இருந்துள்ளனர். இதில் பலருக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கிடைத்துள்ளது. இந்த நிலையில்தான் பல மூத்த நிர்வாகிகளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களமிறக்க பாஜக தலைமை முயன்றதாக கூறப்படுகிறது.

பாஜக திட்டம்
அதாவது பிரபலமாக இருக்கும் சில நிர்வாகிகளை தேர்தலில் களமிறக்க பாஜக தலைமை முடிவு செய்ததாம். அந்த வகையில் குஷ்புவை களமிறக்க அவரிடம் பாஜக தலைமை கேட்டதாக தகவல்கள் வருகின்றன. அதாவது.. தேர்தலில் போட்டிடுகிறீர்களா ? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டதாக கூறப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சியில் களமிறங்குங்கள்.. சென்னையில் பயன் உள்ளதாக இருக்கும். பாஜகவிற்கும் உதவியாக இருக்கும். சென்னையில் கட்சியை வலுப்படுத்த உதவியாக இருக்கும் என்று குஷ்புவிடம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Recommended Video

குஷ்பு
ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதால், போட்டியிட வேண்டாமே என நாசுக்காக சொல்லி தவிர்த்துவிட்டாராம் குஷ்பு. தேசிய அளவில் பிரபலமாக இருக்கும் போது கவுன்சிலர் தேர்தலில் நாம் எப்படி போட்டியிடுவது ? என்பதாலேயே குஷ்பு தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து விட்டார் என்று கூறப்படுகிறது. பாஜகவின் இன்னும் சில மூத்த நிர்வாகிகளும் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications