வெளிநாடு செல்லாத மதுரை நபருக்கு கொரோனா தொற்று வந்தது எப்படி.. அமைச்சர் விஜயபாஸ்கர் பரபரப்பு விளக்கம்
சென்னை: கொரோனா பாதித்த மதுரையை சேர்ந்த நபர் வெளிநாட்டுக்கு செல்லாவிட்டாலும் அவர் ஈரோட்டில் சிகிச்சை மேற்கொண்டு வரும் தாய்லாந்து நாட்டினருடன் நெருக்கமாக இருந்ததால்தான் அவருக்கும் நோய் பரவிவிட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்தது. நேற்று மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் முடங்கியது. இதையடுத்து நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த 21 நாட்களுக்கு இந்தியாவில் வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் இந்தியா முழுவதும் முடக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் இதுவரை 18 பேருக்கு கொரோனா வைரஸ்
தொற்று இருப்பது உறுதி செய்துள்ளோம். இவர்களை ஆய்வு செய்து பார்த்ததில் கணவனிடம் இருந்து மனைவிக்கு, மனைவியிடம் இருந்து கணவனுக்கும் பரவியுள்ளது. லண்டனில் இருந்து வந்த ஒருவருக்கு தொடக்கத்தில் அறிகுறி ஏதும் இல்லை. சில நாட்கள் கழித்து அவருக்கு நோய் இருப்பது உறுதியான நிலையில் அவரது தாயாருக்கும் நோய் தொற்று உறுதியானது.

தனியாக
நான் ஏற்கெனவே சொல்லியது போல் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தேதி வரை வீட்டில் இருக்க வேண்டும். இது வேண்டுகோள் அல்ல. அரசின் உத்தரவு ஆகும். மிகவும் உயிர்க் கொல்லியான கொரோனா மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கவே இவர்களை தனிமைப்படுத்தியுள்ளோம். ஆனால் இவர்கள் வெளியே வருகிறார்கள் என்றால் என்ன அர்த்தம். இது மிகவும் கண்டனத்துக்குரியது. நோய் அறிகுறி தெரியாவிட்டாலும் தனியாகத்தான் இருக்க வேண்டும்.

வலியுறுத்தி
அந்த அறிகுறிகள் தாமதமாகக் கூட அதாவது 14 நாட்களுக்குள் தெரியும். எனவே நான் மிகவும் வலியுறுத்தி சொல்கிறேன். தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் யாரேனும் வெளியே சுற்றுவதை பார்த்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே அவர்களது பாஸ்போர்ட்கள் முடக்கப்படும் என கூறியுள்ளோம். வீடு தேடி அனைத்தும் வரும். அவர்களுக்கு மருத்துவர், போலீஸார், ஆம்புலன்ஸ் என அனைவரின் எண்களும் கொடுத்துள்ளோம். வேறென்ன வேண்டும்.

மாதங்கள்
உங்களால் ஒருவருக்கு நோய் பரவும் என தெரிந்தும் அலட்சியமாக சுற்றிவிட்டு நோய் பரவ காரணமாக இருந்தால் அதுவும் குற்றமே. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மாஸ்க்கள், பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் இருப்பு உள்ளன. எல்லா இடங்களிலும் தட்டுப்பாடு நிலவுகிறது. நாங்கள் இரு மாதங்களுக்கு முன்பே வாங்கி விட்டோம்.

தாய்லாந்து
வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் யாரையெல்லாம் தொடர்பு கொண்டார்கள் என்ற விவரங்களையும் சேகரித்துவிட்டோம். அது போல் கொரோனா பாதித்த மதுரை நபர் எங்கெல்லாம் போனார், யாரையெல்லாம் சந்தித்தார் என்ற விவரங்களையும் வாங்கியுள்ளோம். அவர் வெளிநாட்டுக்கு செல்லாமல் கொரோனா வந்திருந்தது. இது எப்படியென ஆய்வு செய்ததில் ஈரோட்டில் ஏற்கெனவே கொரோனா பாதித்து பெருந்துறையில் சிகிச்சை பெற்று வரும் தாய்லாந்து நாட்டினருடன் இந்த நபர் நெருங்கு பழகியிருந்தார்.

உயிரிழப்பு
அதனால்தான் இவருக்கும் அந்த பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. இவர் நிலைமை நேற்று ஆபத்தான நிலையில் இருந்தார். அதற்கு காரணம் அவருக்கு வயது 54 ஆகிறது. நுரையீரல் பிரச்சினைக்காக 10 ஆண்டுகளாக மருந்து உட்கொண்டு வருகிறார். உயர் ரத்த அழுத்தம், கட்டுக்குள் இல்லாத சர்க்கரையின் அளவு ஆகியவற்றால்தான் இவரது நிலை அப்படி இருந்தது. எனினும் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என விஜயபாஸ்கர் தெரிவித்திருந்த நிலையில் அந்த நபர் புதன்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் கொரோனாவுக்கு தமிழகத்தில் முதல் உயிரிழப்பு நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications