அமைச்சர் பிடிஆரை சந்திக்கப்போகும் அன்பில் மகேஷ்.. பின்னணி என்ன? ‘மேடையிலேயே’ - ஸ்டாலினின் பிளான்!
சென்னை : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை ஓரிரு நாட்களில் சந்திப்பார் என தகவல்கள் பரபரக்கின்றன.
செப்.10ஆம் தேதி ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார். அப்போது சில அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜாக்டோ-ஜியோ சங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாகவே அமைச்சர் அன்பில் மகேஷ், நிதி அமைச்சர் பிடிஆரை சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
திமுக மீதான அரசு ஊழியர்களின் அபிமானத்தை தொடர்ந்து தக்கவைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள முதல்வர் ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற இருக்கிறாராம்.

ஜாக்டோ ஜியோ மாநாடு
மீண்டும் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் பணியிடத்தைக் கொண்டு வர வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை அரசு ஊழியர், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மாநில மாநாட்டை செப்டம்பர் 10ஆம் தேதி நடத்த இருக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

மேடையிலேயே
ஜாக்டோ ஜியோ மாநாட்டில் பங்கேற்பதாக முதல்வர் ஸ்டாலினும் உறுதியளித்துள்ளார். இந்த மாநாடு செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஜாக்டோ ஜியோ போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பிறகு பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அரசு ஊழியர்கள் மனக்குறையில் உள்ளனர். இதைத் தீர்த்து வைக்கும் வகையில் மேடையிலேயே சில அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

பிடிஆர் உடன் சந்திக்க திட்டம்
இதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து, ஜாக்டோ ஜியோ ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு செய்யுமாறு வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சந்திப்பு இன்னும் ஓரிரு நாட்களுக்குள் நடக்கும் என்றும் மேலிட வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிதி அமைச்சர் பிடிஆர்
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது திமுக தனது தேர்தல் அறிக்கையில், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சிக்கு வந்த பிறகு அரசு ஊழியர்கள் மீண்டும் வலியுறுத்திய நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவதில் சிக்கல்கள் இருப்பதாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

முக்கியமான கோரிக்கைகள்
இந்நிலையில், அதுகுறித்த அறிவிப்பு எதுவும் தமிழக முதல்வரால் வெளியிடப்படுமா என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும், கடந்த காட்சியில் பள்ளிக்கல்வித் துறையில் வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர்களின் நலன்களைப் பாதிக்கும் அரசாணை 101 மற்றும் 108 ஆகியவை ரத்து செய்யப்படுமா என்றும் கேள்வியோடு இருக்கின்றனர். அமைச்சர் அன்பில் மகேஷ் இந்தக் கோரிக்கைகளில் எவற்றிற்கெல்லாம் நிதி ஒதுக்கீடு பெற்று வருவார் என்பதுதான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications