ஓஹோ.. இதற்காகத்தான் பீலா ராஜேஷை பின்னால் நிற்க வைத்துவிட்டு விஜய பாஸ்கர் பிரஸ் மீட் செய்தாரா?
சென்னை: சுமார் 2 வாரங்களுக்கு பிறகு, இன்று மாலை நேர பிரஸ் மீட் நடத்தினார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். பெரும்பாலும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், சில நேரங்களில் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் பிரஸ் மீட் செய்தனர்.
Recommended Video
இந்த நிலையில், இன்று மறுபடி எப்படி விஜயபாஸ்கர் வருகை தந்தார், ஏன் வருகை தந்தார் என்பது பலரது கேள்வியாக இருந்தது. பீலா ராஜேஷ் பின்னால் நின்று கொண்டிருந்தார்.
இதற்கான விடை, விஜயபாஸ்கர் பேட்டியில் வெளிப்படுத்திய வார்த்தைகளிலேயே, இருந்தது. அப்படி விஜயபாஸ்கர் என்னதான் சொன்னார், பாருங்கள்:

ஆரம்பத்திலேயே நடவடிக்கை
விஜயபாஸ்கர் கூறியதாவது: சமீபத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசுகையில், அரசு இன்னும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு நான் பதில் அளிக்க விரும்புகிறேன். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கிய காலத்திலேயே, உயர் வல்லுநர்களை அழைத்து ஆலோசனை நடத்தினோம்.

சட்டசபையில் அறிவிப்பு
வரக்கூடிய விளைவுகளை கணித்து, இது எளிதாக வேகமாகப் பரவக் கூடியது என்பதை அறிந்து வைத்திருந்தோம். இதனால்தான் சட்டசபையிலேயே கூறினோம், இது மின்னல் வேகத்தில் பரவக்கூடிய நோய் என்று. அதற்கு ஏற்ப அரசு மின்னல் வேகத்தில் செயல்பட்டது.

மருந்து கொள்முதல்
இந்தியாவில் கொரோனா நோய் இல்லாத காலகட்டத்தில், அதாவது ஜனவரி மாதமே, மருந்து உற்பத்தியாளர்களை எல்லாம் அழைத்து, நிதி ஒதுக்கீடு செய்து, தேவையான மருந்துகளை முன்கூட்டியே கொள்முதல் செய்து விட்டோம். எனவேதான், எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இந்த நோயை எதிர்த்து அணுகி வருகிறோம்.

பெரிய கொள்முதல்
இந்தியாவில், கொரோனா நோய் பரவல் ஆரம்பித்தது, ஜனவரி 30 ஆம் தேதிதான். கேரளாவில் முதன்முறையாக நோயாளி கண்டறியப்பட்டார். அதற்குப் பிறகு இரண்டாவது முறையாக, மருத்துவ உபகரணங்கள், கொள்முதலை, மிகப்பெரிய அளவுக்கு செய்தோம்.

மூன்றடுக்கு மாஸ்க்
மூன்று அடுக்கு முக கவசம், n95 முகக் கவசம் உள்ளிட்ட அனைத்தையும் முன்கூட்டியே கொள்முதல் செய்து விட்டோம். 204.85 கோடி ரூபாய் மதிப்புக்கு பிறகு பெரிய அளவுக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்த அளவில் மூன்றடுக்கு மாஸ்க், n95 மாஸ்க், மருத்துவர்களுக்கு தேவையான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் தங்குதடையில்லாமல் கொடுக்கப்பட்டு வருகிறது.

குற்றச்சாட்டு
தேவையான அளவுக்கு நம்மிடம் உபகரணங்கள் இருப்பு இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு இதை நான் பதிலாக சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்தார். தமிழகத்தில், கொரோனா பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில் அமைச்சர் பிரஸ்மீட் செய்யாமல் சுகாதாரத்துறை செயலாளரை வைத்து பிரஸ் மீட் செய்வது பொறுப்பை தட்டிக்கழிக்கும் செயல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

நேரடி பதில்
இந்த நிலையில்தான் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு விஜயபாஸ்கர் இன்று நேரடியாக பதில் அளித்து உள்ளார். அரசு அதிகாரிகள் அனைவருக்கும் பொதுவானவர்கள். அவர்கள் அரசியல்வாதிகள் எழுப்பக்கூடிய கேள்விகளுக்கு நேரடியாக பதில் தர முடியாது. எனவே, பீலா ராஜேஷ் இன்று பிரஸ்மீட் செய்யவில்லை என்றும், அதற்குப்பதிலாக விஜயபாஸ்கர் பிரஸ்மீட் செய்ததாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால்தான் இன்றைய பிரஸ் மீட் ரொம்ப நீளமாக போய்க்கொண்டு இருந்தது.












Click it and Unblock the Notifications