அடிமடியிலேயே கைவைத்த எடப்பாடி.. சொந்த மண்ணிலேயே சறுக்கிய ஓபிஎஸ்? தேனியில் நடந்த "மெகா" ட்விஸ்ட்
சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமைதான் வேண்டும், அதுவும் எடப்பாடி பழனிச்சாமி அந்த இடத்திற்கு வர வேண்டும் என கட்சியில் பெரும்பாலான நிர்வாகிகள் விரும்புவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் தேனி மாவட்ட அதிமுக கூட எடப்பாடி பழனிச்சாமிக்குத்தான் ஆதரவு என கூறியுள்ளது.
அதிமுகவில் இரட்டை தலைமை என்ற நிலையில் கட்சியின் பெரும்பாலான பொறுப்புகள், வேட்பாளர்கள் தேர்வு, ஆட்சியிலிருந்த போது பல்வேறு பொறுப்புகள், தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் போது சில பொறுப்புகள் என பெரும்பாலும் எடப்பாடி பழனிச்சாமி எடுக்கும் முடிவை சார்ந்தே இருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்த போதும் ஓபிஎஸ் அந்த பதவி தனக்கு தான் வேண்டும் என்றார். ஆனால் எடப்பாடி விடவில்லை, சட்டசபை தேர்தலில் ஓபிஎஸ் தலைமையில் இருக்கும் தென்மாவட்டங்களில் அதிமுக எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது என்ற கணக்கை காட்டி அவரது வாயை எடப்பாடி அடைத்துவிட்டார்.

சீட்டு
ஒவ்வொரு முறையும் தேர்தலில் சீட்டு பெறுவதற்காக எடப்பாடி தரப்புக்கும் ஓபிஎஸ் தரப்புக்கும் இடையே போராட்டம் ஏற்படும். இதில் எடப்பாடி பழனிச்சாமி வென்று தனது ஆதரவாளர்களுக்கு சீட்டு வாங்கி தருவார்.
ஓபிஎஸ் விட்டுக் கொடுத்துவிடுவதால் அவரது ஆதரவாளர்கள் ஏமாற்றமடைவார்கள். விட்டுக் கொடுப்பார் என்பதை காட்டிலும் தனது போராட்டக் குணத்தை தீவிரப்படுத்த மாட்டார் என்பதே உண்மை என்கிறார்கள்.

ஒற்றைத் தலைமை
ஆனால் தற்போது ஒற்றைத் தலைமை என வரும் போது ஓபிஎஸ் விட்டுக் கொடுக்க மனமில்லாமல் எடப்பாடி பழனிச்சாமி தரப்புடன் மல்லுக்கட்டி வருகிறார். தற்போது பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியின் பக்கம் நிற்கிறார்கள். 66 சட்டசபை உறுப்பினர்களில் 62 பேர் எடப்பாடி பக்கம் இருக்கிறார்கள். அது போல் மாவட்டச் செயலாளர்களில் 11 பேர் மட்டுமே ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக உள்ளார்கள்.

தொண்டர்கள்
ஆனால் தனக்கு தொண்டர்கள் ஆதரவு இருப்பதாக கூறி வருகிறார். முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், வளர்மதி, சிவபதி, சிவி சண்முகம், கே பி முனுசாமி உள்ளிட்டோர் எடப்பாடியே ஒற்றைத் தலைமை ஏற்க வேண்டும் என்கிறார்கள். அது போல் திருச்சி, தேனி மாவட்ட அதிமுக, இளைஞர்கள், இளம்பெண்கள் பாசறை, மாணவரணி, இளைஞரணி என ஒட்டுமொத்தமாக இளைஞர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் பின்னால் இருப்பதற்கு காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.

அரசியல் விமர்சகர்
இதுகுறித்து அரசியல் விமர்சகர் ஒருவர் கூறுகையில் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களுக்கு தேவையான சீட்டையும் கட்சி பதவியையும் போராடி பெற்று தருகிறார். ஆனால் ஓபிஎஸ் அது போல் எந்த ஒரு போராட்டத்தையும் செய்வதில்லை. எடப்பாடி பழனிச்சாமிக்கு விட்டுக் கொடுத்து விட்டுக் கொடுக்கிறார் ஓபிஎஸ். இதனால்தான் ஓபிஎஸ்ஸுடன் இருந்தால் ஒரு பலனும் இல்லை என கருதி தர்மயுத்தம் நடந்த போது ஓபிஎஸ்ஸுடன் இருந்தவர்கள் எல்லாம் தற்போது எடப்பாடி பழனிச்சாமி பக்கம் சாய்ந்துவிட்டார்கள்.

ஏமாற்றத்தையே பெற்ற ஓபிஎஸ்
சுருக்கமாக சொல்ல போனால் ஓபிஎஸ்ஸுடன் இருந்தவர்களுக்கு அவர் வெறும் ஏமாற்றத்தையே தந்துள்ளார். ஒருங்கிணைப்பாளராக இருந்தும் தனது ஆதரவாளர்களுக்கு அவர் எந்த பதவியையும் பெற்று தரவில்லை என்ற குமுறல்கள் அவர்களிடம் நிறைய உள்ளது. மேலும் சசிகலாவை ஒதுக்க வேண்டும் என கண்டிஷன் போட்ட ஓபிஎஸ் , திடீரென அவருக்கு சாதகமாக பேசியதை பலர் விரும்பவில்லை.

சசிகலாவுக்கு ஆதரவு நிலைப்பாடு
அது போல் சசிகலாவுக்கு கட்சியே எதிராக இருக்கும் போது ஓபிஎஸ்ஸின் சகோதரர் ஓ ராஜா நேரில் போய் சந்தித்தது, திமுகவை சட்டசபையில் ஓபிஎஸ் பாராட்டிய சம்பவம் உள்ளிட்டவை பெரும்பாலான நிர்வாகிகளுக்கு பிடிக்கவில்லை. அது போல் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் புத்தகம் அளித்த சம்பவம் இவையெல்லாம் நிர்வாகிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியதால்தான் தற்போது பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியின் பக்கம் இருப்பதற்கு காரணம் என்றார் அந்த விமர்சகர்.












Click it and Unblock the Notifications