Reliance: 6ஆவது ஆண்டாக ஊதியமில்லாமல் வேலை செய்யும் முகேஷ் அம்பானி! ஏன் என்னாச்சு?
சென்னை: ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, தொடர்ந்து 6ஆவது ஆண்டாக ஊதியம் பெறாமல் பணியாற்றி வருகிறார். இதற்கான காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.
2020 ஜூன் மாதத்தில் கொரோனா பெருந்தொற்று நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் தொழில் துறை ஆரோக்கியத்தில் ஏற்படுத்திய தீவிர தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, அவர் தனது முழு ஊதியத்தையும், இதர படிகளையும் கைவிடத் தீர்மானித்தார்.

கொரோனா தொற்றுக்கு பிறகு, நிறுவனத்தின் வருவாயும் லாபமும் தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு வரும் நிலையிலும், அவர் தனது இந்தத் முடிவை 2026 நிதியாண்டிலும் தொடர்ந்து கடைப்பிடித்துள்ளார்.
இந்த 6 ஆண்டுகளில் அவர் சம்பளம், இதர படிகள், சலுகைகள், கமிஷன், ஓய்வூதியப் பலன்கள் அல்லது நிறுவனத்தின் பங்கு விருப்பத் தேர்வுகள் (Stock options) என எதையுமே பெறவில்லை. எனினும், ரிலையன்ஸ் பங்குகள் மூலம் அவருக்குக் கிடைக்கும் லாபப் பங்கு (Dividends) மட்டுமே அவரது முதன்மை வருவாயாக உள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்குப் பரிந்துரைத்துள்ள ரூ.6 லாப பங்கு (Dividend) என்ற அடிப்படையில், முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களுக்குச் சுமார் ரூ. 4,000 கோடிக்கும் மேல் டிவிடெண்ட் வருவாய் கிடைக்கிறது.
கோவிட் காலத்திற்கு முன்பே கூட, கடந்த 2009 நிதியாண்டு முதல் 2020 வரை நிறுவனத்தின் லாபம் பல மடங்கு உயர்ந்த போதும், முகேஷ் அம்பானி தனது வருடாந்திர ஊதியத்தை ரூ.15 கோடியாக அவராகவே நிர்ணயித்துக் கொண்டு, 12 ஆண்டுகள் தொடர்ந்து அதே அளவில் பராமரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் உயர் அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஊதிய விவரங்கள்
முகேஷ் அம்பானி ஊதியம் பெறாத நிலையில், நிறுவனத்தின் செயல் இயக்குநர்களான அவரது உறவினர்கள் நிகில் மேஸ்வானி மற்றும் ஹிரல் மேஸ்வானி ஆகியோர் 2026 நிதியாண்டில் தலா ரூ.25 கோடி சம்பளமாகப் பெற்றுள்ளனர்.
இவர்களின் சம்பள விகிதம் கடந்த ஆண்டைப் போலவே மாற்றமின்றித் தொடர்கிறது. மற்றொரு செயல் இயக்குநரான பி.எம்.எஸ். பிரசாத், சம்பளம் மற்றும் இதர சலுகைகளுடன் சேர்த்து ரூ.20.58 கோடி ஊதியமாகப் பெற்றுள்ளார்.
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, நிறுவனத்தின் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்ட பிறகு, 2026 நிதியாண்டில் தனது முதல் முழுமையான ஊதியமாக ரூ.12.17 கோடியைப் பெற்றுள்ளார்.
முகேஷ் அம்பானியின் மற்ற இரு பிள்ளைகளான இஷா அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானி ஆகியோர் முறையே ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்றும் ஜியோ நிறுவனங்களின் நிர்வாகக் குழுவில் இருக்கிறார்கள். இவர்கள் நேரடியாக முழுநேரச் சம்பளம் பெறாமல், தங்களது நிறுவனங்களின் கூட்டங்களில் பங்கேற்பதற்கான அமர்வுக் கட்டணம் (Sitting fees) மற்றும் கமிஷன் தொகையாக தலா ரூ.2.5 கோடிக்கும் அதிகமாகப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் அசுர வளர்ச்சி (FY26 நிதி நிலைமை)
சர்வதேச அளவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் எரிசக்தி சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும், ரிலையன்ஸ் நிறுவனம் 2026 நிதியாண்டில் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் (PAT) முந்தைய ஆண்டைவிட 17.8% அதிகரித்து ரூ.95,754 கோடியை எட்டியுள்ளது. இது இந்திய கார்ப்பரேட் வரலாற்றிலேயே ஒரு நிறுவனம் ஈட்டிய அதிகபட்ச லாபமாகும்.
இதன் மூலம் 10 பில்லியன் டாலர் வருடாந்திர நிகர லாபத்தைக் கடந்த முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையையும் ரிலையன்ஸ் பெற்றுள்ளது.
நிறுவனத்தின் மொத்த வருவாய் முந்தைய ஆண்டை விட 9.8% உயர்ந்து ரூ.11,75,919 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல், ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ₹18,19,103 கோடி ஆக உயர்ந்து, இந்தியாவின் மிக மதிப்புமிக்க நிறுவனமாகத் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
நிறுவனத்தின் மொத்த வருவாயில் ஜியோ (Jio) மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் ஆகிய நுகர்வோர் சார்ந்த வணிகங்கள் மட்டுமே 55%-க்கும் அதிகமான பங்களிப்பை (EBITDA) வழங்கியுள்ளன. குறிப்பாக ஜியோவின் அதிவேக 5G பயன்படுத்தும் பயனாளிகளின் எண்ணிக்கை இந்த நிதியாண்டில் 26.8 கோடியாக உயர்ந்து நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications