நடிகை விஜயலட்சுமி திருமண மோசடி புகார்: சில பல காரணங்களால் போலீசில் சீமான் ஆஜராகவில்லை- வழக்கறிஞர்கள்
சென்னை: நடிகை விஜயலட்சுமியின் திருமண மோசடி புகார் மீதான விசாரணைக்கு "சில பல" காரணங்களால் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராகவில்லை என அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
நடிகை விஜயலட்சுமி சென்னை போலீசில் சீமான் மீது மீண்டும் புகார் கொடுத்திருந்தார். இதனடிப்படையில் விஜயலட்சுமியிடம் முதலில் போலீஸ் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தது. பின்னர் கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்தார் சீமான் என்ற புகாருக்காக விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது.

இதனையடுத்து இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு சீமான் கடந்த 9-ந் தேதி ஆஜராக வேண்டும் என சென்னை போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அப்போது கட்சிப் பணிகள் காரணமாக இன்று சென்னை போலீசில் விசாரணைக்கு ஆஜராவதாக சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து சென்னை வளசரவாக்கத்தில் விசாரணை நடத்த அதிகாரிகள் வருகை தந்திருந்தனர். ஆனால் 2-வது முறையாக சீமான் இன்றும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக வழக்கறிஞர்கள் குழுவினர் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராகினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சீமானின் வழக்கறிஞர்கள் குழுவினர் கூறியதாவது: இன்றைய விசாரணைக்கு "சில பல" காரணங்களால் சீமான் ஆஜராகவில்லை. இந்த சம்மன் தொடர்பாக சீமான் தரப்பில் போலீசில் 2 கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அதில், 2008ல் நடந்ததாக சொல்லப்படுகிற சம்பவம் குறித்து 2011-ல் நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்தார். பின்னர் இதே வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இருதரப்பும் சமரசமாக செல்வதால் புகார் மனுவை திரும்பப் பெறுவதாக கைப்பட் எழுதிக் கொடுத்திருந்தார். தற்போதைய விசாரணை என்பது 2011-ல் முடித்து வைக்கப்பட்ட புகாரின் தொடர்ச்சியா? என்பதை தெரியப்படுத்த கோரி ஒரு கடிதம் கொடுத்திருக்கிறார் சீமான்.
மற்றொன்று, தற்போது ஏதேனும் புதிய வழக்கு பதியப்பட்டு அதன் மீது விசாரணைக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதா? அல்லது 13 ஆண்டுகளுக்குப் பின், பழைய வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றத்தின் ஒப்புதல் கடிதம் ஏதேனும் பெறப்பட்டுள்ளதா? இந்த சந்தேகங்களுக்கு பதில் தரும் நிலையில் அதனடிப்படையில் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரப்படும் எனவும் சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த கடிதங்கள் தற்போது போலீசாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சீமான் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications