நாயக்கனேரி பட்டியலின ஊராட்சி தலைவர் ஏன் பதவியேற்கவில்லை? உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு தெரியுமா?
சென்னை: நாயக்கனேரி பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர் பதவியேற்பு விவகாரத்தை மையப்படுத்தி ஆளுநர் ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ரவி, தமிழக அரசு சமூக நீதி பற்றி பேசினால் மட்டும் போதுமா, 2 ஆண்டுகளுக்கு முன் தேர்வான பட்டியலின ஊராட்சி தலைவர் இன்னும் பதவியேற்க முடியாத சூழல் உள்ளதாக விமர்சித்தார்.

பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர் ஏன் பதவியேற்கவில்லை? உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு என்ன? என்பது பற்றியெல்லாம் இங்கே பார்க்கலாம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள மலைக்கிராமமான நாயக்கனேரி, கடல் மட்டத்திலிருந்து 3,024 அடி உயரத்தில் உள்ளது. மொத்த மக்கள் தொகை 4,270 பேரில் 3,108 பேர் பழங்குடியின மக்கள். மீதமுள்ளவர்கள் அனைவரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தட்டப்பட்டோர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
இந்தச் சூழலில் நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிடத்தை பட்டியலின பெண்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் எப்படி ஒதுக்கலாம் எனக் கேட்டும் ஊராட்சி தலைவராக பட்டியலின பெண் இந்துமதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது செல்லாது எனவும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சிவக்குமார் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அதே போல் மாநில தேர்தல் ஆணையத்தின் இந்த சுழற்சி முறை ஒதுக்கீட்டை எதிர்த்தும் ரிட் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணை 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, 1996 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பழங்குடியினர் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டதாகவும் அதன் பிறகு 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் தான் 2021 தேர்தலில் சுழற்சி முறையில் பட்டியலின பெண்கள் பிரிவுக்கு நாயக்கநேரி ஊராட்சி தலைவர் பதவியிடம் ஒதுக்கப்பட்டதாக மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
இதனிடையே மனுதாரரான நாயக்கனேரி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சிவக்குமார், நாயக்கனேரியில் பட்டியலின மக்களே இல்லாத போது எதற்காக இந்த சுழற்சி முறை கையாளப்பட்டது என வினையுள்ளதோடு நாயக்கனேரிக்கும் பட்டியலின பெண் தலைவர் இந்துமதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இப்படியாக வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் 2021 அக்டோபர் 7ஆம் தேதி நீதிபதிகள் வைத்யநாதன் மற்றும் நக்கீரன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், The learned Government Counsel submitted that the election is unopposed. Since this Court feels that the place is not meant to the person of this category, we make it clear that she shall not take charge..." (போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஒதுக்கப்பட்ட இடத்துக்குரிய பிரிவைச் சேர்ந்தவராக இந்நபர் இல்லை என்று இந்த நீதிமன்றம் கருதுகிற காரணத்தால் சம்பந்தப்பட்ட நபர் பொறுப்பேற்கக் கூடாது என்று தெளிவாக்குகிறோம்.) என இடைக்கால தடை விதித்தது.
இதன் காரணமாகவே நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவராக பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த இந்துமதி பதவியேற்க முடியவில்லை. இதனால் இதற்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை என்பதை ஆளுநருக்கு அறிக்கை மூலம் பதிலடி கொடுத்திருந்தார் துரைமுருகன்.












Click it and Unblock the Notifications