தட்டுல தாளம் போட வெச்சாங்க.. சோறு கிடைக்காத நிலைமை வந்துருச்சு.. மோடி மீது கமல் கடும் தாக்கு
சென்னை: கொரோனா லாக்டவுன் காலத்தில் மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவிக்க அனைவரும் கரவொலி எழுப்ப பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அப்போது பலரும் கூட்டமாக பாத்திரங்களில் ஓசை எழுப்பியது சர்ச்சையானது. தற்போது இதனை கடுமையாக விமர்சித்திருக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.
Recommended Video
சென்னையை கொரோனாவிடம் இருந்து மீட்க நாமே தீர்வு எனும் இயக்கத்தை தொடங்கியுள்ள கமல்ஹாசன் இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கமல்ஹாசன் பேசியுள்ளதாவது:
தட்டுல தாளம் போடாதே சோறு கிடைக்காதுன்னு எங்கம்மா சொல்லுவாங்க.. எல்லா அம்மாவும் அதைத்தான் சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன். கிட்டதட்ட அது உண்மையாகிடுச்சு.. நான் தட்டுனது உங்க கவன ஈர்ப்புக்காக. மற்றபடி இதுவேலைக்காகாது.. என்னை படம் பிடிக்கிற கேமரா மேன் 12 அடி தூரத்தில் இருக்கிறார். கவலைப்படாதீங்க.

கவிதை என்ன மண்ணாங்கட்டி
கூட்டை அடைய பல மைல் கற்களை நடந்தே கடக்கும் கால்கள்.. இதுல கவிதை என்ன மண்ணாங்கட்டி.. Migrant labourers- கூலித் தொழிலாளர்கள்- தம் சொந்த மாகாணத்துக்கு சென்றடைய கால்கடுக்க நடந்து சென்று பசியால் சாவதை நாம் பார்த்து கொண்டிருக்கிறோம்.

மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள்
நாள், கிழமை மறந்து இயங்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலர்கள், வீழ்ந்து கொண்டிருக்கும் பொருளாதாரம், சிதையும் வாழ்வாதாரம், அன்றாடங் காய்ச்சிகள் பசியால் மரணம் நம் எல்லோருடைய அலட்சியம்.. இதையெல்லாம் பார்க்கும் போது கோபம் கோபமா வருது, கொள்ளை நோயை சரியான முறையில் அணுகியிருந்தால், அரசு இப்படி செய்திருந்தால், அரசு அப்படி செய்திருந்தால்.. இதெல்லாம் சொல்லி முடிச்சாச்சு

சில்லறை அரசியலுக்கு நேரம் இல்லை
ஆனால் இது விமர்சனங்களுக்கான நேரம் இல்லை. இது சில்லறை அரசியலுக்கான நேரமும் இல்லை. நாளை என்ன நடக்கும்? இன்று நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதற்கான நேரம். ஆக்கப்பூர்வமான செயல்களுக்கான நேரம். இது நாமே தீர்வாகும் நேரம். கொரோனா வந்தா மரணந்தான் அப்படிங்கிற தவறான எண்ணத்தைத் தூக்கி எறிவோம்.

நாமே தீர்வு இயக்கம்
மனித குலத்தை தாக்கிய மற்ற நோய்கள் போல இதையும் நாம் புரிஞ்சுகிட்டோம்னா வென்றுவிடலாம். வென்றிருக்கிறோம். அதனால் வெல்வோம். சென்னை- நம் மருத்துவ வசதிக்கான தலைநகரம். அதை கொரோனாவுக்கான தலைநகரமாக மாற்றிவிடக் கூடாது. இதற்கான புதிய முயற்சிதான் நாமே தீர்வு எனும் இயக்கம். இது ஒரு தனிமனித இயக்கம் அல்ல.

தொண்டர்களாக இணைவோம்
நாம் அனைவரும் பங்கெடுக்கும் இயக்கம். பங்கெடுக்க வேண்டிய இயக்கம். இனிவரும் சில வாரங்களுக்கு ஜாதி, இனம், மதம், மொழி, கட்சி பேதங்களை மறந்து ஒரு கூட்டில் இணைவோம். இந்த முயற்சியின் முதல் தொண்டன் நான். இன்னும் நிறைய தொண்டர்கள் தேவை. வாருங்கள் நாமே தீர்வாவோம். நாளை நமதே. இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications