பரந்தூர் ஏர்போர்ட் ஓகே.. ஆனா பிரதமர் திறந்த மீனம்பாக்கம் ஏர்போர்ட் முனையத்தை பார்த்தீர்களா! வாவ் செம
சென்னை: பிரதமர் மோடி இன்று சென்னை மீனம்பாக்கம் ஏர்போர்ட்டில் புதிய ஒருங்கிணைந்த முனையத்தைத் தொடங்கி வைத்தார். இது சென்னை ஏர்போர்ட்டில் பயணிகளின் அனுபவத்தை தலைகீழாக மாற்றப்போகிறது.
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று தமிழ்நாடு வந்துள்ளார். ஹைதராபத்தில் பல திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அங்கிருந்து தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்துக்கு வந்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். அங்கிருந்து புதிதாகக் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்திற்கு வந்தார். இந்த புதிய முனையத்தை அவர் திறந்து வைத்தார்.
சென்னையில் புதிய முனையம்: பல நூறு கோடி செலவில் 1.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய முனையத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் விமான போக்குவரத்திற்கும் விமான பயணிகளுக்கும் இது முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இது சென்னை ஏர்போர்ட்டை முழுமையாக மாற்றும். சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
அங்கே விமான நிலையத்தில் பயணிகள் வருகை அதிகமாக இருப்பதால் வெளிநாட்டினர் பல சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். இணையத்தில் பார்த்தாலும் பல சர்வதேச பிளைட் ரிவியூவர்கள் சென்னை ஏர்போர்ட் மீது பல கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருப்பார்கள். இதுபோன்ற பிரச்சினைகளைச் சரி செய்யவே இப்போது புதிய ஒருங்கிணைந்த முனையம் கட்டப்பட்டுள்ளது.
ஏன் முக்கியம்: ₹ 1,250 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய முனையத்தின் முதல் கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. இது சென்னையின் உள்கட்டமைப்புக்கு முக்கியமானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி இது கனெக்டிவிட்டியை அதிகரிக்கும் என்றும் உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்த உதவும் என்றும் ட்வீட் செய்திருந்தார்.
இப்போது சென்னை விமான நிலையம் ஓராண்டிற்கு 2.3 கோடி விமானிகளைக் கையாளும் திறனைக் கொண்டுள்ளது. இந்த புதிய T-2 கட்டிடம் ஏர்போர்ட்டை ஓராண்டிற்கு 3 கோடி பயணிகளைக் கையாளும் திறனைத் தரும். இந்த புதிய முனையத்தில் 100 செக்-இன் கவுண்டர்கள், 108 குடிவரவு கவுண்டர்கள், 17 எஸ்கலேட்டர்கள் மற்றும் 17 லிஃப்ட்கள் உள்ளன.
பயணிகள் அனுபவம்: இந்த புதிய ஒருங்கிணைந்த முனையம் 2.20 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் விமான போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய கட்டிடம் அதைப் பூர்த்தி செய்யும். இந்த புதிய முனையத்தில் 108 குடிவரவு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து கிளம்பும் பயணிகள், வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் என இரு தரப்பிற்கும் இது சரிபாதியாகப் பிரிக்கப்படுகிறது. இது விமான பயணிகளின் அனுபவத்தை நிச்சயம் மேம்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.
இந்த புதிய ஒருங்கிணைந்த முனையம் அதிநவீன வசதிகளைக் கொண்டிருந்தாலும் இந்தியாவின் டச்சும் இதில் இருக்கவே செய்கிறது. பாரம்பரிய கோலம், ரங்கோலி அல்லது அலங்காரம் இந்த முனையத்தில் இருக்கிறது. மேலும், தமிழர்கள் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் புடவைகள், கோயில் மாதிரிகள் உள்ளிட்டவையும் இதில் இருக்கிறது. சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் வகையில், குறிப்பாக கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் வகையிலும் இதில் சில அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

பரந்தூர் ஏர்போர்ட்: தமிழ்நாட்டில், அதுவும் குறிப்பாகத் தலைநகர் சென்னையில் விமான போக்குவரத்து தொடர்ந்து அதிகரிக்கிறது. மீனம்பாக்கம் ஏர்போர்ட்டால் அதைச் சமாளிக்க முடிவதில்லை. இதன் காரணமாகச் சென்னையில் பரந்தூரில் புது ஏர்போர்ட் கட்ட முடிவு செய்துள்ளனர். இருப்பினும், நிலம் கையகப்படுத்தும் பணிகளே இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.
இதன் பிறகு கட்டுமான பணிகள் தொடங்கி அது நிறைவடையவே குறைந்தது சில ஆண்டுகள் ஆகிவிடும். அதுவரை இந்த புதிய முனையம் அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கையைச் சமாளிக்க உதவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications