கையோடு கூட்டி வாங்க! சொதப்பிய அண்ணாமலை திட்டம்! மோடி வர நேரம் பார்த்து தாமரைக்கு இப்படியா ஆகணும்?
சென்னை: கோவையில் மாற்று கட்சியினர் பலர் பாஜகவில் இணைய போவதாக அண்ணாமலை கூறி இருந்த நிலையில் அந்த விழா சொதப்பலாக முடிந்தது. இந்த சம்பவம் தமிழக பாஜகவினர் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் பேட்டி ஒன்றில்.. மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைய போகிறார்கள். அதிமுக உள்ளிட்ட கட்சியின் பிரபலங்கள் இணைய போகிறார்கள். 26ம் தேதி இந்த இணைப்பு விழா நடக்கும் என்று கூறி இருந்தார். பெரிய நிர்வாகி இணைய போகிறார் என்பது போல அண்ணாமலை மிகவும் ஆக்ரோஷமாக இந்த ஸ்டேட்மெண்டை கொடுத்தார்.

பாஜக ஆசை: இதையடுத்து பாஜக நெட்டிசன்கள் தொடங்கி செல்வகுமார் போன்ற நிர்வாகிகள் வரை பலர் இணையத்தில் துள்ளிக்குதிக்க தொடங்கினர். மாயவரத்தில் கூப்பிட்டாங்க.. மன்னார்குடியில் கூப்பிட்டாங்க என்று சொல்வது போல.. இவர் வர போகிறார்.. அவர் வரப்போகிறார்.. அதிமுகவின் கொங்கு சிங்கத்தையே தூக்கிட்டோம் என்றெல்லாம் பாஜகவினர் போஸ்ட் போட தொடங்கினர்.
இதனால் பல அதிமுக தலைகள் பெயர்களும் அடிபட்டது. அதிமுகவின் மணியான ஒருவர் பெயர் இதில் பலமாக அடிப்பட்டது. அதோடு அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டே என்று ஒருவரின் புகைப்படத்தை வேறு போட்டு பாஜகவினர் புளங்காகிதம் அடைந்தனர். சரி.. கொங்கில் அதிமுக "சோலி முடிஞ்சது" என்றுதான் இந்த போஸ்ட்டுகளை பார்த்த பலரும் நினைத்தனர்.
எல்லாம் ரெடி: இதையடுத்து செய்தியாளர்களிடமும் அண்ணாமலை ரெசிடன்ஸி ஹோட்டல் வரும்படி கூறி இருந்தார். 6.30 மணிக்கு நிகழ்ச்சி நடப்பதாக இருந்தது. ஆனால் நேரம் செல்ல செல்ல.. யாருமே அங்கே இல்லை. அண்ணாமலையும் வரவில்லை. அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டேக்களும் வரவில்லை.
ஒரே ஒரு நாம் தமிழர் நிர்வாகி தவிர மாற்று கட்சியினர் யாருமே அங்கு இல்லை. இதனால் செய்தியாளர்களும் பொறுமை இழக்க தொடங்கினர். இணையத்திலும் பாஜகவை கலாய்க்கும் வைபோகம் தொடங்கி இருந்தது. யாரோ வருவாங்கன்னு சொன்னிங்க.. யாரையும் காணோம்.. ஏன் அண்ணாமலையே காணோம்.. எவரையாவது கண்டா வரச்சொல்லுங்க என்று செய்தியாளர்கள் அந்த ஹோட்டலில் கேட்கும் நிலை ஏற்பட்டது.
பிம்பிளிக்கா பிளாப்பி: ஆனால் கடைசி வரை வேற்று கட்சி நிர்வாகிகள் யாரும் வரவில்லை. பாஜக மூத்தத் தலைவர்கள் சுதாகர் ரெட்டி, எல். முருகன், வானதி சீனிவாசன் ஆகியோர்தான் வேறு வழியின்றி கடைசியில் மேடைக்கு வந்தனர். அவர்கள் வந்து.. மோடி நாளை வருவதால் இப்போது இந்த நிகழ்ச்சி நடத்தினால் சரியாக இருக்காது. அதனால் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழாவை தற்காலிகமாக தள்ளி வைக்கிறோம்.
இதற்கு பின் வேறு காரணங்கள் இல்லை. மோடி வருவது, பாதுகாப்பு காரணங்கள் ஆகியவைதான். விரைவில் அதற்கான விழா நடக்கும் என்று கூறி சமாளித்தனர். இதை பார்த்து ஆர்வமாக இருந்த பாஜக நிர்வாகிகள்.. என்ன இப்படி ஏமாத்திட்டாங்களே என்று புலம்ப தொடங்கினர்.
அண்ணாமலை எங்கே: இன்னொரு பக்கம் கட்சி தலைவர் அண்ணாமலை தானே இப்படி மாற்று கட்சியினர் இணைய போவதாக சொன்னார். அவர்தானே இப்போது வந்து விளக்க வேண்டும். அதைவிட்டு தலைவராக இறங்கி வந்து பேசலாம்.. மூத்த நிர்வாகிகள் முருகன், வானதியை அனுப்பி சமாதானம் செய்வது எப்படி சரியாக இருக்கும். இதுதான் தலைமையா? என்றும் நெட்டிசன்கள் கேட்க தொடங்கி விட்டனர்.
பாஜக பேச்சு: மோடி வருகை எல்லாம் இதற்கு காரணம் இல்லை. அந்த நிர்வாகி அதிமுகவில் இருந்து "இப்போதைக்கு" பாஜக வர ரெடியாக இல்லை. அதனால் இணைப்பு விழா ரத்தாகிவிட்டது. பின்னர் நடக்கலாம். இனிமேல் முன்கூட்டியே அறிவிக்கலாம்.. இணைக்கப்படும் நிர்வாகிகளை அண்ணாமலை கையோடு கூட்டி வருவதே சரியாக இருக்கும் என்று பாஜக நிர்வாகிகள் கிசுகிசுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications