வெறும் ஆயிரம் ரூபாய்க்கே மக்கள் விழுந்து விடுவார்களா.. தப்புக் கணக்கு போடுகிறதா அதிமுக?
பொங்கல் பரிசாக 1000 ரூபாயை எதற்காக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்?
Recommended Video

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய் பரிசு தருவது வருங்கால அரசியலில் லாபத்தை ஈட்டித்தரும் என்று ஆளும் தரப்பு கணக்கு போடுகிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக பொங்கல் பரிசாக, இலவச வேட்டி, சேலையுடன் அரிசி, வெல்லம் போன்ற பொருட்களை ரேஷனில் தருவார்கள். இதுதான் இத்தனை காலமாக நடந்து வந்தது.
ஆனால் எந்த வருடமும் இல்லாத வகையில், இந்த முறை அதிரடியாக, அனைத்து ரேசன் கார்டுகளுக்கும், 1000 ரூபாய் பரிசுப் பணம் என்று அறிவிக்கப்பட்டது விவாத பொருளாகி விட்டது.

தள்ளுமுள்ளு மரணம்
ஒரு பக்கம் இதை வாங்குவதற்காக, ரேசன் கடைகளில், மக்களிடையே, தள்ளு முள்ளு ஏற்பட்டு மரணம் வரை போய்விட்டது. மற்றொரு பக்கம் அரசின் நிதியிலிருந்து இந்த பணத்தை ஏன் வழங்குகிறீர்கள், கட்சி பணத்தை செலவு செய்வதுதானே? என்று கோர்ட் சாட்டையடி கொடுத்துள்ளது.

ஏன் பணம் தரவில்லை?
இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் "இது அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் தலையிடக்கூடாது, மக்கள்தான் இதனை தீர்மானிக்க வேண்டும். பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில்தான் பணம் தரப்படுகிறது என்கிறார். அப்படியானால் இத்தனை வருஷங்களாக வந்து போன பொங்கலுக்கு ஏன் அரசு பணம் தரவில்லை என்ற கேள்வி எழுகிறது.

எதற்காக இத்திட்டம்?
இதேபோல, அடுத்தடுத்து பல திட்டங்களையும் செயல்படுத்தி அடித்தட்டு மக்களை கவர ஆளும் தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் எதற்காக இப்படி ஒரு திட்டம்? எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் கோர்ட் வரை சென்று போராடி கொண்டிருக்க காரணம் என்ன? என விளங்கவில்லை. இலவசங்கள் எதற்கு என்று நீதிமன்றம் நேற்று எழுப்பிய கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

விடிவு எப்போது?
தமிழகத்தில் நல்ல சாலைகள், குடிநீர் வசதிகள் இன்றும் சரிவர இல்லாத பகுதிகள் நிறைய இருக்கின்றன. இவ்வளவு காலம் ஆகியும் உள்ளாட்சி தேர்தலை கூட நடத்த அரசால் முடியாமல் உள்ளது. இதை நடத்தினால்தான் மத்திய அரசு நிதியும் நமக்கு கிடைக்கும், அதன்மூலம்தான் கிராமங்களுக்கு விடிவு பிறக்கும்.

எதற்காக ரூ.1000
இன்னும் கஜாபுயல் நிவாரணங்கள் முழுசாக போய் சேரவில்லை. புயலால் பாதிக்கப்பட்டவர்களும் மீண்டு வர முடியவில்லை. ஆனால் இது எல்லாவற்றையும் விட்டுவிட்டு, 1000 ரூபாயை தருகிறோம் என்று ஆளும் கட்சி சொல்வது எதற்காக? வெறும் 1000 ரூபாயில் நம் மக்கள் விழுந்து விடுவார்களா? அல்லது 1000 ரூபாயில் மேற்கண்ட குறைகளும், அதிருப்திகளும் ஈடுகட்டப்படுமா?

இலவச மோகம்
ஆனால் மக்களை இன்னமும் ஏமாந்த சோணகிரியாகவும், இலவசம் மோகம் பிடித்து ஆடும் பிம்பமாகவும் நினைத்தால், அது அப்படி நினைப்பவர்களுக்கு எதிராகவே திரும்பும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் அறிந்தால் சரி.












Click it and Unblock the Notifications