வந்தே பாரத்.. வராத பிரதமர்! கடைசி நேரத்தில் கட் ஆன ப்ளான்.. நரேந்திர மோடியின் தமிழக வருகை ரத்து ஏன்?
சென்னை: சென்னை - நாகர்கோயில் வந்தே பாரத் ரயில் சேவை உள்ளிட்ட நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்தத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட என்ன காரணம் என்பது குறித்தான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.

அவருடன் அமைச்சரவையும் பதவி ஏற்றுக்கொண்டது. குறிப்பாக ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்டவர்களோடு கட்சியின் தேசிய தலைவரான ஜே பி நட்டா உள்ளிட்ட 71 மத்திய அமைச்சர்கள் பதவி ஏற்று கொண்டனர்.
தொடர்ந்து முதல் வெளிநாட்டு பயணமாக இத்தாலியில் நடைபெற்ற ஜி 7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அந்த மாநாட்டில் அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார். இதை அடுத்து இந்தியா திரும்பினார் பிரதமர்.
இதனைத் தொடர்ந்து வரும் 20ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. மக்களவை தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் பலமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். ஆனால் தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் பிரதமர் மோடி சென்னை வருவதற்கான பயணத்திட்டங்கள் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் 20ஆம் தேதி அவர் வருவார் என அறிவிக்கப்பட்டது.
பிரதமராக பதவி ஏற்றதற்கு பிறகு முதல் முறையாக அவர் வர இருப்பதால் பாஜகவினர் உற்சாகத்தில் இருந்தனர். அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தனர். சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோயில் வரையிலான வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் சென்னை ஃபேஷன் பிரிட்ஜ் யார்டு புதிய ரயில்வே பணிமனைக்கு அடிக்கல் நாட்டுவது, இரட்டை ரயில் பாதை திட்டம் உள்ளிட்டவற்றை நாட்டுக்கு அர்ப்பணிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இது மட்டுமல்லாமல் மேலும் பல நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ரயில்வே தரப்பில் விசாரித்த போது பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை வேறு நிகழ்ச்சிகள் மற்றும் நிர்வாக காரணங்கள் காரணமாக மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், வேறு எதுவும் பிரச்சனையும் இல்லை என கூறினர். மேலும் நரேந்திர மோடியின் தமிழக வருகை ரத்து செய்யப்படவில்லை எனவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவே தெரிவித்துள்ளனர். எனவே வரும் நாட்களில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவார் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications