என்ன ஆனாலும்.. அவர் "பேச" வாய்ப்பே இல்லையாம்.. ரஜினிக்கு தாதா சாகேப் அவார்ட்.. நடந்தது என்ன?
சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு 51வது தாதா சாகேப் பால்கே விருதை வழங்கி கவுரவித்து உள்ளது. ரஜினிக்கு வழங்கப்பட்ட விருது அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளது..முக்கியமாக ரஜினி அடுத்து செய்ய போகும் மூவ் என்ன என்ற கேள்வி எழுந்து உள்ளது!
Recommended Video
அரசியலுக்கு வர மாட்டேன்.. உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்று கூறி ரஜினிகாந்த் அரசியலில் இருந்தே ஒதுங்கிவிட்டார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார், பாஜக கூட்டணியை ஆதரிப்பார், திமுகவிற்கு எதிராக இவரை முன்னிறுத்தலாம் என்று பாஜக பெரிய அளவில் கனவு கண்டது.
ஆனால் ரஜினிகாந்தோ.. புலி வருது புலி வருது என்று கூறிவிட்டு, பின் மொத்தமாக அரசியலில் நுழையவில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத பாஜக ரஜினியின் முடிவால் அப்போதே அதிர்ச்சியில் இருந்தது.
வாய்ஸ்
சரி ரஜினிதான் வரவில்லை.. அட்லீஸ்ட் ரஜினி தேர்தல் நேரத்தில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக வாய்சாவது கொடுப்பார் என்று பாஜக நம்பியது. ஆனால் ரஜினியோ அண்ணாத்த பட ஷூட்டிங்கில் பலருக்கு கொரோனா ஏற்பட்டதும் வீட்டுக்கு உள்ளேயே தனிமைப்படுத்திக்கொண்டார். அதன்பின் அண்ணாத்தே ஷூட்டிங் தொடங்கிய பின்பும் பெரிதாக ரஜினிகாந்த் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
மொத்தமாக அமைதி
மொத்தமாக ரஜினிகாந்த வீட்டிற்கு உள்ளேயே அமைதியாகிவிட்டார். தேர்தல் நேரத்தில் அதை பற்றி ஒன்றுமே பேசாமல், அப்படியே அமைதியாகிவிட்டார். ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட் போட்டே பல வாரங்கள் ஆகிறது. பாஜக பற்றியும் பேசவில்லை.. நண்பர் கமல் பற்றியும் ரஜினிகாந்த் பேசவில்லை. இப்படி இருக்கும் போதுதான் ரஜினிகாந்துக்கு பாஜக தூது அனுப்பி உள்ளது.
விருது
ரஜினிக்கு மத்திய அரசு இப்போது கொடுத்து இருக்கும் தாதா சாகேப் பால்கே விருது அவருக்கு அனுப்பப்பட்ட தூதாகவே பார்க்கப்படுகிறது. விருது எல்லாம் கொடுக்கிறோம்.. கொஞ்சம் வாய்ஸ் மட்டும் கொடுங்க என்று பாஜக சொல்லாமல் சொல்லி உள்ளதாக நெட்டிசன்கள் புகார் வைத்துள்ளனர். ஏதாவது செய்து ரஜினியின் ஆதரவை தேர்தலுக்கு முன் பெற்று விடலாம் என்பதில் பாஜக உறுதியாக இருப்பதாகவே நெட்டிசன்கள் சந்தேகிக்கிறார்கள்.
ஆனால்
ஆனால் ரஜினியோ பாஜகவிற்கு வாய்ஸ் கொடுக்கவே மாட்டார் என்றுதான் போயஸ் கார்டன் வட்டாரங்கள் கூறுகின்றன. முதல் விஷயம் , ரஜினி இப்போது வாய்ஸ் கொடுத்தாலும், அது தேர்தல் முடிவை ஒன்றும் மாற்றாது. பிரச்சாரத்தில் ரஜினி வாய்ஸ் இனிமேல் பெரிய பாதிப்பை எல்லாம் ஏற்படுத்தாது. அடுத்ததாக தேர்தலில் திமுகதான் வெல்லும் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
திமுக
திமுகவிற்கு ஆதரவாக கருத்து கணிப்புகள் வரும் போது, தேவையின்றி திமுகவை பகைத்துக்கொண்டு , சினிமாவில் கடைசி கட்டத்தில் கெரியருக்கு சிக்கல் ஏற்படுத்த ரஜினி விரும்ப மாட்டார் . அதிமுகவிற்கு எதிராக களமிறங்கி , சினிமாவை இழந்த நடிகர் வடிவேல் இதற்கு சிறந்த உதாரணம். இதனால் பெரும்பாலும் ரஜினிகாந்த் திமுகவிற்கு எதிராக வாய்ஸ் கொடுப்பதெல்லாம் கஷ்டம் .
ஒதுங்கிவிட்டார்
பாஜகவை ஆதரித்தால் கலாய்க்கிறார்கள், இதெல்லாம் வேண்டாம் என்றுதான் ரஜினி அரசியல் பக்கமே தலைவைத்துப்படுக்கவில்லை. அரசியலில் இருந்து ஒதுங்கிய சசிகலாவாது கோவிலுக்கு செல்கிறேன் என்று வெளியே வருகிறார். ரஜினி அதற்கு கூட தலையை வெளியே காட்டுவது இல்லை. தேர்தல் நேரத்தில் முடிந்த அளவு சைலன்ட் மோடில் இருப்போம் என்று ரஜினி உறுதியாக உள்ளார்.
வாய்ப்பு இல்லை
இதனால் அதிமுக கூட்டணியை ஆதரித்து திமுகவை பகைக்க ரஜினி விரும்பவே மாட்டார். அதே சமயம் இந்த விருது வாங்கியதற்கு ரஜினி ஏதாவது கருத்து சொல்லியே ஆக வேண்டும் . எனவே கண்டிப்பாக ரஜினி ஒரே ஒரு நன்றி டிவிட்டை மட்டும் போட்டுவிட்டு, மீண்டும் அமைதியாகிவிடுவார். தேர்தல் முடிந்த பின்பே ரஜினி சினிமா ஷூட்டிங்கிலும் பிசியாவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிகின்றன.