ரஜினிகாந்த்துக்கு என்னாச்சு.. ஏன் இன்னும் ஓட்டு போடவில்லை.. துடிக்கும் ரசிகர்கள்.. பறக்கும் யூகங்கள்
சென்னை: எப்போதும் வாக்களிக்க ரஜினிகாந்த் காலையிலேயே வந்துவிடுவார், ஆனால் இதுவரை அவர் வராததால் அவர் வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வாக்களிப்பது என்பது ஒவ்வொருவருடைய ஜனநாயக கடமை. பேனா மைக்கு இருக்கும் பவர், ஆற்றலை காட்டிலும், கைவிரலில் வைக்கப்படும் மைக்கு இருக்கிறது என்பார்கள். அந்த வகையில் தனது ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்றும் நடிகர்கள், பிரபலங்களில் ரஜினிகாந்தும் ஒருவர்.
இன்றைய தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. பொதுவாக ரசிகர்கள் கூட்டம் கூடிவிட்டால் அதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் பிரபலங்கள் காலையிலேயே வாக்களித்துவிட்டு செல்வது வழக்கம்.

ரஜினிகாந்த் வாக்களிக்க வரவில்லை
அந்த வகையில் ரஜினிகாந்தும் காலையிலேயே வாக்களிக்க வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ரஜினிகாந்தை நேரில் பார்க்க அவர் எப்போதும் வாக்களிக்கும் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியின் வெளியே ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் அவர் இதுவரையும் வாக்களிக்க வரவில்லை. மேலும் அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக ரஜினிகாந்த் வாக்களிக்க வரமாட்டார் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

ரசிகர்கள் ஏமாற்றம்
இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அண்மையில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை விட்டு அவரது கணவர் தனுஷ் பிரிந்து விட்டார். இதனால் அவரது மனம் மிகவும் வேதனைக்குள்ளாகி இருப்பதை அனைவரும் அறிவர். இந்த நிலையில் ரஜினி வாக்களிக்க வராததற்கு என்ன காரணம் என பல யூகங்கள் பறக்கின்றன. இதுகுறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறுகையில் ரஜினிகாந்தின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் வாக்களிக்க வருவதை அவரது குடும்பத்தினர் அனுமதிக்காமல் இருந்திருக்கலாம்.

ரசிகர்கள் கூட்டம்
காரணம் அவர் வாக்களிக்க வந்தால் அவரை பார்ப்பதற்கு ரசிகர்கள் அதிகம் கூடிவிடுவர். அந்த நெரிசலில் ரஜினி சிக்கி வாக்களித்துவிட்டு அதே நெரிசலில் சிக்கி மீண்டும் வீடு திரும்ப வேண்டும். கொரோனா பரவி வரும் நிலையில் இது போல் கூட்ட நெரிசலில் சிக்க வேண்டாம் என மருத்துவர்கள் ஏற்கெனவே அறிவுறுத்தியதை அவரது குடும்பத்தினர் ரஜினிக்கு நினைவூட்டியிருக்கலாம்.

உடல்நலம் பாதிப்பு
மேலும் ரஜினிகாந்திற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதை அவரே ஒரு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அண்ணாத்த படப்பிடிப்பின் போது ரஜினிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் சிகிச்சை மேற்கொண்டார். உறுப்பு மாற்று சிகிச்சை செய்தவர்களுக்கு எளிதில் நோய் தொற்றுகள் பாதிக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் அறிவுறுத்தியதால்தான் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரப்போவதில்லை என ரஜினி அறிவித்திருந்தார்.

டெல்லி சென்ற ரஜினி
மேலும் அவர் தாதா சாகேப் பால்கே விருதை பெறுவதற்காக டெல்லி சென்றுவிட்டு சென்னை திரும்பிய நிலையில் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ரத்தத்தில் அடைப்பை நீக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து உடல்நலம் தேறி அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

ரசிகர்கள் நம்பிக்கை
இது போல் ரஜினிக்கு அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கூட்ட நெரிசலை தவிர்க்க அவர் வாக்களிக்க வராமல் இருக்கலாம் என கூறுகிறார்கள். ஆனால அவரது ரசிகர்களோ ஜனநாயக கடமை ஆற்றுவதிலிருந்து ரஜினிகாந்த் தவற மாட்டார். எனவே எப்படியும் கூட்டம் குறைந்த நேரத்திலாவது வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications