கொரோனா பெட் மோசடியில் கூட பாஜக எம்பி மத துவேஷம்.. முஸ்லீம்கள் மீது பழிபோட்ட தேஜஸ்வி சூர்யா.. சர்ச்சை
சென்னை: பெங்களூர் மாநகராட்சி கொரோனா வார் ரூமில் இஸ்லாமியர்களை பணிக்கு அமர்த்தியது ஏன் என்று பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா கேள்வி எழுப்பியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா முழுக்க கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில், பெரு நகரங்களில் மருத்துவமனைகளில் பெட் கிடைப்பது குதிரை கொம்பாக மாறியுள்ளது. முக்கியமாக பெங்களூரில் இருக்கும் மருத்துவமனைகளில் எங்கும் பெட் கிடைக்காமல், மக்கள் வேறு நகரங்களுக்கு படையெடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
நிலைமை இப்படி இருக்க பெங்களூரில் பெட் ஒதுக்குவதில் முறைகேடு நடப்பதாக பெங்களூர் தெற்கு தொகுதி பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா புகார் அளித்துள்ளார். ஆனால் இதில் இஸ்லாமியர்கள் மீது அவர் கடுமையான புகார்களை தொடுத்து, மதரீதியாக இந்த பிரச்னையை திசை திருப்பி உள்ளார்.
எப்படி நடக்கிறது
பெங்களூரில் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனை பெட்களை ஒதுக்க பிபிஎம்பி மாநகராட்சி சார்பாக வார் ரூம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வார் ரூமின் உதவி எண்ணுக்கு கால் செய்து எங்கே பெட் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியும். தேவைக்கு தகுந்தபடி பெட்களை புக் செய்து மருத்துவமனையில் சேர முடியும்.
என்ன புகார்
ஆனால், இதில் முறைகேடு நடப்பதாக தேஜஸ்வி கூறியுள்ளார். பெங்களூர் மருத்துவமனைகளில் பெட் இருந்தாலும், இல்லை என்றே கூறுகிறார்கள். பெட்களை மாநகராட்சி அதிகாரிகள் கூடுதல் விலைக்கு விற்கிறார்கள். லஞ்சம் வாங்கிக்கொண்டு கூடுதல் விலைக்கு விற்கிறார்கள். பல மருத்துவமனைகளில் பெட் இருக்கிறது, ஆனால் இதை தர மறுக்கிறார்கள் என்று தேஜஸ்வி கூறியுள்ளார்.
இஸ்லாமியர்கள்
அதேநேரம், இந்த முறைகேட்டிற்கு மாநகராட் வார் ரூமில் பணியாற்றும் 17 இஸ்லாமியர்கள்தான் காரணம் என்று தேஜஸ்வி கூறியுள்ளார். இங்கு பணியாற்றும் இஸ்லாமியர்கள்தான் இந்த முறைகேட்டை செய்தது, அவர்கள்தான் பெட்களை தர மறுப்பது என்று இஸ்லாமிய பணியாளர்கள் மீது மட்டும் போட்டார் தேஜஸ்வி யாதவ்.
|
கூச்சல்
அதோடு இல்லாமல் இன்று பெங்களூர் மாநகராட்சி அமைத்து இருக்கும் வார் ரூமிற்கு சென்று, இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசி உள்ளார். அங்கு பணியாற்றும் இஸ்லாமிய பணியாளர்களின் பெயர்களை சத்தமாக வாசித்து, இவர்கள் ஏன் இங்கே இருக்கிறார்கள்? இவர்களுக்கு யார் வேலை கொடுத்தது. இவர்களை எந்த தகுதியின் அடிப்படையில் பணியில் எடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
எப்படி முடியும்?
தேஜஸ்வி இப்படி இஸ்லாமியர்கள் மீது குற்றஞ்சாட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. அதே சமயம் கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களோ, இதை தேஜஸ்வி தேவையின்றி திசை திருப்புகிறார். அந்த அலுவலகலத்தில் 120 பேர் வேலை பார்க்கிறார்கள். இதில் 17 பேர் மட்டுமே இஸ்லாமியர்கள்.. இவர்களின் பெயர்களை வேண்டுமென்றே தேர்வு செய்து தேஜஸ்வி பிரச்சனை செய்கிறார்.. கொரோனா காலத்திலும் மத மோதலை இவர் உண்டுபண்ணுகிறார் என்று காங்கிரஸ் கட்சியினர் புகார் வைத்துள்ளனர்.
காங்கிரஸ் கேள்வி
இது தொடர்பாக கேள்வி எழுப்பி உள்ள கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார், பெங்களூர் மாநகராட்சி அலுவலர்களை பாஜகதான் நியமிக்கிறது. மாநகராட்சியில் பாஜகதான் பெரும்பான்மை வைக்கிறது. அப்படி என்றால் இந்த முறைகேடு பாஜக மூலம்தான் நடந்துள்ளது. அதை பாஜக எம்பி தேஜஸ்வியே வெளியே கொண்டு வந்துள்ளார். இதை முறையாக விசாரிக்க வேண்டும், டிகே சிவக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.