விஜய்க்கு தர்மசங்கடம்.. "இதை மனதில்" வைத்துதான் மாநாடு வெற்றி விழாவில் எஸ்ஏசி அப்படி பேசினாரா?
சென்னை: மாநாடு பட விழாவில் தமிழக முன்னாள் முதல்வர்கள் குறித்து இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் ஏன் அத்தகைய விமர்சனத்தை முன் வைத்தார் என்ற கேள்வி எழுகிறது.
மாநாடு திரைப்படத்தில் முதல்வர் கேரக்டரில் நடித்திருந்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். இந்த படம் வித்தியாசமான கான்செப்ட் என்பதால் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.
இந்த படத்தின் வெற்றி விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதில் எஸ்.ஏ. சந்திரசேகர் தமிழக முதல்வர்கள் பட்டியலில் தொடங்கி நடிகர் சிம்பு வரை விமர்சனத்தை முன் வைத்துவிட்டார். அவர் கூறுகையில் காமராஜருக்கு பிறகு நல்ல முதலமைச்சரை நாம் பார்க்க முடியவில்லை. முதல்வர் கதாபாத்திரம் நல்லவராக இருப்பதை பலரால் ஏற்க முடியவில்லை. படத்தில் வரும் மத அரசியல் காட்சி இந்தியாவையும் வாரிசு அரசியல் காட்சி தமிழகத்தையும் குறிக்கிறது என தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர்கள்
தற்போது ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார். காமராஜருக்கு பிறகு அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டோர் ஆட்சி செய்திருந்தனர். அவர்களின் ஆட்சி காலத்தின் போது எந்த வித குற்றம் குறையை கண்டுபிடித்து சொல்லாத எஸ்.ஏ.சந்திரசேகர் , ஆட்சியில் இருந்தவர்கள் மறைந்த பிறகு இது போல் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.

காற்றில் ஊழல்
கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான கத்தி திரைப்படத்தில் வெறும் காற்றில் ஊழல் செய்யும் நாடு இது என விஜய் வசனம் பேசியிருந்தார். அப்போது 2ஜி வழக்கு நடைபெற்று வந்தது. எனினும் எஸ்ஏசிக்கும் கருணாநிதிக்கும் இருக்கும் நெருக்கம் காரணமாக இந்த படத்திற்கு எந்த வித எதிர்ப்பும் திமுக தலைமையிடம் இருந்து வரவில்லை.

அதிமுக சார்பில் மிரட்டல்
அடுத்ததாக கடந்த 2016 ஆம் ஆண்டு தலைவா எனும் படம் ரிலீஸானது. அந்த படத்தின் தலைப்புக்கு கீழ் time to lead (தலைமை ஏற்கும் நேரம்) என இருந்தது. விஜய்யை அரசியலுக்கு அழைப்பது போன்ற தலைப்புடைய இந்த படத்தை திரையிடவிடாமல் அதிமுக தடுத்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. மீறி திரையிட்டால் தியேட்டர்களை தாக்குவோம் என அதிமுக சார்பில் மிரட்டல் எழுந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க கொடநாடு எஸ்டேட் வரை சென்ற விஜய் அப்பாயிண்ட்மென்ட் கிடைக்காததால் திரும்பினார்.

திமுக ஆதரவு களம்
இதையடுத்து விஜய் ஆதரவாக திமுக களத்தில் இறங்கியது. திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன், தானே இந்த படத்தை திரையிட தயார் என்று தெரிவித்திருந்தார். எனினும் அந்த படம் எப்படியோ திரையிடப்பட்டது. புலி திரைப்படத்தில் கொடுங்கோல் அரசியாக நடிகை ஸ்ரீதேவி நடித்திருப்பார். இது ஜெயலலிதாவை விமர்சித்து எடுக்கப்பட்ட படம் என விமர்சிக்கப்பட்டது. இந்த படத்திற்காக "கொடுங்கோல் அரசியிடமிருந்து ராஜ்ஜியத்தைக் காப்பாற்றும் ஹீரோ" என சிம்புதேவன் சொன்ன ஒன் லைன் ஸ்டோரியை வைத்துக் கொண்டு யாரோ தவறாக பிரச்சாரம் செய்ததால் இந்த படத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டு , படம் ரிலீசானதும் சரி செய்யப்பட்டது.

இசை வெளியீட்டு விழா
அது போல் சர்கார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட அதிமுக ஆட்சியை விஜய் மறைமுகமாக விமர்சனம் செய்திருந்தார். 40 ஆண்டுகளுக்கு முன்னர் எம்ஜிஆர் ஆட்சியில் தன்னுடைய படத்திற்கு எதிர்ப்பு வந்ததாக எஸ் ஏ சந்திரசேகர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். தனது மகனின் படத்திற்கு அதிமுகவிலிருந்து தொடர்ந்து எதிர்ப்புகள் வந்ததால் இத்தகைய விமர்சனத்தை எஸ்ஏ சந்திரசேகர் முன் வைத்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video

விஜய் சைக்கிள் பயணம்
கடந்த சட்டசபை தேர்தலில் கூட விஜய் கருப்பு சிகப்பு நிற சைக்கிள், ஹெல்மெட் அணிந்து வாக்குச் சாவடிக்கு சென்றது பெரியளவில் பேசப்பட்டது. இந்த நிலையில் எஸ்ஏசி பேசியது விஜய்க்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும் என்றே சொல்லப்படுகிறது. காரணம் அண்மைக்காலமாக தனது திரைப்படங்களில் மத்திய அரசை கண்டித்தே வசனங்கள் இருக்கும் நிலையில் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் ஆட்சி செய்த முதல்வர்களை இவ்வாறு எஸ்ஏசி கூறியிருப்பது நிச்சயம் பல எதிர்ப்புகளையும் வீண் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் என விஜய் நினைப்பதாக தெரிகிறது. மேலும் விஜய் அரசியலுக்கு வர நேரம் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் எஸ்ஏசியின் தேவையற்ற பேச்சுகள் அரசியல் பயணத்திலிருந்து அவரை பின்வாங்கும் முடிவை எடுத்து விடுமோ என ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications