"திராவிடமா" தமிழ் தேசியமா.. நீயா நானா.. வெடித்தது விவாதம்.. இந்திய அளவில் டிரெண்டாகும் சீமான்!
ஸ்டாலினுக்கு எதிராக சீமான் ஏன் போட்டியிட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது
சென்னை: ஒத்த பேட்டி மூலம் மொத்த இந்தியாவையும் தன் பக்கம் இழுத்துள்ளார் சீமான்.. அப்படி ஒரு அஸ்திரத்தை அவர் கையில் எடுத்திருக்கிறார்.. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பாகியுள்ளது.
சீமானை பொறுத்தவரை, "என் வழி தனி வழி"தான்.. இதுவரை தனித்தே போட்டியிட்டு வந்த அவர், சட்டசபைத் தேர்தலில் கமலுடன் இணைவார் என்று கிசுகிசுக்கப்பட்டது.. ஆனால், என்னமோ தெரியவில்லை அந்த செய்தி காற்றோடு போய்விட்டது... தொடர்ந்து தனித்தே களம் காண்கிறார்.
அத்துடன், ஆரம்பம் முதலே திமுகவை ஓபனாக அட்டாக் செய்து வரும் சீமான், இந்த முறை தனக்கு போட்டியே ஸ்டாலினுடன்தான் என்று அறிவித்துள்ளார்.. ஸ்டாலின் எங்கு போட்டியிடுகிறாரோ, அங்குதான் தானும் போட்டியிட போகிறேன் என்கிறார். இதுதான் அனைவரையும் அதிர வைத்துள்ளது. நேரடியாக ஸ்டாலினுடன் மோதப் போவதாக சீமான் கூறியிருப்பதால் திமுகவினரும் பதட்டமாகியுள்ளனர்.
லோக்சபா தேர்தல் மாதிரி.. திமுக வெற்றி ஈஸியில்லை..
சீமான்
இந்த முறை திருவொற்றியூரில் போட்டியிட இருந்த நிலையில், திடீரென ஏன் சீமான் ஸ்டாலினுடன் மோத வேண்டும்? என்ன காரணம்? என்கிற கேள்வியும் எழுகிறது. பொதுவாக, ஒரே தொகுதியில் கட்சி தலைவர்கள் நேரடியாக மோதி கொண்டதில்லை.. ஆனால், இந்த நடைமுறையை புதுசாக சீமான் அறிவித்துள்ளார்.. இது தான் தமிழக அரசியலை அதிர வைத்துள்ளது.
தமிழ் தேசியமா?
இந்த நிலையில் திராவிடமா தமிழ் தேசியமா என்ற விவாதமும் இந்திய அளவில் வெடித்துக் கிளம்பி விட்டது. திராவிடரா, தமிழரா என்கிற ஹேஷ்டேக் அகில இந்திய அளவில் ட்விட்டரில் டிரெண்ட் ஆகிவிட்டது. உண்மையை சொல்ல போனால், ரஜினி கட்சி ஆரம்பித்திருக்க வேண்டும் என்பதே சீமானின் ஆழ்மனசு எண்ணமாக இருந்திருக்கிறது.
விமர்சனம்
ஏனென்றால், ரஜினி என்றாலே கொந்தளித்து விடும் சீமான், இந்த முறை தேர்தலில் எப்படியாவது அவரை கடுமையாக விமர்சித்து, அதன்மூலம் தேர்தல் நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் பலத்தை விஸ்தரிக்க திட்டமிட்டிருந்தார். வேற்று மாநிலத்தவர் என்ற காரணத்தை சொல்லி, தமிழன் என்ற தாரக மந்திரத்தை கையில் எடுத்து, அதன்மூலம் தன் கட்சியை விஸ்தீரப்படுத்தவும் பிளான் செய்திருந்தாராம்.. ஆனால், அத்தனையும் ரஜினி முடிவால் தரைமட்டமாகிவிட்டது.
ஸ்டாலின்
அதனால்தான் சீமானின் கவனம் இப்போது ஸ்டாலின் பக்கம் திரும்பியதாம்.. ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டால் அகில இந்திய அளவில் வெளிச்சம் கிடைக்கும் என்பதாலும், தனக்கு பல்வேறு கட்சிகளின் ஆதரவும் கிடைக்கும் என்பதாலும், கிட்டத்தட்ட ஒரு பொது வேட்பாளராக தான் அறிவிக்கப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பாலும் இந்த அதிரடி டேக்டிக்ஸை கையில் எடுத்துள்ளார் சீமான்.
மோதல்
அதன்மூலம் திராவிடமா, தமிழ்த் தேசியமா என்கிற விவாதத்தை தேசிய அளவில் கிளப்பலாம் என்று சீமான் தரப்பு நினைக்கிறதாம்.. அதுமட்டுமல்ல, ஸ்டாலினுடன் சீமான் மோதுவது போலவே, மற்ற 233 தொகுதிகளிலும் திமுகவுக்கு எதிராகவே நாம் தமிழர் கட்சியினரையும் வேட்பாளராக நிறுத்தலாம் என்றும் யோசனை உள்ளதாம். இதெல்லாம் இப்போதைக்கு பலன்தராவிட்டாலும், வருங்காலத்தில் நாம் தமிழர் கட்சியை பலமான கட்சியாக இது மாற்ற உதவும் என்கிறார்கள்.
பாஜக பி-டீம்
அதேசமயம், சீமானின் சமீபத்திய நடவடிக்கைகளால் ஒருசில விவாதங்களும் கிளம்பி உள்ளன.. இப்படி நேரடியாக ஸ்டாலினுக்கு எதிராக சீமான் போட்டியிட்டால், அதிமுகவுக்கு சாதகமாக அவர் செயல்படுகிறார் என்றுதானே அர்த்தமாகிறது? என்று கேள்வி எழுகிறது.. ஏற்கனவே சீமானுக்கு பாஜகவின் பி.டீம் என்று பெயர் உள்ளபோது, இப்போது திராவிட சித்தாந்தத்தில் உள்ள ஸ்டாலினை ஓபனாக எதிர்த்தால், அதன்மூலம் வாக்குகள் பிரிந்து பாஜகவுக்குதானே நன்மை பயக்கும்? என்ற அடுத்த சந்தேகமும் எழுகிறது. பார்ப்போம்.. என்ன நடக்கிறதென்று?