EXPLAINER: ரூபாய் நோட்டை கவனிச்சீங்களா.. அது என்ன ஸ்டார்? நம்பருக்கு இடையில ஏன் வருது தெரியுமா?
சென்னை: ரூபாய் நோட்டுக்களின் சீரியல் நம்பரில் ஸ்டார் குறியீடு இருந்தால் கள்ள நோட்டுக்கள் இல்லை என்று அண்மையில் ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில் ஸ்டார் குறியீடு (*) ஏன் பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்த முழு விபரத்தை பார்ப்போம்.
பரவிய வதந்தி: இந்தியாவில் ரூ.2000 நோட்டுக்கள் தடை தொடர்பான அறிவிப்புக்கு பின்னர் அதிகளவில் பேசப்பட்ட பணம் தொடர்பான விசயம் என்றால் அது ரூபாய் நோட்டுக்களில் உள்ள ஸ்டார் (*) குறியீடுதான். 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று இன்று வரை நம்பப்பட்டு வரும் வதந்தியை போல் பரவியது ஸ்டார் குறியீடு (*) உள்ள ரூபாய் நோட்டுக்கள் கள்ள நோட்டுக்கள் என்ற வதந்தி.

இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் கடைகள், பேருந்துகள் என எல்லா இடங்களிலும் ஸ்டார் (*) குறியீட்டுடன் சீரியல் நம்பரை கொண்ட ரூபாய் நோட்டுக்களை வாங்க மறுத்தனர். இந்த நிலையில், ஸ்டார் (*) குறியீடு உள்ள ரூபாய் நோட்டுக்கள் கள்ள நோட்டுக்கள் இல்லை என்றும் மக்கள் அதிர்ச்சி அடைய வேண்டாம் எனவும் இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது.
ஸ்டார் குறியீடு (*) இருக்கும் ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படாது என்று தெரிவித்த ரிசர்வ் வங்கி, மற்ற நோட்டுக்களை போன்றே ஸ்டார் குறியீடு உள்ள ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தலாம் என்று தெரிவித்தது. எனவே பொதுமக்களும், வியாபாரிகளும் பதற்றம் அடையாமல் சகஜமாக அவற்றை பயன்படுத்துங்கள்.
ஸ்டார் குறியீடு ஏன்?: ரிசர்வ் வங்கி அளித்து இருக்கும் விளக்கத்தில் ரூபாய் நோட்டுக்களில் ஸ்டார் குறியீடு (AB, 4CC, LW) போன்ற பிரிஃபிக்ஸ் எனப்படும் முன் எழுத்துக்களுக்கும் வரிசை எண்ணுக்கு இடையே சின்னம் சேர்க்கப்பட்டு இருக்கும் என்று தெரிவித்து உள்ளது. உதாரணத்துக்கு AB*380187 என்று சீரியல் நம்பர் இருந்தால் பயப்பட தேவையில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஸ்டார் குறியீடு என்பது சேதமடைந்து வங்கிகளிடம் கொடுத்து மாற்றப்பட்ட பழைய நோட்டுக்களை மறு அச்சு செய்யும்போது சேர்க்கப்படுகிறது. இந்த நோட்டுக்கள் 100 துண்டுகளாக பாக்கெட்டுகளில் விநியோகிக்கப்பட்டன. மாற்றம் செய்து மறு அச்சு செய்யப்பட்ட நோட்டுக்கள் என்பதை அடையாளம் காண்பதற்காகவே ரிசர்வ் வங்கி அதில் ஸ்டார் குறியீட்டை வைத்து உள்ளது.
இந்த முறையும் இன்று நேற்று அறிமுகமான ஒன்று கிடையாது. கடந்த 2006 ஆம் ஆண்டில் இருந்தே மறு பதிப்பு செய்யப்பட்ட ரூ.10, ரூ.20, ரூ.50 நோட்டுக்களில் ஸ்டார் குறியீடு வைத்து மக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டது. ரூ.500 நோட்டுக்களில் ஸ்டார் வைக்கும் முறையை கடந்த 2015 ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. மறு பதிப்பு செய்யும்போது புதிய சீரியல் நம்பர்களை வெளியிட்டால் பணப்புழக்கம் போன்றவற்றை கணக்கிடுவது கடினம் என்பதால் இந்த முறையை ரிசர்வ் வங்கி கடைபிடிக்கிறது.












Click it and Unblock the Notifications