பிடிஆருக்கு அலை அலையாய் குவியும் ஆதரவு! மக்கள் மத்தியில் அப்படியொரு தாக்கம்! என்ன காரணம்?
சென்னை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடமிருந்து நிதி இலாகா பறிக்கப்பட்டிருப்பது உள்ளூர் முதல் உலகத்தமிழர்கள் வரை விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
நாசரை அமைச்சரவையிலிருந்து நீக்கியதை மக்கள் ஒரு பொருட்டாகவே கருதாத நிலையில், பிடிஆருக்கு இலாகா மாற்றிக் கொடுக்கப்பட்ட விவகாரம் தேநீர் கடை முதற்கொண்டு மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இத்தனைக்கும் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பம் என்ற உயர்ந்த போர்ட் போலியோ தான் மாற்றாக வழங்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் இதனை டிபுரோமோஷனாகவே பார்க்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.

#I STAND WITH PTR, என்பன போன்ற ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் குறிப்பாக டிவிட்டரில் அதிகமானோரால் பகிரப்பட்டு வருகின்றன.
பழனிவேல் தியாகராஜனிடமிருந்து நிதித் துறை பறிக்கப்பட்டதற்கு உதயநிதி ஸ்டாலின் தான் காரணம் என்பதை போல் சமூகவலைதள வாசிகள் அவரை நோக்கி விமர்சனக்கணைகளை வீசுகின்றனர்.
பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோவை உண்மை என நிரூபிக்கும் வகையில் நேற்று நடந்த நிகழ்வுகள் இருப்பதாக பலரும் அங்கலாய்த்து கொள்கின்றனர்.
மற்ற அமைச்சர்களை எல்லாம் திட்டித் தீர்க்கும் பலரும் பழனிவேல் தியாகராஜன் மீது மட்டும் பேரன்பு வைத்திருப்பதற்கு காரணம் அவரது ஸ்டைரட் ஃபார்வார்டு தான். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலாக இருக்கட்டும், 2016 சட்டமன்றத் தேர்தலாக இருக்கட்டும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் வெற்றி பெற்ற ஒரே நபர் இவராக தான் இருப்பார்.

அதேபோல் ஒவ்வொரு துறையிலிருந்தும் எக்கச்சக்கமாக நிதி கோரி வரும் கோப்புக்களை அலசி ஆராய்ந்து இதற்கு எதற்கு இவ்வளவு பணம், இந்தத் தொகையில் இந்த திட்டத்தில் முடிக்கலாமே என கடிவாளம் போட்டார். இது மற்ற அமைச்சர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.
தொழில்துறையை தங்கம் தென்னரசு சரியாக கவனிக்கவில்லையா அல்லது நிதித்துறையை பழனிவேல் தியாகராஜன் சரியாக கவனிக்கவில்லையா என்றும் இருவரில் யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் இல்லாத போது பிறகேன் இவர்கள் இருவருக்கும் இப்படியொரு இலாகா மாற்றம் என சமூக வலைதளங்கள் விவாதங்கள் அனல் பறக்கின்றன.
இதனிடையே நிர்வாக காரணங்களுக்காகவே அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டிருப்பதாக நேற்று ஹூண்டாய் மோட்டார் நிறுவன நிகழ்வில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications