கடமை தவறிய மு.க.ஸ்டாலின்.. 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? எடப்பாடி பழனிசாமி!
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடமையை செய்ய தவறிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன் என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு சென்றதாகவும் கூறியுள்ளார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பங்கேற்காமல் புறக்கணித்து வந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த ஆண்டு முதல்முறையாக பங்கேற்றார். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வெள்ளைக் கொடிக்கு வேலை வந்துவிட்டதா? என்று விமர்சித்தார்.

மு.க.ஸ்டாலின் vs எடப்பாடி பழனிசாமி
அமலாக்கத்துறை ரெய்டுக்கு பயந்தே முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு சென்றதாகவும் விமர்சித்தார். இதற்கு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், என்னிடம் வெள்ளைக் கொடியும் இல்லை.. எடப்பாடி பழனிசாமியிடம் உள்ள காவிக்கொடியும் இல்லை என்று பதிலடி கொடுத்தார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளை முன் வைத்திருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி பேட்டி
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது, சென்னைக்கு வந்த பிரதமர் மோடிக்கு கருப்பு பலூன் பறக்கவிட்டார்கள். ஆனால் ஆளுங்கட்சியான பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளைக்குடை பிடித்தார். கடந்த 3 ஆண்டுகளாக பிரதமர் மோடியை சந்தித்து தமிழ்நாட்டிற்காக எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை..
என்ன அவசியம்?
இப்போது மட்டும் என்ன அவசியம் வந்துள்ளது.. என்னவென்றால் அமலாக்கத்துறை பிரச்சனை வந்துள்ளது. அந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். அதனடிப்படையில்தான் பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்தித்துள்ளார். என்ன பேசினார்கள் என்பது தெரியாது. எங்களின் கேள்வி என்னவென்றால், கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளாதது ஏன்?
அந்த தம்பி வெளிநாட்டிற்கு சென்றது ஏன்?
உதயநிதி ஸ்டாலின் சொன்னதை போல் EDக்கும் பயமில்லை, மோடிக்கும் பயமில்லை என்றால், அந்த தம்பி எதற்காக வெளிநாட்டிற்கு ஓடினார்? தமிழ்நாட்டில் இருந்திருந்தால், பயமில்லை என்று சொல்லிக் கொள்ளலாம். விரைவில் வெளிநாட்டிற்கு சென்றவர்கள் தொடர்பாக வெளியில் வரும். இதுதான் ஆரம்பம்.. விரைவில் யார் எப்படி பயப்படுவார்கள் என்பது தெரியும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications