தமிழகம் இப்போ இருக்கும் சூழ்நிலையில் இ பாஸ் ரூல்ஸ் அவசியமா?
சென்னை: இ பாஸ் நடைமுறையை தொடருவது, மாநில அரசுகளின் விருப்பம் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், மாவட்டங் களுக்கு இடையேயான பயணத்திற்கு இ பாஸ் நடைமுறை தொடர்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது மக்களிடையே மற்றும் தொழில் முனைவோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாம் தற்போது 7வது ஊரடங்கு உத்தரவு காலகட்டத்தில் கால்பதிக்க இருக்கிறோம். ஆகஸ்ட் 1ம் தேதி முதல், இந்த ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது.
மருத்துவ குழுவினருடன் இன்று ஆலோசனை நடத்திய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு தமிழகத்தில் இருக்கும் என்று அறிவித்தார். கடந்த காலத்தைவிட தற்போது சலுகைகள் அதிகரித்துள்ள போதிலும், மிகவும் எதிர்பார்த்த சலுகை இடம்பெறவில்லை.
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு.. மாவட்டங்களிடையே பயணிக்க இ பாஸ் கட்டாயம்.. பஸ், ரயில் சேவை கிடையாது
மாநில உரிமை
கடந்த 5வது ஊரடங்கு காலகட்டத்தின்போதே இ பாஸ் வழங்குவது மாநிலங்களின் அதிகார உரிமை உட்பட்டது என்றும், தாங்கள் தடுக்கப் போவதில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்து விட்டது. இதன்பிறகு, கர்நாடக மாநில அரசு, இ பாஸ் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவந்தது. சேவா சிந்து என்ற வெப்சைட்டில் பதிவு செய்துவிட்டு ஸ்லாட் கொடுக்கப்படும் நாளில் வாகனங்களில் பயணிக்க முடியும் என்ற நிலைமை அங்கு இருக்கிறது.
அவசர தேவை
ஆனால், தமிழகத்திலோ, பிற மாநிலங்களில் இருந்து வருவோருக்கு மட்டுமல்லாமல், மாவட்டங்களுக்கிடையே பயணிப்போருக்கும் இ பாஸ் தேவைப்படுகிறது. அவசரமாக மருத்துவமனைகளுக்கு செல்வோர்கூட காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பக் கூடிய சூழ்நிலை பல்வேறு கிராமங்களில் நிலவுகிறது. ஏற்கனவே கொரோனா காரணமாக பிற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ கவனம் கிடைக்காத நிலையில், இந்த சிக்கலும் இணைந்து அவர்களை கஷ்டப்படுத்துகிறது.
ஒரே மாவட்டம்
உதாரணத்திற்கு, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்கள் பரப்பளவில் மிகவும் பெரியவை. தங்கள் மாவட்டத்தில் உள்ள ஒரு பெரிய நகரத்திற்கு சென்று சிகிச்சை பெற போதிய கால அவகாசம் இல்லாதபோது, அருகேயுள்ள மாவட்டத்தில், தங்களுக்கு அருகே உள்ள சிறு நகரத்தில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறும் கிராம மக்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால், இ பாஸ் இல்லாவிட்டால், உங்கள் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில்தான் சிகிச்சை பெற வேண்டும் என்று காவல்துறையினர் திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.
விழிப்புணர்வு
கிராமத்து மக்களுக்கு இ பாஸ் எப்படி எடுப்பது என்பதில் போதிய விழிப்புணர்வு கிடையாது. ஒருவேளை, இ பாஸுக்கு விண்ணப்பித்தாலும், உடனே இ பாஸ் கிடைப்பதும் கிடையாது. எனவே முதியோர், நோய்வாய்ப்பட்டோருக்கு இது அவஸ்தையாக மாறி விட்டது. மற்றொரு பக்கம், பொருளாதார முன்னேற்றம் என்று கூறிக்கொண்டு கடைகள் திறந்திருக்கும் நேரம், மளிகை கடைகள் மற்றும் காய்கறி கடைகள் திறந்திருக்கும் நேரம் போன்றவற்றை அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊழியர்கள் அதிகரிப்பு
50 விழுக்காடு ஊழியர்களை கொண்டு பணியாற்றிய நிறுவனங்கள் இனிமேல் 75 விழுக்காடு ஊழியர்களை கொண்டு பணியாற்றலாம் என்றும் தெரிவித்துள்ளது. ஊழியர்கள் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு பயணம் செய்வதற்கு, பொது போக்குவரத்து கிடையாது. ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தமிழகத்தில் பொது போக்குவரத்துக்கு தடை நீடிப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மற்றொரு பக்கம், சொந்த வாகனங்களில் செல்லலாம் என்றால், இ பாஸ் நடைமுறை அமலில் இருக்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவுவதாக தொழிலதிபர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
தொழிலாளர்கள் எப்படி பயணிப்பார்கள்
ஏற்கனவே கடுமையான கஷ்டத்தில் இருக்கக்கூடிய தொழில்துறைக்கு தொழிலாளர்கள் வர முடியாத இந்த இக்கட்டான நிலைமையும் சேர்ந்து கொண்டு பெரும் தலைவலியாக மாறி விட்டதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். கண்டிப்பாக மருத்துவ குழுவினருடன் மட்டுமல்லாது, தொழிலதிபர்கள் மற்றும் தொழில் முனைவோரிடமும் தமிழக அரசு கலந்து ஆலோசித்துவிட்டு ஊரடங்கு தொடர்பாக உத்தரவுகளை எடுத்து இருக்கலாம் என்பது அவர்கள் கருத்தாக இருக்கிறது.
இ பாஸ் அவசியமா?
இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. தமிழகத்திற்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ பாஸ் நடைமுறையை நீக்கி விட்டால் நன்றாக இருக்கும் என்பது தொழிலதிபர்கள் மட்டுமின்றி, தொழிலாளிகளின் கோரிக்கையாகவும் இருக்கிறது. இ பாஸ் வழங்கும் நடைமுறையில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடப்பதாகவும் அவ்வப்போது புகார்கள் வருகின்றன. பணத்தை வாங்கிக்கொண்டு இ பாஸ் பெற்றுத்தருவதாக பல்வேறு புகார்கள் இருக்கின்றன. காவல்துறை இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுத்தாலும், சிலர் பணத்தாசை காரணமாக மக்களை ஏமாற்றி இ பாஸ் பெற்றுக் கொடுத்து சம்பாதிக்கிறார்கள். இதுபோன்ற மோசடி கும்பலை ஒழிப்பதற்கும் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்வது பலனளிக்கும் என்பதே பொதுமக்கள் எதிர்பார்ப்பு.