யோசிக்காமல் பிளான் போட்டாரோ.. விஜய் சுற்றுப்பயணத்திற்கு பெரிய சிக்கலே இதுதான்.. சுதாரிக்குமா தவெக?
சென்னை: நடிகரும் அரசியல்வாதியுமான விஜய், தனது தமிழக வெற்றி கழகம் (TVK) கட்சி சார்பில், செப்டம்பர் முதல் டிசம்பர் வரை தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் மாநிலம் தழுவிய சாலைப் பயணப் பரப்புரையைத் தொடங்க உள்ளார். ஆனால் இந்த பயணம் அரசியல் ரீதியாக விஜய்க்கு எந்த அளவிற்கு உதவும் என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
இப்பயணம் செப்டம்பர் 13 அன்று திருச்சியில் தொடங்கி டிசம்பர் 20 அன்று மதுரையில் முடிவடைய உள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான முக்கியப் பகுதிகளை உள்ளடக்கிய இத்திட்டம், அவரது ரசிகர்களிடமும் புதிய வாக்காளர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்த சாலை பயணம் விஜய்க்கு மக்களுடன் ஆழமான தனிப்பட்ட தொடர்பை ஏற்படுத்த உதவுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

விஜய்க்கு இருக்கும் சவால்
இப்பரப்புரையின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று, அந்த பயணம் திட்டமிடப்பட்டு உள்ள விதம்தான். தமிழ்நாடு ஒரு பரந்த மாநிலம்; மாறுபட்ட வட்டார அடையாளங்கள் மற்றும் உள்ளூர் பிரச்சனைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு நாள் அல்லது மிகக் குறுகிய கால அவகாசமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு நாளில் 3 மாவட்டங்களை விஜய் விசிட் அடிக்கிறார். ஒரு மாவட்டத்திற்க்கு 20 நிமிடம் பேசினால் கூட போதிய விஷயங்களை பேச முடியாது.
உதாரணமாக, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய நான்கு மேற்கு மாவட்டங்கள் அக்டோபர் தொடக்கத்தில் ஒரே குழுவாகப் பார்க்கப்படுகின்றன. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்கள் ஒரே பயணத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இது ஒவ்வொரு மாவட்டத்திலும் விஜய்க்கு மிகக் குறைந்த நேரத்தையே வழங்கும். இதனால், மக்களின் கவலைகளை நேரடியாகக் கேட்டு விரிவாகப் புரிந்துகொள்ளும் திறன் குறையும்.
விஜய் செய்யும் தவறு
உதாரணமாக ஆட்சிக்கு வருவதற்கு முன் ஸ்டாலின் கிராமங்கள் கிராமங்களாக சென்று கிராம சபை கூட்டங்களை நடத்தினார். இதனால் அவர் பல விஷயங்களை கேட்க முடிந்தது. நேரடியாக பிரச்சனைகளை தீர்க்க வழி கொடுத்தது. மக்களிடம் முன்னிறுத்துவம் வழி வகுத்தது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் வெவ்வேறு முன்னுரிமைகளைக் கொண்டுள்ளன: டெல்டாவில் விவசாயிகள், திருப்பூரில் ஜவுளித் தொழிலாளர்கள், தெற்கில் மீனவர்கள், சென்னையில் தகவல் தொழில்நுட்ப இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் உள்ளனர். தொடர்ச்சியான சந்திப்புகளால், விஜய் தனது செய்தியை உள்ளூர் பிரச்சனைகளுக்கு ஏற்ப மாற்றாமல் பொதுவான உரைகளையே நிகழ்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இது சாலைப் பயணங்கள் உருவாக்க வேண்டிய உணர்வுபூர்வமான தொடர்பைப் பலவீனப்படுத்தலாம்.
அதாவது எல்லா இடங்களிலும் சினிமா தனமாக விஜய் வசனம் பேசலாம். ஆனால் லோக்கல் விஷயங்களை பேச முடியாமல் போகலாம். உதாரணமாக மதுரை மாநாட்டில் மதுரையின் பிரச்சனை எதையும் விஜய் பேசவே இல்லை.
விஜயின் சாலைப் பயணம் சந்தேகமின்றி பெரும் கூட்டத்தையும் ஊடக கவனத்தையும் ஈர்க்கும். ஆனால், இது உண்மையான அடித்தள இணைப்பாக மாறுமா என்பது, வரும் மாதங்களில்தான் தெரிய வரும். ஆந்திர பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டி சாலை பயணத்தை பல மாதங்கள் மேற்கொண்டார். அவரின் அரசியல் ஸ்டைலை பின்பற்றும் விஜய் அதில் பாதியாவது செய்யதால்தான் தமிழக அரசியலில் நிலைக்க முடியும்.












Click it and Unblock the Notifications