வி.பி.சிங்குக்கு தமிழ்நாட்டில் எதற்குச் சிலை? திமுக அதை ஏன் செய்தது?
சென்னை: சொன்ன வாக்கை ஏழே மாதங்களில் நிறைவேற்றி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்குத் தமிழ்நாட்டில் சிலை திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின். அந்த வாக்குறுதியை நேற்று நிறைவேற்றித் தந்துள்ளார்.

இந்தியாவின் பிரதமராக வி.பி.சிங் என்று ஒருவர் இருந்தார் என்பதை இந்த நாடே மறந்துவிட்டது. குறிப்பாகத் தேசிய கட்சிகளே மறந்துவிட்டன. அவரது சொந்த மாநிலமான உத்திரப் பிரதேசம்கூட அவருக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை.
ஆனால், மண்டல் கமிஷன் பரிந்துரைக்கு உரிய அங்கீகாரம் கொடுத்தார் என்பதை மறக்காமல் மனதில்வைத்து, அவர் மறைந்து 15 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் அவருக்குச் சிலை எழுப்பி இருக்கிறது திமுக ஆட்சி.
வி.பி.சிங் மீது திமுக-விற்கு அப்படி என்ன மரியாதை? அவருக்கு எதற்காகத் தமிழ்நாட்டில் சிலை? இந்தக் கேள்விகளுக்கு 2கே கிட்ஸ் என்ற புதிய தலைமுறைக்குப் பதில் தெரியாது. ஆகவே, அது குறித்து சிலரிடம் பேசினோம்.

வி.பி.சிங் பேத்தி அத்ரிஜா மஞ்சரி, "இந்தியா எனது தாத்தாவை ஏன் அங்கீகரிக்கவில்லை என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியாமல் இருந்தது. என் தாத்தாவுக்கு அங்கீகாரம் அளித்துள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். எனது தாத்தாவுக்குத் தமிழ்நாடு அரசாங்கம் வழங்கி இருக்கும் இந்தக் கெளரவத்தை இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் ஒருபோதும் செய்ததில்லை.
இப்போது எங்களது குடும்ப உறுப்பினர்கள் கௌரவப்படுத்தப்பட்டுள்ளனர். இதை நாங்கள் மரியாதையுடன் ஏற்கிறோம். இந்தியாவில் வி.பி.சிங்குக்கு வழங்கப்பட்ட வேண்டிய மரியாதை கண்டிப்பாக அளிக்கப்பட வேண்டும். அப்படித்தான் நான் நினைக்கிறேன்.
ஆனால், இன்றைக்குத் தமிழ்நாடு செய்து காட்டி இருக்கிறது. எனது தாத்தாவுக்கு இந்தக் கெளரவத்தை அளித்தமைக்காக நான் அவர்களுக்குத் தலைவணங்குகிறேன். வி.பி.சிங் இந்த நாட்டில் மறக்கப்பட்ட ஓர் அரசியல்வாதி. அப்படி இல்லை எனில் மறைக்கப்பட்ட அரசியல்வாதி. இதில் எதை நான் சொல்வது? இரண்டுமேதான் என்றே நான் கருதுகிறேன்" என்கிறார்.

மற்றொரு பேத்தி ரிஜ்ஜா மஞ்சரி சிங், "மண்டல் கமிசனுக்குப் பிறகு வடமாநிலங்கள் எனது தாத்தா செய்தவற்றை வரலாற்றுப் புத்தகங்களிலிருந்தே நீக்கிவிட்டன. நாடாளுமன்றக் கட்டடத்தில்கூட எனது தாத்தாவின் உருவப்படமோ, சிலையோ இல்லை. எல்லா பிரதமர்களின் உருவப்படமும் அங்கே வைக்கப்பட்டுள்ளது. ஆனால், என் தாத்தாவின் புகைப்படம் மட்டும் அங்கே இல்லை.
அத்துடன் வரலாற்று அடிப்படையில் அல்லது சம்பவங்கள் அடைப்பிடையில் கிடைக்கவேண்டிய எனது தாத்தாவைப் பற்றிய குறிப்புகள்கூட அழிக்கப்பட்டிருக்கின்றன. அல்லது இல்லாமல் இருக்கிறது. யார் இவற்றைச் செய்தார்கள்? அவர்கள் ஏன் செய்தார்கள் என்பதைக் குறிப்பிடாமல் இருப்பதே நல்லது.
என் தாத்தா வி.பி.சிங் அதிக அளவிலான அங்கீகாரத்திற்குத் தகுதியுடையவர். எனது தாத்தாவின் இதயத்தில் தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் சிறப்பான இடம் இருந்தது. அவர் அடிக்கடி தமிழ்நாடு எனது இதயத்திற்கு நெருக்கமான மாநிலங்களில் ஒன்று என்று அவர் கூறுவார்" என்கிறார்.

திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர் பத்திரிகையாளர் கோவி லெனின், "இந்தியாவில் 11 மாதங்கள் மட்டுமே இருந்த ஒரு பிரதமருக்குத் தமிழ்நாட்டில் ஏன் சிலை வைக்க வேண்டும்? அவர் ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்தவர். அந்தக் கட்சியுடன் திமுக கூட்டணியிலிருந்தது.
தேசியக் கூட்டணி என்று அதற்குப் பெயர். அந்தக் கூட்டணியில் வலுவான கட்சி திமுக. ஜனதா தளம் தேசியக் கட்சி. ஆனால், அது தமிழ்நாட்டில் வலுவாகக் கட்சியாக இருக்கவில்லை. தமிழ்நாட்டில் திமுகதான் வலுவான கட்சி.
வி.பி.சிங்குக்கும் திமுகவுக்கும் நல்ல கூட்டணி உறவு இருந்தது. அவர் மறைகின்றவரை அந்த உறவு நன்றாக இருந்தது.

தேசியக் கூட்டணியின் தொடக்கவிழா 1988-ல் தமிழ்நாட்டில் திமுகவின் முப்பெரும் விழா நேரத்தில் உருவானது. மிகப் பிரம்மாண்ட பேரணியுடன் கூட்டணி தொடங்கியது.
அதற்கு ஒரு வருடம் முன்புதான் அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்டது. அதையொட்டி முப்பெரும் விழா நடைபெற்றது. ஆகவே, இளைஞரணி சார்பாகப் பெரிய ஊர்வலம். அதில் வெள்ளை சீருடையுடன் இளைஞர் அணியினர் ஸ்டாலின் தலைமையில் ஊர்வலம் வந்தனர்.
அதில் வி.பி.சிங் கலந்துகொண்டார். அன்று முதல் அவருக்குப் பெரியார் கொள்கைகள்மீது பற்று ஏற்படுகிறது. அவர் காந்தியவாதியாக தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர். வினோபாவின் பூமிதான இயக்கத்தில் ஈடுபாட்டுடன் செயல்பட்டவர். அவருக்குப் பெரியார் மீது ஈர்ப்பு உருவாகிறது.

வி.பி.சிங் ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர். பெரிய செல்வந்தர். மண்டா பகுதியின் ராஜாவாக இருந்தவர். மண்டா ராஜாவாக இருந்த பின்னால் மண்டல் கமிஷன் ராஜாவாக ஆனவர். தனக்கு இருந்த அதிகப்படியான நிலங்களைப் பூமிதான இயக்கத்திற்காக இலவசமாகக் கொடுத்தவர். ஆகவே, அவருக்கு மக்கள் சேவைமீது அதிகப் பற்று இருந்தது.
பின்னாளில் உத்தரப்பிரதேசத்தின் முதல்வராகப் பதவிக்கு வருகிறார். எப்போதும் அவர் பதவிக்காக அரசியலை விரும்பியவர் இல்லை. கொள்கைக்காக அரசியலில் ஈடுபட்டவர். அதன் மூலம் மக்களுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தவர்.
ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை நோக்கி இந்திய அரசியலை அவர்தான் கொண்டு சென்றார்.

அதன் விளைவாகத்தான் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்புகளில் 27% இடஒதுக்கீட்டை மண்டல் கமிஷன் பரிந்துரையின் பேரில் நடைமுறைப்படுத்தினார். ஏறக்குறைய 10 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்ட அதற்கு அவர்தான் செயல்வடிவம் தருகிறார்.

அன்றைக்கு அதற்கு மிகப் பெரிய எதிர்ப்பு வட மாநிலங்களில் எழுந்தது. அதன் பின்புலமாக பாஜக இருந்தது. மாணவர்களை அந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராகத் தூண்டிவிட்டு கலவரங்கள் ஏற்படக் காரணமாக இருந்தது.
வடமாநிலங்களில் மிகப் பெரிய கலவரங்கள் நடந்துகொண்டிருந்த அதேவேளையில், தமிழ்நாட்டில் அந்த இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் பேரணிகள் ஊர்வலங்கள் நடைபெற்றன.

அந்தக் காலகட்டத்தில்தான் ரத யாத்திரை என்பதைத் தொடங்கி நடத்தியது பாஜக. அதன் மூலமொரு அழுத்தத்தை நாட்டில் உருவாக்கியது. மறைமுகமாகக் கொடுக்கப்பட்ட அந்த அழுத்தத்தால் வி.பி.சிங் அந்த இடஒதுக்கீட்டைத் திரும்பப்பெற்றார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் சமூகநீதி, இடஒதுக்கீடு பற்றிய ஒரு புரிதலுக்குக் காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகள் வந்தன. அதற்கு முதல் காரணமாக இருந்தவர் வி.பி.சிங். அவருக்கு முன்பாகவே திமுக தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டை முன்வைத்து கொள்கை ரீதியாக இயங்கி வந்தது.

திமுக மட்டுமே பேசிய இடஒதுக்கீடுக் கொள்கை, சமூக நீதிக் கொள்கையைத் தேசியக் கட்சிகள் பேசும்படி செய்தவர் வி.பி.சிங். அவரால்தான் திமுக கொள்கை இந்திய அளவிற்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆகவேதான், இன்றைக்கு திமுக பேசிய விசயங்களைக் காங்கிரஸ் பேசுகிறது. திமுக பேசிய சமூகநீதி கொள்கையை பாஜகவே பேசுகிறது. அதற்குக் காரணம் வி.பி.சிங்.

அதற்கான நன்றிக்கடனாகத்தான் திமுக இன்றைக்கு வி.பி.சிங்குக்கு தமிழ்நாட்டில் சிலை எழுப்பி இருக்கிறது. அதன் அடையாளமாகத்தான் முதலமைச்சர் ஸ்டாலின் அதைத் திறந்து வைத்துள்ளார்" என்கிறார்.












Click it and Unblock the Notifications