ஆட்டத்தை ஆரம்பித்த செங்கோட்டையன்.. புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் தங்கவைப்பு ஏன்.. அதிமுக விளக்கம்
சென்னை: தமிழ்நாட்டில் கூத்தூர் பாணியில் புதியதொரு அரசியல் நாடகம் அரங்கேறியிருக்கிறது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 15க்கும் மேற்பட் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே புதிய அரசை அமைப்பதற்கு நடிகர் விஜயின் கட்சிக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக, கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருக்கலாம், அவர்கள் தனியாக தங்கி உள்ளதாகவும் ஊகங்கள் பரவியது.
ஆனால் புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளது குறித்து கருத்த தெரிவித்த அதிமுக தலைமை, கட்சிக்குள் எந்தவிதமான கிளர்ச்சியும் இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளது, 'கட்சிக்குள் அனைத்தும் நல்லபடியாக போய் கொண்டிருக்கிறது' என்று கூறியுள்ளது. மேலும் தவெக தரப்பிலிருந்து 'சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் இழுக்கும்' முயற்சிகளைத் தடுப்பதற்காகவே இந்த உறுப்பினர்கள் விடுதிக்கு மாற்றப்பட்டதாக அதிமுக தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

தவெகவிற்கு கணிசமான எம்எல்ஏக்கள் ஆதரிப்பதாக எழுந்த குழப்பத்திற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆரம்பத்தில் நடிகர் விஜய்க்கு ஆதரவு அளிப்பது குறித்து மௌனம் காத்ததே காரணம் என்று அதிமுக வட்டாரங்கள் பிரபல ஆங்கில ஊடகமான என்டிடிவியிடம் தெரிவித்திருக்கின்றன. கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில், நடிகர் விஜயின் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததைத் தொடர்ந்தே எடப்பாடி பழனிசாமி மௌனம் கடைப்பிடித்தாராம். அந்த மௌனமே, கட்சிக்குள் சிலர் விஜய்க்கு ஆதரவு அளிக்கக்கூடும் என்ற ஊகங்களுக்குத் தீனி போட்டதாக அதிமுக வட்டாரங்கள் ஒப்புக்கொண்டன.
TVK-விற்கு ஆதரவு அளிப்பதற்கு எதிரான கட்சியின் நிலைப்பாட்டை எடப்பாடி பழனிசாமி தற்போது தெளிவாகத் தெரிவித்துவிட்டதாகவும், கட்சியின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அவரது முடிவுக்குக் கட்டுப்பட்டுவிட்டதாகவும் அதிமுக வட்டாரங்கள் மேலும் கூறின.
முன்னதாகப் பரவிய தகவல்களின்படி, தவெக தனது உறுப்பினர்களைத் தங்கவைத்திருந்த விடுதியிலிருந்து சுமார் 120 கி.மீ. தொலைவில் புதுச்சேரி விடுதியில் 15க்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்களை சிவி சண்முகம் தங்க வைத்துள்ளதாகவும், அவர்கள் தவெகவிற்கு ஆதரவு அளிக்க உள்ளதாகவும் தகவல் பரவியது. ஆனால் அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் செய்ததாகக் கூறப்பட்டது; எனினும், அத்தகைய நடவடிக்கைகளைத் தான் முன்னின்று செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்தார்.
இதற்கிடையில், தங்களுக்கு ஆதரவு கோரி தவெக கட்சி தங்களை அணுகவில்லை என்றும் அதிமுக தெளிவுபடுத்தியுள்ளது. "தவெக கட்சி அதிமுகவின் ஆதரவைக் கோரவில்லை," என்று சி.வி. சண்முகம் கூறினார். மேலும், "இது குறித்துக் கட்சிதான் முடிவெடுக்க வேண்டும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
மூத்த தலைவர் கே.பி. முனுசாமியும் இதே கருத்தை எதிரொலிக்கும் வகையில், "தவெக-விற்கு அதிமுக எந்தவிதமான ஆதரவையும் அளிக்கவில்லை. கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் இன் ஒப்புதலோடு நான் இதை அறிவிக்கிறேன்," என்று கூறினார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் தற்போது நடைபெற்றுள்ள 2026 சட்டமன்றத் தேர்தல் எனத் தொடர்ந்து நான்காவது முறையாகத் தேர்தல் பின்னடைவைச் சந்தித்திருக்கும் சூழலில் அதிமுகவில் சலசலப்பு அதிகமாகி உள்ளதே இந்த குழப்பங்களுக்கு காரணம் என்கிறார்கள் மூத்த செய்தியாளர்கள். எனினும் செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர் தவெக தலைவர் விஜய்யுடன் இருப்பதால், ரெசார்ட் அரசியல் கதை உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் வலுவாகவே இருக்கிறது. இது உண்மையா இல்லையா என்பது சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டால் தான் முழுமையாக தெரிய வரும். அதுவரை காத்திருக்க வேண்டும்.














Click it and Unblock the Notifications