முதல்வர் விஜய் திடீர்னு ஆய்வுக்கு போறாரு.. 10 நிமிஷத்துக்கு முன்னாடிதான் தெரியும்! - வன்னி அரசு
சென்னை: சைதாப்பேட்டையில் உள்ள சமூகநீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வை மேற்கொண்டிருந்தார். இந்த ஆய்வு குறித்து எங்களுக்கு 10 நிமிடங்களுக்கு முன்புதான் தெரியும் என்றும், அடுத்த முறை அவர் வரும்போது அனைத்தும் சரி செய்யப்பட்டிருக்கும் என்றும் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் பேசியதாவது, "தூய்மையான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு, திடீர் ஆய்வுகளை முதல்வர் விஜய் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் இன்று ஆய்வு நடக்கிறது என்பது 10 நிமிடங்களுக்கு முன்புதான் தெரியும். முதல்வர் ஆய்வுக்கு வருகிறார் என்று 10 நிமிடங்களுக்கு முன்புதான் எங்களுக்கு சொல்லப்பட்டது. மாணவர்களிடம் முதலமைச்சர் ஒருவர் நேரடியாக குறைகளை கேட்டறிகிறார் என்பதை இப்போதுதான் நான் முதல் முறையாக பார்க்கிறேன். விடுதிகளில் இதுபோன்று திடீரென ஆய்வு செய்வதை மிக முக்கியமான முன்னெடுப்பாக நான் பார்க்கிறேன்.
இந்த ஆய்வின் போது மாணவர்கள் தங்களின் கோரிக்கைகளை, தங்கள் தேவைகளை சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சொன்னது எல்லாம் குறைகள் கிடையாது, தேவைகள். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரிடமும், என்னிடமும் இந்த கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அமைச்சர்களாகிய எங்களிடமும், அதிகாரிகளிடமும் உத்தரவிட்டிருக்கிறார்.
எனவே மாணவர்களின் அனைத்து தேவைகளும் உடனடியாக விரைவாக நிறைவேற்றப்படும். இது ஒரு நல்ல கள ஆய்வு. மாணவர்களும், நம்முடைய முதலமைச்சரை எளிதில் அணுக முடியும் என்று நம்புகிறார்கள்" என்று கூறியிருக்கிறார்.
முன்னதாக முதல்வர் ஆய்வை மேற்கொண்டபோது, உணவின் தரம் மோசமாக இருந்ததாக மாணவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். அதேநேரம் வார்ட்ன், காவலர் மாணவர்களிடையே மரியாதை குறைவாக நடந்துக்கொள்கிறார்கள் என்றும் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications