கோமா நிலையிலுள்ள கணவர் சொத்துக்களை மனைவி விற்பனை செய்யலாம்- சென்னை ஹைகோர்ட்
சென்னை: கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துகளை விற்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட்டை நாடியிருக்கிறார் மனைவி.. இதற்கு நீதிமன்றம் அளித்த உத்தரவு என்ன தெரியுமா?
சென்னையை சேர்ந்தவர் சசிகலா.. இவரது கணவர் பெயர் சிவக்குமார்.. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, தற்போது கோமா நிலையில் உள்ளார்..

கோமா நிலைமை: எனவே, கோமா நிலையில் உள்ள தனது கணவரின் சொத்துக்களை கையாளும் வகையில் தன்னை பாதுகாவலராக நியமிக்கக் கோரி, ஹைகோர்ட்டில் சசிகலா வழக்கு ஒன்றினை தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இதற்கு சட்டத்தில் இடமில்லை என்று சொல்லிவிட்டார்.. கணவர் கோமா நிலையில் இருக்கும்போது, அவருடைய சொத்துகளை கையாள மனைவியை பாதுகாவலராக நியமிக்கக்கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்றும், இதுதொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தனிநீதிபதி அறிவுறுத்தி, சசிகலாவின் மனுவையும் தள்ளுபடி செய்துவிட்டார்.
சசிகலா: இதனை எதிர்த்து சசிகலா, அப்பீல் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவானது நீதிபதிகள் சுவாமிநாதன், பாலாஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டத்தில் எந்த வழிவகையும் இல்லாவிட்டாலும் கூட, சட்ட பாதுகாவலர் என்ற முறையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கலாம் என்று கேரள ஹைகோர்ட் ஏற்கனவே அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டினர்.
தொடர்ந்து நீதிபதிகள், "ஏற்கெனவே மருத்துவமனை சிகிச்சைக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்துள்ள நிலையில், வீடு திரும்பிய கணவரை கவனிக்க தனி செவிலியர்களை நியமிக்க வேண்டியுள்ளது என்று மனுதாரர் கூறியிருக்கிறார்.. மேலும், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருந்த சசிகலாவின் 2 குழந்தைகளும், தந்தையின் சொத்துகளை விற்க தாயாருக்கு அனுமதி வழங்காவிட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும் என வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
நிதி அளவு: கோமா நிலையில் உள்ள ஒருவரை கவனிப்பது எளிதான விஷயம் கிடையாது.. அதற்கு மிகப்பெரிய அளவுக்கு நிதி தேவைப்படும்... ஏற்கனவே மருத்துவமனையில் லட்ச கணக்கில் செலவிடப்பட்டுள்ள நிலையில், மனைவிக்கு சொத்துக்களை விற்க அனுமதி வழங்காவிட்டால் பெரிய பாதிப்பும் ஏற்படக்கூடும்.
அதனால், உரிமையியல் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற சொல்வது முறையற்றது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்கிறோம். கணவரின் சொத்துக்களுக்கு மனைவியை பாதுகாவலராக நியமிக்கிறோம்" என்று கூறி கணவரின் சொத்துக்களை கையாள மனைவிக்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
வைப்புத்தொகை: ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை விற்க அனுமதி வழங்கிய நிலையில், ரூ.50 லட்சத்தை கணவர் சசிக்குமாரின் பெயரில் நிரந்தர வைப்புத் தொகையாக முதலீடு செய்யவும், அதிலிருந்து கிடைக்கும் காலாண்டு வட்டியை குடும்ப தேவைக்காகவும், மருத்துவ சிகிச்சைக்காகவும் பயன்படுத்தலாம்" என்று ஹைகோர்ட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துகளை விற்க மனைவிக்கு அனுமதியளித்து சென்னை ஹைகோர்ட் பிறப்பித்திருக்கும் இந்த உத்தரவானது, மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications