சென்னையில் வீட்டில் தோழியுடன் போலீஸ்காரர்.. வெளிநாட்டில் கேமராவில் பார்த்த மனைவி.. ட்விஸ்ட்
சென்னை: சென்னை மாம்பலத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வருகிறார் அருள் பிரசாத்.. அவரது மனைவி அபிநயா. அபிநயாவின் சொந்த ஊர் கடலூர். திருமணமான சில மாதங்களிலேயே வெளிநாட்டில் வேலை கிடைத்ததால், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கணவர் அருள் பிரசாத் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மனைவி அபிநயா, வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் தனது போலீஸ்கார கணவரின் நடவடிக்கைகளை கண்காணித்து, பெண் தோழியுடன் இருந்த அவரை கையும் களவுமாக பிடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாம்பலம் போக்குவரத்து பிரிவில் காவலராக ஆரோக்கிய அருள் பிரசாத் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கும், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அபிநயாவுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அபிநயாவுக்கு திருமணமான சில மாதங்களிலேயே வெளிநாட்டில் வேலை கிடைத்துள்ளது. இதனால் அபிநயா அங்கு தங்கி பணியாற்றி வந்தார். இதனால் ஆரோக்கிய அருள் பிரசாத், சென்னை ராமாபுரத்தில் தனியாக வசித்து வந்துள்ளார்.

வீட்டில் கண்காணிப்பு கேமரா
இந்த நிலையில், காவலர் ஆரோக்கிய அருள் பிரசாத்தின் வீட்டுக்கு அடிக்கடி ஒரு பெண் வந்து செல்வதாக அக்கம் பக்கத்தினர் அபிநயாவுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்த அபிநயா, வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவை தனது செல்போனுடன் இணைத்து, வெளிநாட்டில் இருந்தபடியே வீட்டின் நிலவரத்தை கண்காணிக்க தொடங்கி உள்ளார்.
அடிக்கடி வீட்டிற்கு வந்த பெண்
அப்போது, காவலர் ஆரோக்கிய அருள் பிரசாத் ஒரு பெண்ணை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து வருவது கேமரா காட்சிகளில் பதிவாகியிருந்தது. இதனால் இருவரையும் நேரில் பிடிக்க முடிவு செய்த அபிநயா, 3 நாட்களுக்கு முன்பு கணவருக்கு தெரியாமல் வெளிநாட்டில் இருந்து சென்னை வந்துள்ளார்.
சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்த அவர், தொடர்ந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை தனது செல்போனில் பார்த்து வந்தார். அப்போது, ஆரோக்கிய அருள்பிரசாத், வழக்கம்போல் தனது பெண் தோழியான ஜனனியை வீட்டுக்கு அழைத்து வந்ததை கண்டுபிடித்தார்.
கள்ளக்காதலிக்கு அடி உதை
உடனடியாக வீட்டுக்கு விரைந்த அபிநயா, தோழியுடன் இருந்த போலீஸ் கணவரை கையும் களவுமாக பிடித்தார். இதனால் போலீஸ்காரர் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரம் அடைந்த அபிநயா, கணவரின் தோழியான ஜனனியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஜனனி, வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வெளிநாட்டில் இருந்தபடியே கணவரின் நடவடிக்கைகளை கண்காணித்த மனைவி, திடீரென சென்னை வந்து அவரை, தோழியுடன் மடக்கிப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.














Click it and Unblock the Notifications