பொத்தேரி, காட்டாங்குளத்தூருக்கு விடியல் பிறக்குமா.. ஸ்தம்பிக்கும் ஜிஎஸ்டி சாலை.. அரசுக்கு கோரிக்கை
சென்னை: சென்னையின் புறநகர் பகுதியான பொத்தேரி மற்றும் காட்டாங்குளத்தூர் ரயில்வே கேட்டில் ) ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலால் மாணவர்கள், அலுவலகம் செல்வோர் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இங்கு உடனடியாக ரயில்வே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை எழுந்துள்ளது.
ஒரு நாளைக்கு 100 முறை மூடல்
சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் என ஒரு நாளைக்கு சராசரியாக 80 முதல் 100 முறை இந்த ரயில்வே கேட்டுகள் மூடப்படுகிறது. ஒவ்வொரு முறை கேட் மூடப்படும்போதும் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வாகனங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் ஒரு நாளைக்கு பல மணி நேரம் போக்குவரத்து முடங்கிவிடுகிறது.

நெரிசலுக்கான முக்கிய காரணங்கள்
கல்வி நிலையங்கள்: இப்பகுதியில் புகழ்பெற்ற எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் மற்றும் பல கல்லூரிகள் உள்ளதால், ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் வாகனங்கள் இந்த வழியைப் பயன்படுத்துகின்றன. ரயில்வே கேட் மூடப்படும்போது ஏற்படும் வாகன வரிசை, பிரதான ஜி.எஸ்.டி சாலை வரை நீண்டு ஒட்டுமொத்தப் போக்குவரத்தையும் பாதிக்கின்றது.
மக்கள் தொகை அதிகம்
முன்பு காட்டாங்குளத்தூரில் மக்கள் தொகை குறைவாகவே இருந்தது. ஆனால் இப்போது ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து காட்டாங்குளத்தூரில் குடியேறி உள்ளார்கள். இதனால் வழக்கத்தைவிட அதிகமான நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதுதவிர கல்லூரி மாணவர்கள் அருகில் உள்ள பல்வேறு ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றுவோரும் காட்டாங்குளத்தூரில் வசிக்கிறார்கள். இதனால் எப்போதுமே நெரிசல் ஏற்டுகிறது.
ஆபத்துக்காலத்தில் அவதி
காட்டாங்குளத்தூர் மற்றும் பொத்தேரி பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்குச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் ரயில்வே கேட்டில் சிக்கிக்கொள்வதால், நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்படுகிறது.
மேம்பாலம் வேண்டும்
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "ஒவ்வொரு 10 முதல் 15 நிமிடங்களுக்கும் ஒரு ரயில் செல்வதால், இந்த சாலை எப்போதும் நெரிசலாகவே இருக்கிறது. சுரங்கப்பாதை அல்லது மேம்பாலம் அமைப்பது மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வாகும். பல ஆண்டுகளாகப் போராடியும் இன்னும் இதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை" என ஆதங்கத்துடன் தெரிவித்தார்கள். எனவே, தமிழக அரசு மற்றும் தெற்கு ரயில்வே இணைந்து போர்க்கால அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு, இப்பகுதியில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைப்பதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications