நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? காஞ்சிபுரத்தில் தாயார் ஷோபா சந்திரசேகர் அளித்த 'பளிச்' பதில்
சென்னை: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து தரிசனம் செய்த நடிகர் விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அனைவரும் நல்லா இருக்க வேண்டும் என்றும் விஜய் படம் நன்றாக ஓட வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள் எனவும் பேசினார். மேலும் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? என்பது குறித்தும் பேசினார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது.
இந்த திரைப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொங்கலுக்கு மற்றொரு முன்னணி நடிகரான அஜித்தின் துணிவு படமும் வெளிவர உள்ளது.

ட்ரேட் மார்க் ஸ்டைலில் குட்டிக்கதை
தமிழக திரையுலகின் இரு பெரும் உச்ச நட்சத்திரங்களான அஜித் - விஜய் படங்கள் கிட்டதட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு நேருக்கு நேர் மோத உள்ளது இந்த படங்களுக்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய விஜய், தனது வழக்கமான ட்ரேட் மார்க் ஸ்டைலில் குட்டிக்கதை ஒன்றும் கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

விஜய் அரசியல் ஈடுபாடு குறித்த பேச்சுக்கள்
அதோடு ரசிகர்கள் முன்னிலையில் செல்பியும் விஜய் எடுத்துக்கொண்டு அந்த பதிவையும் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். விஜயின் நடித்துள்ள படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து போஸ்டர்கள் அடித்து ஒட்டும் அவரது ரசிகர்கள் ஒருபக்கம் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தையும் கூறி போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர். அதோடு, விஜய்யும் அண்மையில் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை அடுத்தடுத்து சந்தித்து பேசினார். இதனால், விஜய் அரசியல் ஈடுபாடு குறித்த பேச்சுக்கள் மீண்டும் வலுவாக எழத் தொடங்கின.

விஜய்யின் தாயார் பேட்டி
இந்த நிலையில், நடிகர் விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகர் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார். வழிபாடு நடத்திய பிறகு கோவில் நிர்வாகம் அளித்த பிரசாதங்களை பெற்றுக்கொண்டு ஷோபா சந்திரசேகர் புறப்பட்டு சென்றார். பின்னர் செய்தியாளர்களை ஷோபா சந்திரசேகர் சந்தித்தார். அப்போது ஷோபா சந்திரசேகர் கூறியதாவது:-

வியாதி இல்லாமல் இருக்க வேண்டும்
இந்த உலகமே சமாதானமாக சந்தோஷமாக வியாதி இல்லாமல் இருக்க வேண்டும் என வேண்டிக்கொண்டேன். விஜய் படம் நல்லா ஓட வேண்டும் என்று அனைவரும் வேண்டிக்கொள்ளுங்கள். விஜய் எந்த படத்தில் என்ன மாதிரி நடிக்கிறார் என்றே எனக்கு தெரியாது. நீங்கள் அடுத்த படத்தில் என்னவாக நடிக்கிறார் என்று கேட்கிறீர்கள். இந்த படத்தில் என்னவாக நடிக்கிறார் என்றே எனக்கு தெரியாது. ஃபேமிலி சப்ஜெக்ட் படம் என்று மட்டும்தான் தெரியும்" என்று பேசினார்.

கடவுள் என்ன முடிவு செய்கிறாரோ
அப்போது விஜயின் அரசியல் ஈடுபாடு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஷோபா, அதைப்பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. அவர்(விஜய்) என்ன முடிவு செய்கிறாரோ.. கடவுள் என்ன முடிவு செய்கிறாரோ அதுதான். எனக்கும் என் கணவருக்கும் எதுவுமே அது பற்றி தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications