ஒரு மாதத்தில் அரசியல் கட்சி! இத்தனை ஆக்ரோஷமாக விஜய்யை பார்த்திராத நிர்வாகிகள்! யாருடன் கூட்டணி?
சென்னை: நடிகர் விஜய் இன்னும் ஒரு மாதத்தில் கட்சி தொடங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என அவருடைய ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வருகிறார்கள். அவர்கள் சொல்வதற்கேற்ப விஜய்யும் அது தொடர்பான நடவடிக்கைகளை செய்து வருகிறார்.

10, 12 ஆம் வகுப்பில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தினார். அது போல் அம்பேத்கர், காமராஜரை படியுங்கள் என்றார். மேலும் காசுக்காக ஓட்டு போடாதீர்கள் என்றும் காசுக்காக ஓட்டு போடக் கூடாது என உங்கள் பெற்றோருக்கு நீங்கள் அறிவுறுத்துங்கள் என்றும் விஜய் அந்த விழாவில் கேட்டுக் கொண்டார்.
அது போல் நீங்கள் முதல்முறையாக வாக்களிக்கும் போது புதியவர்கள் வருகை தந்திருப்பார்கள். அவர்களுக்கு ஆதரவு தாருங்கள் என்றெல்லாம் பேசியிருந்தார். உலக பட்டினி நாள் அன்று 234 தொகுதிகளிலும் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவ்வப்போது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் வரும் ஏப்ரல் , மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய நிலையில் கட்சிகள் இருப்பதால் அவை தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டன. தமிழகத்தில் திமுக தலைமையில் உள்ள கூட்டணியினர் அதே கூட்டணியில் இருக்க முடிவு செய்துள்ளனர். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி விட்டது. இந்தநிலையில் திமுக கூட்டணி கட்சியினருடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அதிமுகவும் திமுகவும் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கான குழுக்களை அமைத்துள்ளனர். இந்த நிலையில்தான் நடிகர் விஜய் இன்று பனையூரில் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். காலை 8 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் தொடங்கியது. 10.30 மணி அளவில் கூட்டத்தை முடித்துக் கொண்டு அவர் படப்பிடிப்புக்கு சென்றுவிட்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வந்திருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது விஜய் இத்தனை நாட்களில் இல்லாத அளவுக்கு கட்சி தொடங்கும் விவகாரத்தில் ஆக்ரோஷம் காட்டினார். அவர் இன்னும் ஒரு மாதத்தில் கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவார்.
பூத் கமிட்டிகளை வலுப்படுத்த வேண்டும். கட்சியின் அடிமட்ட அளவை மேலும் வலுப்படுத்த வேண்டும். அரசியல் கட்சியாக பதிவு செய்த பின்னர் தனித்து போட்டியா இல்லை பிற கட்சிகளுக்கு ஆதரவா என்பதை தீர்மானித்துக் கொள்ளலாம் என விஜய் கூறியிருந்தார் என அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications