2 நாளில் தமிழ்நாடு வரும் மோடி.. கூட்டணி தலைவர்களை மேடை ஏற்றுவாரா அண்ணாமலை? இதுதான் நடக்க போகுது?
சென்னை: தமிழ்நாட்டுக்கு வரும் 27-ந் தேதி பிரதமர் மோடி வருகை தரும் நிலையில் அதற்கு முன் பாஜக கூட்டணி இறுதியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி ஆலோசனைகள் நாடு முழுக்க தீவிரமாக நடந்து வருகிறது. தேசிய அளவில் இந்திய கூட்டணி வேகமான கூட்டணி பகிர்வு முடிவுகளை எடுத்து வருகிறது. ஆம் ஆத்மியும் இந்தியா கூட்டணியில் போட்டியிடும் இடங்களை அறிவித்துவிட்டது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தமிழ்நாட்டில் இந்த முறை 3வது அணி புதிதாக ஒன்று உருவாக்கி நாம் தமிழரோடு சேர்த்து 4 முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த லோக்சபா தேர்தலுக்கு தமிழ்நாட்டில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து இருந்தது. அதிமுக + பாஜக + பாமக + தேமுதிக இணைந்து லோக்சபா தேர்தலை சந்தித்தன. ஆனால் சட்டசபை தேர்தலின் போதே இந்த கூட்டணி உடைந்தது. தேமுதிக வெளியேறி அமமுகவுடன் கூட்டணி வைத்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக கூட்டணி மேலும் கரைந்தது. பாமக அதன்பின் கூட்டணியில் இருந்து வெளியேறியது.
இப்போது பாஜக தனியாக மூன்றாவது கூட்டணியை உருவாக்க முயன்று வருகிறது. 2024 லோக்சபா தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்ய பிப்ரவரி 27ம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் என்று பாஜக தலைவர் அண்ணாமலைக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவிட்டு உள்ளதாம். நீங்கள் நடைப்பயணம் செய்தது போதும்.. உடனே கூட்டணியை முடிவிற்கு கொண்டு வாருங்கள்.
கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடிங்க. 3வது அணி உருவாவதை உறுதி செய்யுங்கள் என்று அண்ணாமலைக்கு டெல்லி பாஜக உத்தரவிட்டு உள்ளதாம். பிரதமர் மோடி வருகைக்கு முன் கூட்டணி இறுதியாகும் என்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு வரும் 27-ந் தேதி பிரதமர் மோடி வருகை தரும் நிலையில் அதற்கு முன் பாஜக கூட்டணி இறுதியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் பாஜக கூட்டணி குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியாவிற்கு பேட்டி அளித்துள்ளார் .
பேட்டி: அதில், அதிமுகவிற்கான கூட்டணி கதவை பாஜக திறந்து வைத்துள்ளது. ஆனால் 5 சீட்டு கொடுத்தால் எல்லாம் பாஜக ஏற்றுக்கொள்ளாது. 12 இடங்களை கண்டிப்பாக பாஜக கேட்கும். அதை கொடுக்க தயாராக இருந்தால்தான் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்கும். இதில் பாமக இணைந்தால் கூடுதலாக 10 இடங்களை கொடுக்க வேண்டும். வேறு வழியில்லை.
அதிமுக வரிசையாக தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது. அதிமுகவின் கூட்டணி தோல்வி கூட்டணி. அப்படி இருக்க அதிமுக இடங்களை விட்டுக்கொடுக்க வேண்டும். அதிக இடங்களுக்கு அதிமுக ஆசைப்பட கூடாது. அதிமுகவால் தனித்து போட்டியிட முடியாது. 39 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டால் அதிமுகவிற்கு சிக்கல் ஆகிவிடும்.
தேமுதிகவும் தனியாக நிற்க முடியாது. அதனால் தேமுதிக கூட்டணி வைத்தே ஆக வேண்டும். எடப்பாடி தேமுதிகவை கூட்டணியில் ஏற்றுக்கொள்ள மாட்டார். அப்படி இருக்க பாஜக தேமுதிக கூட்டணியில்தான் சேர வேண்டும். சசிகலா உடன் பிரேமலதா நட்பில் இருந்ததால் தேமுதிகவை எடப்பாடி ஏற்றுக்கொள்ள மாட்டார். அதனால் அந்த கூட்டணி உருவாவதற்கான வாய்ப்புகள் குறைவு.
அதிமுக தேமுதிகவை மதிக்காது. பாமக மாறாக 2 சீட்டுகளை கொடுத்து தேமுதிகவை ஏற்றுக்கொள்ளும். தேமுதிக இதை ஏற்றுக்கொண்டு கூட்டணிக்குள் வர வேண்டும். அதிமுகவை நம்பி இருந்தால் கூட்டணி நடக்காது. என் மண் என் மக்கள் யாத்திரைக்கு தேமுதிகவை அண்ணாமலை அழைத்தார். ஆனால் பிரேமலதா செல்லவில்லை. சுதீஷையாவது அனுப்பி இருக்கலாம்.
ஆனால் மாவட்ட செயலாளரை அனுப்பி அண்ணாமலையை தேமுதிக அசிங்கப்படுத்தியது. மோடி வருகையின் போது கூட்டணி தலைவர்களை மேடையில் ஏற்றுவேன் என்று அண்ணாமலை கூறினார். அதற்கு இன்னும் 2 நாட்கள்தான் இருக்கிறது. அதனால் அண்ணாமலை கூட்டணி தலைவர்களை மேடைக்கு ஏற்றுவது கடினம்.
அண்ணாமலை தேசிய கட்சியின் தலைவர் என்பதால் அவருக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால் கூட்டணிகள் அமைவதில் சில நாட்கள் எடுக்கும். அண்ணாமலை நினைத்தால் வெறும் 5 சீட்டுகளை பெற்றுக்கொண்டு தமிழிசை போல அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம். ஆனால் அவர் அப்படி அல்ல. நல்ல கூட்டணி அமைக்க நேரம் எடுக்கவே செய்யும், என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications