“4 முனை போட்டி உறுதி.. நாங்கள் வெற்றி கூட்டணியில் இடம்பெறுவோம்” - டிடிவி தினகரன் பேட்டி
சென்னை: “2026 தேர்தலில் தமிழ்நாட்டில் 4 முனை போட்டி ஏற்படும். எங்கள் தலைமையில் கூட்டணி கிடையாது, ஆனால் வெற்றிக் கூட்டணியில் இடம்பெறுவோம். கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க அமமுகவிற்கு பிப்ரவரி மாதம் வரை அவகாசம் உள்ளது" என தஞ்சையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 31ஆம் தேதிக்குள் கூட்டணி முடிவாகிவிடும் என எதிர்பார்த்தோம். ஆனால் தள்ளிப்போகிறது. ஜெயலலிதா பிறந்த நாளுக்கு முன்னதாக கூட்டணியை அறிவிப்போம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சையில் பேட்டி அளித்துள்ளார்.

தஞ்சாவூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "பிப்ரவரி 24 ஆம் தேதி யாருடன் அமமுக கூட்டணி வைக்கும் என்பதை உறுதியாக தெரிவிப்பேன். அமமுக இடம்பெறும் கூட்டணி தான், வரும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும். இதை அதீத நம்பிக்கையில் கூறவில்லை. தற்போதைய தமிழக அரசியல் 4 முனை போட்டி நிலவுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகள் மீண்டும் வந்து இணையும் வாய்ப்புள்ளது என நயினார் நாகேந்திரன் தெரிவித்திருப்பது அவருடைய சொந்த கருத்து. நான் எனது கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் விருப்பத்தை வைத்தே செயல்படுவேன். அமமுக நிலைப்பாடு என்ன என்பதை இன்னும் ஒன்றரை மாதத்தில் புரிந்து கொள்வீர்கள்" என்றார்.
மேலும் பேசிய டிடிவி தினகரன், "கேரள உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணியை காட்டிலும் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் என்பது வேறு. சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள் என்பது வேறு. அதனால் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் சட்டமன்றத் தேர்தலை பாதிக்காது" எனத் தெரிவித்தார்.
மேலும், திருப்பரங்குன்ற விவகாரம் தொடர்பாக பேசிய அவர், "திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதியை மாற்ற வேண்டும் என்று கூறுவது ஏற்புடையது அல்ல. கடவுள், மதம், ஜாதியின் பெயரால் மக்களை பிரிக்கும் செயலில் யாரும் ஈடுபடக் கூடாது என்பது தான் எங்களின் நோக்கம். சகோதரத்துவத்துடன் அண்ணன், தம்பி, தங்கை என ஒரே குடும்பமாக இருக்கும் தமிழக மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தக் கூடாது" என்றார்.
எஸ்ஐஆர் குறித்த கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், "எஸ்ஐஆர் தேவை இல்லை என்று கூறுவது தவறு. பீகாரில் நடந்தது குறித்து எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். சரியான முறையில் வாக்காளர் பட்டியல் தயார் செய்ய வேண்டும் என்பது தான் எங்களின் விருப்பம். சட்டமன்றத் தேர்தலின் போது தேசிய தலைவர்கள் தமிழகத்திற்கு வருவது புதிது இல்லை. இது வழக்கமான ஒன்று தான். அம்மாவின் தொண்டர்கள் ஒரே அணியில் இணைய வேண்டும் என்று தான் கூறினேன். அவர்கள் ஒரே கட்சியில் இணைய வேண்டும் என கூறவில்லை.
ஒரே அணியில் இணைந்தால் தான் இந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியும். இந்த சட்டமன்றத் தேர்தலில் சரியான முடிவை மக்கள் தெரிவிப்பார்கள். நாங்கள் இடம்பெறும் கூட்டணியை தவிர்த்து வேறு எந்த கூட்டணியும் வெற்றி பெற முடியாது. அமமுக வெற்றிக் கூட்டணியில் இணையும். எங்கள் கூட்டணி குறித்து வரும் பிப்ரவரி மாதம் உறுதியாக தெரிவித்து விடுவோம்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications