ஆஹா.. இதென்ன லிஸ்ட்லேயே இல்லையே.. ஸ்டாலின் என்னமோ விவரமாத்தான் இருக்காரு.. அப்ப "இவருக்கு" என்னாச்சு
திமுகவை முந்திக் கொண்டு காங்கிரஸ் போராட்டம் நடத்தி காட்டி உள்ளது
சென்னை: ஆளுநர் ரவி விஷயத்தில் திமுகவே அவ்வளவாக காட்டம் காட்டாத நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சி நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தை நடத்திவிட்டது.. இது குறித்த விஷயம்தான் தற்போது கசிந்து வருகிறது.
திமுக அரசுக்கும் ஆளுநருக்குமான மோதல்கள் அதிகரித்தபடி இருக்கிறது. சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிரான சாட்டைகளை சுழற்றுகிறார் ஸ்டாலின்.
இந்த நிலையில், தமிழக ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார். அழகிரியின் இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர்களின் ஆதரவு கிடைக்கவில்லை.

ஆளுநர் ரவி
மாவட்ட தலைவர்கள், எம்.எல்.ஏ.க்களை கொண்டு நடத்தியிருக்கிறார். இது குறித்து மூத்த தலைவர்கள், "கவர்னருக்கு எதிராக பொதுவெளியில் திமுக எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. ஸ்டாலினே கூட கவர்னருக்கு எதிராக சட்டமன்றத்தில் காட்டமாக பேசுகிறாரே தவிர, பொதுவெளியில் அப்படி நடந்துகொள்வதில்லை.. ஸ்டாலின் நினைத்தால் திமுகவின் இரண்டாம் நிலை தலைவர்களை வைத்து தினமும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியும்.

கவர்னர் ரவி
ஸ்டாலினே களத்தில் இறங்கி ராஜ்பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தலாம். எந்த சட்டச் சிக்கலும் வரப்போவதில்லை. ஆனால், ஸ்டாலின் அதை விரும்பவில்லை. திமுகவும் ஸ்டாலினுமே கவர்னருக்கு எதிராக அறிக்கைக் கொடுத்துவிட்டு அமைதியாக இருக்கும்போது தமிழக காங்கிரஸ் தலைவருக்கு என்னாச்சு? எதற்கு இவ்வளவு உணர்ச்சிவயப்பட வேண்டும்? கவர்னருக்கும் காங்கிரசுக்கும் எந்த கொடுக்கல் வாங்கலும் இல்லாதபோது எதற்கு இவ்வளவு வேகமாக முற்றுகை போராட்டம் நடத்த வேண்டும்?

கிரீன் சிக்னல்
மக்கள் பிரச்சனைக்கு இப்படி வேகம் காட்டியிருக்கிறதா காங்கிரஸ்? இல்லையே. இதன் பின்னணியில் வேறு ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது, ஜூலையில் ராஜ்யசபா எம்.பி. தேர்தல் வரவிருக்கிறது. அதில் ஒரு சீட்டை கைப்பற்ற ப.சிதம்பரம் முயற்சித்தார். க்ரீன் சிக்னல் கிடைக்கவில்லை. இதனையறிந்த கே.எஸ். அழகிரி, திமுகவிடமிருந்து ஒரு சீட்டை தனக்காக வாங்கி விட வேண்டும் என பகீரத முயற்சிகளை எடுத்து வருகிறார். அதில் ஒரு கட்டம் தான் ஸ்டாலினை ஆச்சரியப்படுத்தவும் அவரது கவனத்தை ஈர்க்கவும் கவர்னருக்கு எதிரான இந்த முற்றுகை கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறார்.

சூட்சுமம்
இதுதான் அவரது ஆர்ப்பாட்டத்தின் பின்னணி... அதன் சூட்சமம் தெரிந்ததால்தான் தலைவர்கள் யாரும் ஆதரிக்கவில்லை. அழகிரியின் ஆர்ப்பாட்ட நோக்கத்தை ராகுல்காந்திக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது'' என்கிறார்கள் மூத்த தலைவர்கள்... அதற்கேற்றபடி, ஈவிகேஎஸ் நேற்று பேசும்போது, " ரவியை ஒழிக்க நினைத்தால் அதை கொஞ்சம் சீக்கிரமா செய்ய முடியும்.. ஆனால் மாநிலத்தை மிகசிறப்பாக ஆண்டு கொண்டிருக்கும் ஸ்டாலின் ஆட்சிக்கு கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்பதால் பொறுமையாக இருக்கிறோம்" என்று பேசியிருந்ததும் கவனிக்கத்தக்கது..!












Click it and Unblock the Notifications