"இவரும், அவரும்".. சைலண்ட் ஆக்ஷனில் ஸ்டாலின்.. "திமுக + பாஜக".. உளவுத்துறைக்கு போட்ட உத்தரவு..!
திமுகவும் பாஜகவும் இணக்கமாகி வருவதற்கு சில காரணங்கள் கூறப்படுகின்றன
சென்னை: நாளுக்கு நாள் திமுகவும் - பாஜகவும் நெருக்கமாகி கொண்டிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு எழுந்துள்ள நிலையில், கட்சி மேலிடத்தில் இருந்து முக்கிய உத்தரவு ஒன்று உளவுத்துறைக்கு பிறப்பித்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.
Recommended Video
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 26ம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஜுன் 3ம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவச் சிலை நிறுவப்படும் என்று அறிவித்தார்.
ஒரே வாரத்தில் ’டைவ்’ அடித்த 3 முக்கிய தலைவர்கள்.. இப்படி இருந்தா காங்கிரஸை எப்படி பலப்படுத்துறது?
இதையடுத்து, கருணாநிதியின் நினைவாக ஓமந்தூரார் தோட்டத்தில் அவரது சிலையை நிறுவ திமுக அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளும் துரிதகதியில் நடந்தது.
ஓமந்தூரார் தோட்டம்
தற்போது அந்த பணிகள் நிறைவடைந்த நிலையில், சென்னை அண்ணாசாலையில் ஓமந்தூரார் தோட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வெண்கல சிலையை, வருகின்ற 28ம் தேதி திறந்து வைக்கப்படுகிறது.. இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்துவைக்க உள்ளார்... அதேசமயம், இந்த விழாவில், வெங்கைய்யா நாயுடு கலந்து கொள்வது அதைவிட உற்றுநோக்கப்பட்டு வருகிறது..
பிளான்
விரைவில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்க போகிறது.. வெங்கய்யா நாயுடுவையே குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக தலைமை அறிவிக்கவும் ஒரு பிளான் உள்ளதாக தெரிகிறது.. ஒருவேளை அவர் அறிவிக்கப்பட்டால், திமுகவும் ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் உள்ளதாம். பாஜகவுக்கு 9,194 வாக்குகள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது...
ஆர்எஸ்எஸ் சித்தாந்தம்
இதனால் சில மாநில கட்சிகளின் ஆதரவை பெற பாஜக முயற்சித்து வருகிறது... இந்த சூழலில்தான் வருகிற 28-ந்தேதி கருணாநிதி சிலையை திறக்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அழைக்கப்படவும், அவரும் அதற்கு ஒப்புக் கொண்டுள்ளார்... இந்த சமயத்தில்தான், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சென்னை வந்திருந்தார்.. ஆனால், அவரை முதல்வரோ மற்ற அமைச்சர்களோ வரவேற்கவில்லை..
கருணாநிதி
எனினும், ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தில் ஆரம்பத்தில் இருந்தே மிகுந்த பிடிப்பு கொண்டவரை, கருணாநிதி சிலை திறப்புக்கு அழைத்ததும், அந்த அழைப்பை அவர் உடனே ஏற்றுக் கொண்டதும் திமுக - பாஜக இடையேயான நெருக்கத்தை காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் சலசலக்கப்பட்டு வருகிறது.. இறுதிவரை ஆர்எஸ்எஸ்ஸை கடுமையாக எதிர்த்த கருணாநிதி சிலையை, திறந்து வைக்க இவரைதான் அழைக்க வேண்டுமா? சிலையை இப்போதே திறக்க வேண்டுமா? வேறு தலைவர்களே இல்லையா? என்ற கேள்விகளும் எழுந்தபடியே உள்ளன.
கருப்புக் கொடி
பிரதமர் மோடி, வெங்கய்யா நாயுடு தமிழகம் வரும் சூழலில், இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. டெல்லியில் இருந்து, முன்னணி தலைவர்கள் வரும்போதெல்லாம் கருப்பு கொடி காட்டி வந்த திமுக, தற்போது ஆதரவு நிலைப்பாட்டை எடுக்காவிட்டாலும், எதிர்ப்பை காட்டிவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளதாம்.
சங்கடம்
மேலும், இந்த முறை பிரதமர் வருகையில், எந்தவிதமான சங்கடத்தையும் தந்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.. அதுமட்டுமல்ல, கருப்பு சட்டைகள் அணிந்து யாரும் விழாவுக்கு வந்துவிடக்கூடாது என்றும் ரகசிய உத்தரவு உளவுத்துறைக்கு போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.. பட்டினப்பிரவேசம் விவகாரமாகட்டும், ஒன்றியம் என்ற வார்த்தை பிரயோகமாகட்டும், சர்ச்சையாக கிளம்பிய விவகாரங்களில் திமுக தன்னுடைய நிலைப்பாட்டை நடுநிலைமையுடன் மாற்றி கொண்டதும் கூர்மையாக கவனிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும், "கொள்கை வேறு, ஆட்சி வேறு" என்ற விளக்கத்தை தந்து வருகிறார்கள்..
நெருக்கடிகள்
மேலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமானால், மத்திய அரசிடமிருந்துதான் நிதியை பெற்றாக வேண்டிய நெருக்கடிக்கும் கட்டாயத்துக்கும் திமுக அரசு ஆளாகி இருப்பதையும் யோசிக்க வேண்டி உள்ளது.. எப்படி பார்த்தாலும், தமிழக நலனை கருதி, தமிழக மக்களின் நலனையும் யோசித்து, பாஜகவை, ஒரேடியாக பகைத்து கொள்ள முடியாத சூழல் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.. அதனால்தான் பிரதமர் மற்றும் வெங்கையா நாயுடு வருகைகளில் தனிக்கவனம் செலுத்தி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன... பாஜக தலைவர்களின் வருகை திமுகவில் எத்தகையை தாக்கத்தை, மாற்றத்தை, வளர்ச்சியை ஏற்படுத்த போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!