ரெடியாகும் பிடிஆர்.. வரிந்து கட்டும் ஸ்டாலின்.. "3 அறிவிப்புகள்" வெளியாகிறதா? அதிமுக, பாஜக ஆர்வம்
பட்ஜெட் தொடரில் பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வரக்கூடும்
சென்னை: விரைவில் பட்ஜெட் கூட உள்ள நிலையில், முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவாரா என்ற ஆர்வம் எகிறி வருகிறது.
நேற்று திமுக அரசுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது.. அப்போது எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது லிஸ்ட் போட்டு திமுகவை குறை சொல்லி இருந்தார்:
"திமுக பெரும்பான்மை இடங்களிலே வெற்றி பெற்று நான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், முதல் வேலை நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று ஸ்டாலின் சொல்லியிருந்தார்.

பேட்டி
அதனை தேர்தல் அறிக்கையிலும் சொன்னார்கள்.. ஆனால், தேர்தல் முடிந்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன் ரத்து செய்யப்படும், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும், பெட்ரோல் - டீசல் விலை குறைக்கப்படும், 5 சவரனுக்கு குறைவாக வங்கியில் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் சொன்ன அறிவிப்புகள் எதையுமே இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை" என்று கூறியிருந்தார்.

குற்றச்சாட்டுகள்
ஆட்சி ஆரம்பித்து 75 நாட்களில் அனைத்தையும் பூர்த்தி செய்ய முடியாது என்பது அனைவருக்குமே தெரியும்.. திமுக மீது எதையாவது இப்படி கிளப்ப வேண்டும் என்று அதிமுக இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் திமுக அரசுக்கு 2 விதமான நெருக்கடிகள் கூடி வருகிறது என்பதை மறுக்க முடியாது. ஆகஸ்ட் 13-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பமாகும் என தெரிகிறது.. இதற்கான அறிவிப்பும் விரைவில் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இந்த கூட்டத்தொடரில் ஸ்டாலின் மிக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டாக வேண்டிய கட்டாயத்திலும் உள்ளார்.

அதிமுக
அதிமுகவின் வாயை அடைப்பது முதல் காரணமாக இருந்தாலும், எடப்பாடி கேட்டதையே இன்னும் கொஞ்ச நாளில் மக்களே கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.. அதேபோல அடுத்தடுத்த தேர்தல்கள் வர உள்ள நிலையில், ஓட்டு கேட்டு தமிழக மக்களை நேருக்கு நேர் சந்தித்தாக வேண்டிய நிர்ப்பந்தமும் திமுகவுக்கு உள்ளது.. எனவே, இந்த பட்ஜெட் தொடரிலேயே மிக மிக முக்கியமான அறிவிப்புகளை வெளியிட திமுக தயாராகி வருவதாகவே தெரிகிறது.

பாஜக
ஒருவேளை அறிவிப்புகளை வெளியிட்டாலும் அதையும் விமர்சிக்க அதிமுக, பாஜக மும்முரமாகி கொண்டிருக்கிறதாம்.. எதையாவது வைத்து பிரச்சனைகளை கிளப்புவும் அவை பிஸியாகி கொண்டிருக்கின்றன.. அதேசமயம், ஆளுநர் உரை மீதான பட்ஜெட் வெறும் டிரைலர்தான் என்று ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்ததால், மிக எதிர்பார்ப்புடன் மக்கள் மெயின் பிக்சருக்காக காத்துள்ளனர்.

நகைகடன் அறிவிப்பு
அநேகமாக 3 அறிவிப்புகள் முக்கியத்துவம் பெறும் என்று தெரிகிறது.. பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குவது தொடர்பான அறிவிப்பு, 5 பவுன் நகை கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு, மாணவர்கள் கல்விக்கடன் போன்றவைகளில் அறிவிப்புகள் வெளியாகலாம் என்கிறார்கள்.. இந்த 3 அறிவிப்புகள் தொடர்பான துறை அமைச்சர்கள் பிடிஆர், ஐ பெரியசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி போன்றோர் இதற்கான பணிகளையும் கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video

பிடிஆர்
ஸ்டாலின் முதல்வராகிய பின்னர் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதாலும், நிதியமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதாலும் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கப்படுகிறது.. அதேசமயம், கடனில் சிக்கி உள்ள தமிழகத்தை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எப்படி தூக்கி நிறுத்துவார்? கடனை எப்படி சமாளிக்க போகிறார்? மாநில அரசின் வரி வருவாயை பெருக்கும் திட்டங்களுக்கு எந்த மாதிரியான முக்கியத்துவம் கொடுப்பார்? உற்பத்தியில் எந்த அளவுக்கு அதிகம் கவனம் செலுத்துவார்? போன்ற சந்தேகங்களும் எழுகின்றன.

நம்பிக்கை
எனினும், மத்திய அரசிடம் ஜிஎஸ்டி வரியை பிடிஆர் நிச்சயம் கேட்டு வாங்கிவிடுவார் என்ற நம்பிக்கையும் ஒட்டிக் கொண்டுள்ளது.. நடக்க போவது "ஸ்டாலினின் பட்ஜெட்" என்று ஏற்கனவே பிடிஆர் தெரிவித்திருந்த நிலையில், பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சமூக நலத்திட்டங்கள் போன்றவை மனதில் வைத்தே பட்ஜெட்கள் வெளியாகக்கூடும் என்று தெரிகிறது.. அப்படி அறிவிப்புகள் வெளியாகிவிட்டால், திமுக சொன்னதை செய்துவிட்டால், அதிமுக அடுத்து என்ன செய்யும்? என்பதுதான் ஒரே சந்தேகமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications