"37" சீட் சரி.. டார்ச் லைட்டும் கொடுத்தாச்சு.. இப்போ இப்படி ஒரு சிக்கலா.. சமகவுக்கு வந்த சோதனை!
சென்னை: பிரச்சாரம் செய்ய ஆள் இல்லாமல் தவித்து போய் கிடக்கிறதாம் ஒரு கட்சி.. அது சரத்தின் சமகதான்.. இதனால், மநீம கூட்டணி போதுமான வாக்கு வங்கியை எட்டுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சரத்குமாரை கூட்டணி வைக்க அதிமுக உட்பட யாருமே ஆர்வம் காட்டவில்லை.. இறுதியில் கமலை போய் சந்தித்து கூட்டணி வைத்தார் சமத்துவ மக்கள் கட்சி தலைவர்.
40 சீட் தரப்பட்டு, பிறகு 37 என்று சமவுக்கு கன்பார்ம் ஆனது.. இதில், நெல்லை, விருதுநகர், ராஜபாளையம், ராதாபுரம், நாங்குநேரி உள்ளிட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.. இதில், விருதுநகர், ராஜபாளையம் தொகுதிகளில்கூட, மய்யத்துக்கு பெரும்பாலான ஓட்டு வங்கி இருக்கிறது.
கூட்டணி
எனினும், இந்த தொகுதிகள் சமகவுக்கு ஒதுக்கியதால், மய்யத்தினர் அப்செட்டில் உள்ளதாகவும் சொல்கிறார்கள்.. இதனால், சமவுக்கு தொகுதிகளில் கூட்டணியின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றும் தெரிகிறது.. ஒருவேளை சமகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் மய்யமே நேரிடியாக போட்டியிட்டிருந்தால், நிச்சயம் அது கமலுக்கு பலமாக இருந்திருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.
கமல்
இப்போது இன்னொரு சிக்கலும் எழுந்துள்ளது.. இந்த முறை கமல் முதன்முறையாக போட்டியிடுவதால், வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்... இப்போது வரை கோவை தெற்கு தொகுதி நிலவரம் கொஞ்சம் சிக்கலாகவே உள்ளது.. அதனால் கமல் தொகுதிக்குள் இருந்தால்தான் நிலைமையை சமாளித்து வெற்றியை பெற முடியும் சூழல் உள்ளது.
பிரச்சார பீரங்கி
அதேசமயம், பெரிதாக எந்தவித பிரச்சார பீரங்கிகளும் மய்யத்துக்கு இல்லாத சூழலில் கமல்தான் தன்னுடைய வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் நிலைமையில் உள்ளார்.. இப்படி மய்யத்துக்கு சில சிக்கல்கள் இருக்கும்போது, கூட்டணி கட்சியான சமகவை, இழுத்து கொண்டு போக முடியவில்லை என தெரிகிறது.. அந்த கட்சியில் சரத்குமாரும் ராதிகாரும் இருந்தாலும்கூட, 37 பேருக்கும் பிரச்சாரம் செய்தாலும்கூட, வெற்றிவாய்ப்பை எட்ட வேண்டுமானால் கமலின் பிரச்சாரமும் சேர்ந்தால்தான் எடுபடும் என்பதை மறுக்க முடியாது.
மநீம - சமக
இந்த சிக்கலில்தான் மநீம - சமக கூட்டணி உள்ளதாக தெரிகிறது.. இப்படித்தான் இன்னொரு உறுதிப்படுத்தப்படாத தகவலும் கசிந்து வருகிறது.. விருதுநகர் தொகுதியில் சமக வேட்பாளர் மணிமாறனை ஆதரித்து ராதிகா பிரச்சாரம் செய்தார்.. ஆனால், இந்த தொகுதிக்கு கமல்தான் வருவதாக இருந்ததாம்.. அதற்கு காரணம், மணிமாறனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய, மய்யத்திலும் சரி, சமகவில் இருந்தும் சரி, யாரும் போகவில்லை என்று தெரிகிறது.. அதனால், தனக்குதானே தொகுதியில் வாக்கு சேகரித்து வந்துள்ளார் மணிமாறன்!
விருதுநகர்
இதை கேள்விப்பட்ட கமல், விருதுநகருக்கு சென்று மணிமாறனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய யோசித்துள்ளார்.. ஆனால் அதற்குள், "அந்த தொகுதியில் பிரச்சாரம் செய்ய வேண்டாம்.. முழுக்க மய்ய உறுப்பினர்கள்தான் அங்கு இருக்கிறார்கள்.. சமகவுக்கு தொகுதியை விட்டுத்தந்த கடுப்பில் எல்லாரும் இருக்கிறார்கள்".. என்று கமலிடம் சிலர் எடுத்து சொல்லி உள்ளதாக தெரிகிறது.
மணிமாறன்
இதையடுத்துதான், ராதிகா டக்கென அங்கு சென்று மணிமாறனுக்கு பிரச்சாரம் செய்துள்ளதாக சொல்கிறார்கள்.. இப்படி ஒவ்வொரு நாளும் இந்த கூட்டணி தொடர்பாக, புது புது தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.. 37 சீட் வாங்கி கொண்டால் மட்டும் போதுமா? பிரச்சாரம் செய்தால்தானே, கூட்டணி கவுரவத்தை ஓரளவு காப்பாற்ற முடியும்? போற போக்கை பார்த்தால் கமல் தொகுதி தவிர, மற்ற இடங்களில் கொஞ்சம் கஷ்டம்தான்" என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.