70 வயதாகியதை என்னால் நம்ப முடியவில்லை.. லட்சியவாதிகளுக்கு என்றும் வயதாவதில்லை.. மு.க.ஸ்டாலின்!
திமுக நிரந்தரமாக ஆட்சிப் பொறுப்பில் வைத்திருப்பேன் என்று மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை: திமுக நிரந்தரமாக ஆட்சிப் பொறுப்பில் வைத்த்கிருப்பேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதேபோல், மு.க.ஸ்டாலின் என்பது நான் மட்டும் அல்ல. ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களும் அந்த பெயருக்குள் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி சென்னையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

மு.க.ஸ்டாலின் பேச்சு
இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நான் என்றும் உங்களில் ஒருவன். மு.க.ஸ்டாலின் என்பது நான் மட்டும் அல்ல. ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களும் அந்த பெயருக்குள் உள்ளனர். எதையெல்லாம் சாதிக்க முடியாது என்று கூறினார்களோ, அதையெல்லாம் சாதிக்க முடியும் என்று கூறியவர் அண்ணா.

70 வயது
நான் வீட்டுக்கு விளக்காகவும், நாட்டுக்கு தொண்டனாகவும், எப்போதும் மக்களுக்காக கவலைப்படக் கூடிய தலைவனாக இருப்பேன். மக்களின் கவலைகளை தீர்க்கும் தலைவனாக இருப்பேன் என்று உறுதி பூண்டுள்ளேன். அண்ணாவை போல் பேச தெரியாது. கருணாநிதியை போல் எழுதத் தெரியாது. ஆனால் அவர்களை போல் உழைக்கத் தெரியும். எனக்கு 70 வயதாகியதை என்னாலேயே நம்ப முடியவில்லை.

லட்சியவாதிகள்
வயது என்பது மனதை பொறுத்தது. எல்லாம் நேற்று நடந்தது போல் தோன்றும். ஆனால் என்னுடைய பயணம் நெடிய பயணம். மார்ச் 1 என்று கூறும் போது, என் வயதே நினைவுக்கு வரும். எனக்கு 70 வயது என்று சொல்லும் போது சிலர் ஆச்சரியப்படுகிறார்கள். லட்சியத்திற்காக உழைப்பவர்களுக்கு வயது என்றும் ஏறுவது இல்லை.

நிரந்தர ஆட்சிப் பொறுப்பு
திமுகவை நிரந்தரமாக ஆட்சிப் பொறுப்பில் வைத்திருப்பேன். அது நான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல. திமுகவின் கொள்கையை பரப்பவும், கொள்கையை நிறைவேற்றவுமே ஆட்சி. இந்த இரண்டின் வழிடாக தமிழ்நாட்டை தலைநிமிர வைப்போம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications