ஹலோ.. மய்யமா.. யார்னா இருக்கீங்களா.. ஏதாவது பேசுங்க.. பயம்மா கீது!
சென்னை: புதுப்பேட்டை படத்தில் தனுஷை ஜெயிலில் போட்டிருப்பாங்க.. அப்ப அவர் சத்தமா பேசுவார்.. ஹலோ யார்னா இருக்கீங்களா.. ஏதாவது பேசுங்க.. பயம்மா கீது அப்படிம்பார்.. காரணம் ஜெயில் அவ்வளவு சைலன்ட்டா இருக்கும். அப்படித்தான் இப்போது இருக்கிறது மக்கள் நீதி மய்யம் கட்சியும்.
60 வயதானால் ’சீனியர் சிட்டிசன்’ என்ற தகுதியை பயன்படுத்தி பலரும் முதியோர் பென்ஷனுக்கு விண்ணப்பிக்கிறது வழக்கம். ஆனால் நம்ம ஊர் நடிகர்களோ 60ஐ கடந்த நிலையில் மேக்கப் குலையாமல் அரசியலில் புதிய வேஷம் கட்ட வர்றாங்க. ஆனா அரசியல் ஆட்டம் அத்தனை லேசுபட்டதில்லை என்பது இப்போது அவர்களுக்கு மெல்ல மெல்ல புரிய ஆரம்பித்திருப்பதைப் போல தெரிகிறது.
70 வயதை எட்டிப்பிடிக்கும் ரஜினி, ’வரும்.. ஆனா வராது’ என இன்னமும் படம் ஓட்டிக் கொண்டிருக்கிறார். இந்த விஷயத்தில் ரஜினியை விட கமல் கொஞ்சம் பெட்டர்ணு சொல்லலாம். 65 வயதான கமல், ரஜினி போல பாவ்லா காட்டாமல் கடந்த வருஷம் பிப்ரவரி மாதம் மதுரையில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை நடத்தி கட்சியைத் தொடங்கிட்டாரு.
மய்யம்
மக்கள் நீதி மய்யம்... அப்படிங்கற கட்சி பெயர், கொடி எல்லாமே வித்தியாசமாகத்தான் இருந்திச்சி. தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் கமல் டூர் அடிச்சாரு. அவரைப் பார்க்க மக்கள் திரண்டாங்க. ஆனால் எளிதில் புரியாத கமலின் வழக்கமான பேச்சு மக்களை பெரிதாக ஈர்த்த மாதிரி தெரியலை.
''கமல் என்றைக்கு கமா -வை தூக்கிட்டு அங்கங்கே புல்ஸ்டாப் போட்டு பேசுவரோ அன்றைக்குத்தான் அவரது பேச்சு மக்கள் கிட்ட ரீச் ஆகும். இல்லைண்ணா கோனார் உரை மாதிரி கமல் பேச்சை புரிந்துகொள்ள தனியா ஒரு கைடு போடணும்'' என நெட்டிசன்கள் பிக்பாஸை வறுத்தெடுத்தாங்க. சரி கமலோட அரசியல் எப்படி போய்கிட்டிருக்குது, எம்.பி தேர்தலுக்குப் பிறகு வேறு எந்தத் தேர்தலிலும் போட்டியிடாமல் அவர் பம்முவது ஏன்! இதை விசாரிக்க போனா எக்கச்சக்கக்க மேட்டர் கிடைக்குது.
சூப்பர் வாக்குகள்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கமலோட மக்கள் நீதி மய்யம், எல்லா தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியலைண்ணாலும், 3 புள்ளி 72 சதவீதம் வாக்குகளை வாங்கினாங்க. நகர்ப்புறங்களில் ஓரளவிற்கு வாக்குகள் கிடைச்சிது. ஆனால் கிராமப்புறங்களில் அவ்வளவா ஆதரவு கிடைக்கல. ‘' போட்டியிட்ட முதல் தேர்தலில் இவ்வளவு வாக்குகள் வாங்கியிருப்பது குறிப்பிட வேண்டிய விஷயம்தான். தொடர்ந்து அரசியல் தளத்தில் கமல் தீவிரமா இயங்கினால் மேலும் மக்களின் ஆதரவைப் பெற முடியும்''-ணு பலரும் சொன்னாங்க. ஆனால் கமல் அப்படி செய்யவில்லை. அரசியலுக்கு ஒரு சின்ன இடைவெளி விட்டுவிட்டு பிக்பாஸ், இந்தியன் -2 ண்ணு அந்த பக்கம் பிசியாகிட்டாரு. இதனால 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், வேலூர் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தல் எதிலும் கமல் கட்சி போட்டியிடவில்லை. விக்கிரவாண்டி, நான்குனேரி சட்டமன்ற இடைத் தேர்தலையும் அவர் புறக்கணிச்சிட்டாரு.
இடைத் தேர்தல் புறக்கணிப்பு
‘'இடைத் தேர்தல் என்பது ஆட்சியில் இருந்தவர்களும், இப்போது ஆள்பவர்களும் போடும் ஊழல் நாடகம். அதனால மக்கள் நீதி மய்யம் இதில் பங்கேற்காது''-ண்ணு காரணம் சொன்னாரு கமல். இடைத் தேர்தல் நாடகம்-ணா, அப்ப பொதுத் தேர்தல் மெகா சீரியல்தானே! அதில் மட்டும் கலந்துக்கறது எப்படி சரியாகும்! என்கிற கேள்விக்கு கமலிடம் விடை இருக்கிறதாண்னு தெரியல. ஆனால் கமலுக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரிச்சப்போ, அவர் இப்படி பின்வாங்குவதற்கான காரணங்கள் தெரிய வந்திச்சி.
பலரும் ஆக்டிவாக இல்லை
சினிமாவில் சமீபகாலமா பெரியளவில் ஹிட் எதையும் கொடுக்காத கமலுக்கு, பிக்பாஸ் நிகழ்ச்சிதான் கொஞ்சத்திற்குக் கொஞ்சம் கை கொடுத்திட்டு வருதாம். கையில் போதுமான நிதியாதாரம் இல்லையாம். இந்த சூழ்நிலையில் அடுத்தடுத்து இடைத் தேர்தல்களில் போட்டியிட்டு இருப்பதையும் விரயம் ஆக்க வேண்டாம்-ணு கமல் நினைக்கிறாராம். அதோட, இடைத் தேர்தல்களில் குறைந்தளவு வாக்குகள் வாங்கினால் அது பொதுத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும்... அப்படிங்கறதும் அவரோட எண்ணமா இருக்குதாம். கமல் கட்சி தொடங்கினப்போ ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள்-ணு உயர்ந்த பொறுப்புக்களில் இருந்த பலரும் அதில் சேர்ந்தாங்க. இதில பாதிக்கும் மேற்பட்டவர்கள் இப்ப ஆக்டிவ்வா இல்லையாம்.
தனித்த முடிவு
‘'ஆரம்பத்தில் ஒரு சின்ன விஷயமானாலும் எல்லோரிடமும் கலந்து பேசித்தான் முடிவு செய்வேன்ணு கமல் சொன்னாரு. ஆனால் அப்படி எதுவும் நடக்கல. தேர்தலில் போட்டியிடுவதா, வேண்டாமா... இந்த மாதிரியான முக்கியமான விஷயங்களில் கூட அவர் யாரையும் கன்சல்ட் பண்றதில்லை. நிஜமான பிக்பாஸா அவரே தன்னிச்சையா முடிவெடுத்து அறிவிக்கிறாரு. கட்சின்னு ஆரம்பிச்ச பிறகு மக்கள் பிரச்சனைகளில் அன்றாடம் கவனம் செலுத்தணுமா இல்லையா! ஆனால் தனக்கு தோணுறப்போ ஏதாவது சொல்றாரு. மற்ற நேரங்களில் மியூட் ஆயிடறாரு. அடுத்த நிலையிருக்கும் நிர்வாகிகளையும் எதையும் சொல்ல அனுமதிப்பதில்லை''-ன்னு கமலுக்கு எதிரா குற்றப்பத்திரிகை வாசிக்கும் அவரது கட்சி நிர்வாகிகள் சிலர் ‘ஷூட்டிங் பிரேக்கில் பாலிடிக்ஸ் பண்றாரு''-ண்னு கிண்டல் அடிக்கிறாங்க.
இந்தியன் டூ அப்செட்
இதுபோதாதென இந்தியன் 2 ஷூட்டிங்கில் நடந்த விபத்தும், அதில் 3 பேர் பலியான விவகாரமும் கமலை ரொம்பவே அப்செப்ட் ஆக்கிவிட்டது என்கிறார்கள். இதைத் தொடர்ந்து போலீஸ் விசாரணை என அலைய ஆரம்பித்திருப்பது வேறு அவரை இன்னும் கடுப்பாக்கிவிட்டதாம். அதன் விளைவுதான் நேற்று மக்கள் நீதி மைய்யம் வெளியிட்ட கண்டன அறிக்கை. அதேநேரம் கமலுக்கு நெருக்கமான சிலர் வேறு மாதிரி சொல்றாங்க; ‘'சத்தமில்லாமல் சில முக்கிய நடவடிக்கைகளை கமல் எடுத்திட்டு வர்றாரு. தமிழகத்தின் கள நிலவரம் பற்றி தனியார் ஏஜென்சி மூலம் விரிவான ரிப்போர்ட் எடுத்திருக்காரு. இந்த ரிப்போர்ட்டின் அடிப்படையில் கட்சியின் நிர்வாக அமைப்பில் பல மாற்றங்களை செஞ்சிட்டு வர்றாரு. 2021 சட்டமன்றத் தேர்தல்தான் கமலோட இலக்கு. அதை வெற்றிகரமாக சந்திக்க தயாராகிட்டு வர்றோம்'' என்கிறார்கள்.
கத்திரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆகணும்.. காத்திருக்கோம் கமல் சார்!
-கௌதம்