துளிர்த்த இலை.. தென்னரசுக்கு ஆதரவாக களத்தில் இறங்கும் ஓபிஎஸ்? ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் கொடுக்குறாங்களே!
இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஓபிஎஸ் பிரச்சாரம் செய்வார் எனக் கூறப்படுகிறது.
சென்னை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவாரா எனும் கேள்வி எழுந்துள்ளது. ஓபிஎஸ் அணியினர், ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் கொடுத்து வருவதைப் பார்த்தால், ஈபிஎஸ் அணி வேட்பாளரை ஆதரித்து ஓபிஎஸ் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றே தெரிகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், தனது அணி சார்பாக செந்தில் முருகனை களமிறக்கிய ஓபிஎஸ், வேட்பு மனுவை வாபஸ் பெறச் செய்துள்ளார்.
இதையடுத்து, ஈபிஎஸ் அணியின் தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். இரட்டை இலை சின்னத்தின் வெற்றிக்காக உழைப்பேன் எனக் கூறி வரும் ஓபிஎஸ், இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தென்னரசுவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பார் எனக் கருதப்படுகிறது.

பொதுக்குழு படிவங்கள்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெற்று வேட்பாளரை தேர்ந்தெடுக்குமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்த வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவாக கையெழுத்திட்ட படிவங்களை இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நேற்று சமர்ப்பித்தார்.

இரட்டை இலை சின்னம்
அவைத்தலைவர் கொடுத்த ஆவணங்களை சரிபார்த்த தேர்தல் ஆணையம், அதிமுக வேட்பாளருக்கான ஏ மற்றும் பி படிவங்களில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கையெழுத்திடலாம் என உத்தரவிட்டது. இதுதொடர்பாக ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதமும் அனுப்பியது. இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படுகிறது.

ஓபிஎஸ் முடிவு
இதற்கிடையே, ஓபிஎஸ் அணி சார்பாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த செந்தில் முருகன் தனது வேட்பு மனுவை நேற்று வாபஸ் பெற்றுள்ளார். ஓபிஎஸ் அணியின் இந்த முடிவு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பலம் கொடுத்துள்ளது. தனது அணியின் வேட்பாளரை வாபஸ் பெறச் செய்திருப்பதன் மூலம், அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இரட்டை இலைக்கு வாக்கு கேட்போம்
அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஓ.பன்னீர்செல்வத்தை பிரச்சாரத்திற்கு அழைப்பது குறித்து தலைமை தான் முடிவு செய்யும் என்று அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கூறியுள்ளார். அதேசமயம், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், இரட்டை இலை முடக்கப்படக்கூடாது என்பதற்காகவும், அதிமுக வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் தான் செந்தில் முருகன் போட்டியில் இருந்து வாபஸ் பெற்றுக்கொண்டார். ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்காக பாடுபடுவோம். தென்னரசுவுக்கு வாக்கு கேட்க மாட்டோம், இரட்டை இலை சின்னத்திற்கு தான் வாக்கு கேட்போம் எனத் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் பிரச்சாரம்?
இன்று ஓ.பன்னீர்செல்வம் விமானம் மூலம் மதுரைக்கு சென்று அங்கிருந்து தேனிக்குச் செல்கிறார். அதற்காக கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் இருந்து புறப்பட்டார். அப்போது செய்தியாளர்கள், ஓ.பன்னீர்செல்வத்திடம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பரப்பரைக்கு செல்வீர்களா எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பிற்கு செல்வதற்கு முன்பு முறையாக அறிவிப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.

ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்
ஏற்கனவே, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஓபிஎஸ். எடப்பாடி பழனிசாமி தரப்பு போட்டியிட ரெடியானதுமே, தங்கள் அணியும் போட்டியிடுவதாக அறிவித்தார். பின்னர், ஈபிஎஸ் அணி வேட்பாளரை அறிவித்த சில மணி நேரங்களில் தனது அணியின் வேட்பாளரை அறிவித்தார் ஓபிஎஸ். அப்போதும் கூட, பாஜக போட்டியிட விரும்பினால், தங்கள் வேட்பாளரை திரும்பப் பெறுவோம் எனத் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்தை மீண்டும் நாட
பின்னர், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு முன்னதாகவே, வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார் ஓபிஎஸ் அணியின் செந்தில் முருகன். அதன்பிறகு, உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இரட்டை இலை சின்னத்தில் ஒற்றுமையாக களமிறங்க ரெடி என அறிவித்திருந்தார். பின்னர், அவைத்தலைவர் ஒருதலை பட்சமாக நடந்து கொள்வதாக ஓபிஎஸ் தரப்பு குற்றம்சாட்டியது. தேர்தல் ஆணையத்தை மீண்டும் அணுகப் போவதாகவும் ஓபிஸ் தரப்பு கூறியது.

களத்தில் ஓபிஎஸ்
ஆனால், திடீரென ஓபிஎஸ் அணி வேட்பாளர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். இப்போது மீண்டும், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்போம், தென்னரவுக்கு வாக்கு கேட்க மாட்டோம் என ஈபிஎஸ் அணி நிர்வாகி குப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வமும், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பிற்கு செல்வதற்கு முன்பு முறையாக அறிவிப்பேன் எனக் கூறியுள்ளார். இதன் மூலம், அடுத்த ட்விஸ்ட் அரங்கேறக் கூடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஓபிஎஸ் விரைவில் ஈரோட்டில் இரட்டை இலைக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications